மோடி சவூதி மன்னரின் காலை தொட்டு வணங்கினாரா ?
பரவிய செய்தி
சவூதியின் மன்னர் சல்மானின் காலை தொட்டு வணங்கிய இந்திய பிரதமர் மோடி.
மதிப்பீடு
சுருக்கம்
பிரதமர் மோடி பாஜகவின் மூத்தத் தலைவர் அத்வானியின் காலை தொட்டு வணங்கிய படத்தை சவூதி மன்னரை வணங்கியதாக மார்ஃபிங் செய்துள்ளனர்.
விளக்கம்
இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி போபாலில் நடைபெற்ற பாஜகவின் பேரணி ஒன்றில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் எல்.கே.அத்வானிக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது காலை தொட்டு வணங்கினார்.
மோடியின் இத்தகைய படத்தை பயன்படுத்தி, சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்அஸிஸ் அல் சவூத் அவர்களின் காலை தொட்டு வணங்கியது போன்று மார்ஃபிங் செய்யப்பட்ட படங்கள் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2016-ம் ஆண்டு பாஜகவின் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த அரவிந்த் குப்தா, சவூதியின் மன்னர் சல்மான் காலை பிரதமர் மோடி தொட்டு வணங்கியது போன்று மார்ஃபிங் செய்யப்பட்ட படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பத்திரிகையாளர் மீதும், அவர் பணியாற்றி வரும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் மீதும் டெல்லி காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ மகிஷ் கிரி, இந்தியப் பிரதமர் மோடியைப் பற்றி சமூக வலைத்தளங்களில் தவறான பரவி வரும் படங்கள் பதிவிட்ட நபரின் மீது ஒளிபரப்பு அமைப்பின் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு ட்விட்டர் கருத்தின் மூலம் தனது கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில், மோடியை தவறாக சித்தரிக்கும் படத்தை வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி பத்திரிகையாளர் ராஜ்யவர்த்தன் ராதோர் தவறுக்கு மன்னிப்பு கேட்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
ராஜ்யவர்த்தன் ராதோர் தன் ட்விட்டர் பக்கத்தில், “ பிரதமர் மோடி குறித்து மார்ஃபிங் செய்யப்பட்ட தவறான படத்தை முகநூல் பக்கத்தில் வெளியிட்டதுக்கு உண்மையாக வருத்தப்படுகிறேன். இதை சரிபார்க்கப்பட்ட பின்னரே பதிவிட்டேன். எனினும், என்னால் எதிர்பாராமல் ஏற்பட்ட தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.
பிரதமர் மோடியை தவறாக சித்தரிக்கும் மார்ஃபிங் செய்யப்பட்ட படங்கள் 2016-ல் தொடங்கி தற்போது வரை தொடர்ந்து பரவிய வண்ணமே உள்ளது.