வைரஸ் தாக்கிய கோழியால் விசித்திரமான நோய் உண்டாகுமா ?
பரவிய செய்தி
வைரசால் பாதிக்கப்பட்ட கோழியை உண்டதால் ஒருவருக்கு விசித்திரமான நோய் வந்துள்ளதை படத்தில் காணலாம்.
மதிப்பீடு
சுருக்கம்
சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் படத்தை விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டவர் எனக் கூறி வதந்தியை பரவியுள்ளனர்.
விளக்கம்
வைரசால் பாதிக்கப்பட்ட கோழியை சாப்பிட்ட ஒருவருக்கு விசித்திரமான நோய் பரவியதாகவும், அனைவரையும் எச்சரிக்கும் நோக்கத்தில் வைரசால் பாதிக்கப்பட்டவரின் படத்தை பகிர்வதாகக் கூறி வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.
எனினும், அந்த செய்திகள் அனைத்தும் பொய்களே. ஆம், வைரசால் பாதிக்கப்பட்டவர் என்றுக் கூறி பரவிய படங்கள் அனைத்தும் தவறானவையே.
சின்னமையால் பாதிக்கப்பட்ட ஒருவரின் படத்தை பயன்படுத்தி வைரசால் பாதிக்கப்பட்ட கோழியை சாப்பிட்டதால் ஏற்பட்ட புதுவிதமான நோய் என்று புரளியை கிளப்பியுள்ளனர். உலகில் புதிய நோய்களின் வரவுகள் அதிகரித்துக் கொண்டே செல்வதால், இதுபோன்ற தவறான செய்திகளை மக்கள் எளிதாக நம்பிவிடுகின்றனர். ஆகையால், புரளிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
சிக்கன் பாக்ஸ் என்ற அழைக்கப்படும் “சின்னம்மை” கோடை வெயில் காலங்களில் பரவும் தொற்று நோய் ஆகும். சின்னம்மை நோயானது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நேரடியாகவோ, இருமல், தும்மல் மற்றும் உடலில் காணப்படும் கொப்புளத்தின் நீரை தொடுவதன் மூலம் பரவுகிறது. சின்னம்மையின் தாக்கத்தின் போது தீராத காய்ச்சல், உடலில் கொப்புளங்கள், அரிப்புகள் ஏற்படும்.
பெரும்பாலும் கோடை வெயில் காலங்களில் மட்டுமே இவ்வித நோய் தாக்கும். இந்தியாவை விட்டு பெரியம்மையை முழுவதுமாக ஒழிக்கப்பட்டாலும், ரூபெல்லா மற்றும் தட்டமை நோய்களுக்கு இன்றும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
முன்பெல்லாம் 10 அல்லது 12 வயதுடையவர்களே சின்னமையால் அதிகம் பாதிப்படைந்தனர். ஆனால் இன்றைய நவீன உலகத்தில் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் பாதிப்படைகிறார்கள். இந்த படத்தில் உள்ள நபருக்கு 32 வயதில் சின்னம்மை வந்துள்ளது. எனவே கோடை காலங்களில் குழந்தைகளை மட்டுமல்ல நம்மையும் எச்சரிக்கையாக பார்த்துக்கொள்வது நல்லது.