நேரு, அம்பேத்கர் பங்கேற்ற சுதந்திர இந்தியாவின் முதல் இஃப்தார் விருந்தின் புகைப்படமா ?
பரவிய செய்தி
1947 சுதந்திர இந்தியாவின் முதல் இப்தார் நிகழ்ச்சி !
மதிப்பீடு
விளக்கம்
” சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் ஒருங்கிணைத்த சுதந்திர இந்தியாவின் முதல் இஃப்தார் விருந்தில் ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர் மற்றும் ராஜேந்திர பிரசாத் கலந்து கொண்ட நிகழ்வு ” என இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” 1948 ஜூன் மாதம் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக ராஜகோபாலச்சாரியார் பதவி ஏற்றதற்கு சர்தார் வல்லபாய் படேல் அளித்த விருந்தில் நேரு, அம்பேத்கர், மௌலானா ஆசாத் மற்றும் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டதாக ” அலாமி புகைப்பட விற்பனை தளத்தில் இதே புகைப்படத்துடன் வெளியாகி இருக்கிறது.
zoroastrians.net எனும் இணையதளத்தில் வெளியான புகைப்படங்களின் தொகுப்பில், சர்தார் படேல் அளித்த விருந்தில் நேருவின் அமைச்சர்கள் கலந்து கொண்டு உணவு அருந்திய போது மற்றொரு கோணத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், நேரு, அம்பேத்கர் கலந்து கொண்ட சுதந்திர இந்தியாவின் முதல் இப்தார் நிகழ்ச்சி எனப் பரவும் புகைப்படம் தவறானது. 1948ல் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக ராஜகோபாலச்சாரியார் பதவி ஏற்றதற்கு சர்தார் வல்லபாய் படேல் அளித்த விருந்தில் நேருவின் அமைச்சர்கள் கலந்து கொண்ட புகைப்படம் என அறிய முடிகிறது.