142 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்தது சரியே என எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக திமுகவினர் பரப்பும் போலி நியூஸ் கார்டு !
பரவிய செய்தி
142 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்தது சரியே! மக்களவையில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டை மத்திய அரசே சரி செய்துவிடும். இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதம் நடத்தக் கோரியது ஜனநாயகத்திற்கு விரோதமானது. நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக 142 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம்! – எடப்பாடி பழனிசாமி
மதிப்பீடு
விளக்கம்
கடந்த டிசம்பர் 13 அன்று நாடாளுமன்ற மக்களவையில் இருவர் அத்துமீறி நுழைந்ததை அடுத்து, நாடாளுமன்ற பாதுகாப்பில் விதிமீறல் நடந்துள்ளதாவும், இதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்றும் கூறி எதிர்கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் அனைவரும் அடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து, நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக 142 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் 142 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்தது சரியே என எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகக் கூறி ‘ஜூனியர் விகடன்’ நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் திமுகவினரால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
நாங்க ரெண்டு பேரும் விவாகரத்து தான் பண்ணிருக்கோம்…. மத்தபடி நாங்க ரெண்டுபேரும் புருஷன் பொண்டாட்டி தான்…
மானம்கெட்ட பொழப்பு டா… pic.twitter.com/xIl1tRHQFb— Saran (@Saran69041939) December 20, 2023
X post link | Archive link உண்மை என்ன ?
பரவி வரும் நியூஸ் கார்டு குறித்து தேடுகையில், ஜூனியர் விகடன் “142 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்தது சரியே” என எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக எந்தவொரு நியூஸ் கார்டையும் வெளியிடவில்லை.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு கழகத்தின் சார்பில் உதவிக்கரம் நீட்டுவோம்!
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு விரைந்து உணவுப் பொருட்கள், மருத்துவ உதவி போன்ற நிவாரண உதவிகளை போர்க்கால அடிப்படையில்… pic.twitter.com/n5K4yMSpEB
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) December 18, 2023
இதுகுறித்து பழனிச்சாமி ஏதாவது கூறியுள்ளாரா என அவரது சமூக ஊடக பக்கங்களில் தேடியதில், இறுதியாக கடந்த டிசம்பர் 18 அன்று நிவாரண உதவிகளை போர்க்கால அடிப்படையில் வழங்குவது குறித்து தான் அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பதை காண முடிந்தது.
இதே போன்று ஜூனியர் விகடனின் சமூக ஊடக பக்கங்களிலும் தேடி பார்த்தோம். இறுதியாக கடந்த டிசம்பர் 19 அன்று, வெள்ள பாதிப்பு குறித்து எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டி குறித்து செய்தியே வெளியிட்டுள்ளனர். இது தவிர சஸ்பெண்ட் செய்யப்பட்ட 142 எம்பிக்கள் குறித்து பழனிச்சாமி கூறியதாக அவர்கள் எந்தவொரு நியூஸ் கார்டையும் வெளியிடவில்லை.
இதன் மூலம் ஜூனியர் விகடனின் மாதிரி கார்டை, எடிட் செய்து தற்போது சிலர் தவறாக பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகிறது.
மேலும் படிக்க: நிவாரண நிதி அளித்தாலும் பாஜகவிற்கா வாக்களிப்பார்கள் என ஒன்றிய அமைச்சர் கூறியதாகப் பரவும் பொய் செய்தி !
முடிவு:
நம் தேடலில், ‘142 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்தது சரியே’ என எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக பரவி வரும் ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது.