1966ல் நாடாளுமன்றம் முன்பாக 5,000 சாதுக்களை இந்திரா காந்தி அரசு சுட்டுக் கொன்றதாகப் பரவும் வதந்தி !
பரவிய செய்தி
பாரத மக்களுக்கு மறைக்கப்பட்ட உண்மை சம்பவம். “மொமனா பேகம்” என்ற இந்திரா பிரதமராக இருந்தபோது கிட்டத்தட்ட 5,000 இந்து சாதுக்களை டில்லி பாராளுமன்றம் முன் சுட்டுக் கொன்றவள் ..பாருங்கள்
மதிப்பீடு
விளக்கம்
1966ம் ஆண்டு பசுவதைக்கு எதிராக நாடாளுமன்றம் முன்பாக கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் மீது இந்திரா காந்தி அரசு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5,000 சாதுக்கள் கொல்லப்பட்டதாக 2 நிமிட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
ஒரு சாது 1966 ல் காங்கிரசுக்கு இட்ட சாபம் பலித்து வருகிறது!
இன்று பசுவதை தடை செய்ய கோரி பாராளுமன்றத்தின் முன் திரண்ட 400 சாதுக்கள் இந்திரா காந்தியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இமாலயத்தில் தவம் இருக்கும் ஒரு சந்நியாசி ஜன்மம் எடுத்து வந்து இந்த பாராளு மன்றத்தில் அமர்வார்,✍️👇2
— 🏹🇮🇳🚩சகடை🚩🇮🇱⚔️ (@srjk22) October 18, 2022
இதேபோல், கடந்த ஆண்டு பரப்பப்பட்ட ஃபார்வர்டு தகவலில் 400 சாதுக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
உண்மை என்ன ?
இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து பசு பாதுகாப்பு மற்றும் பசுவதைக்கு தடை விதிக்க வேண்டும் என இந்து அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து 1966 நவம்பர் 7ம் தேதி சர்வாதலிய கோரக்சா மகாபியன் சமிதி அமைப்பு டெல்லியில் சத்தியாக்கிரகத்தை அறிவித்தது. அப்போதைய ஜனசங்கத்தின் ஆதரவால் இப்போராட்டத்தில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
அன்றைய தினத்தில், சுவாமி கர்பத்ரி மற்றும் பாரதிய ஜன சங்கத்தின் மக்களவை எம்பி சுவாமி ராமேஸ்வரானந்த் உள்ளிட்டோரின் பேச்சுகளைத் தொடர்ந்து பசுவதை தடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட சாதுக்கள் உள்பட போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றனர். இதன் விளைவாக போலீசாருடன் ஏற்பட்ட மோதலால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
1966ம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தின் 50வது ஆண்டினை நினைவு கூறும் வகையில் ‘தி இந்து’ இணையதளத்தில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், கலவரக்காரர்களால் காங்கிரஸ் தலைவர் காமராஜர் வீடு தாக்கப்பட்டபோது, நல்வாய்ப்பாக அவர் உயிர் தப்பினார் என்றும், சுதந்திர இந்தியாவில் நாடாளுமன்றத்தின் மீதான முதல் தாக்குதல் இதுவே என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1966ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி வெளியான தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில், டெல்லியில் பசுவதைக்கு எதிரான போராட்டக்காரர்களால் நாடாளுமன்றத்திற்கு முன்பாக ஏற்பட்ட வன்முறையில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த வன்முறையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர், 200 பேர் காயமடைந்துள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நவம்பர் 8ம் தேதி வெளியான தி ஹிந்து நாளிதழில், ” பசுவதைக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்து வன்முறை செயல்களில் ஈடுபட்டனர். நிறுத்தப்பட்டிருந்த கார்களை எரித்தனர் மற்றும் மத்திய அரசு கட்டிடங்களுக்கு தீ வைத்தனர். நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கும்பலை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதிகாரப்பூர்வ தகவலின்படி, வன்முறை சம்பவங்களில் 7 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் உள்துறை அமைச்சர் திரு.ஜி.எல்.நந்தா மக்களவையில் அறிக்கை அளித்தார் ” என்றுள்ளது.
நவம்பர் 9ம் தேதி ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தி ஏஜ் எனும் நாளிதழில் வெளியான செய்தியில், நாடாளுமன்றம் முன்பாக நடந்த வன்முறை தொடர்பாக போலீசார் 750 பேரை கைது செய்துள்ளதாகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
1966ம் ஆண்டு நவம்பர் 1 முதல் 15ம் தேதி வரை நடைபெற்ற நாடாளுமன்றத்தின் மக்களவை விவாதங்கள் குறித்த ஆவணத்தில், உள்துறை இணை அமைச்சர் ஜெய்சுக் லால் ஹாதி அளித்த பதிலில், வன்முறையின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 41 பேர் துப்பாக்கி குண்டால் காயமடைந்தனர், 70 பேர் பிற காரணங்களால் காயமடைந்தனர் என்றுள்ளது. மேலும், காவலர் ஒருவர் உள்பட 8 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், அதில் 3 பேர் அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : காமராஜரைக் கொலை செய்ய முயற்சி செய்த பசு பாதுகாவலர்கள்.. ஆதாரம் இதோ !
இதே பசு பாதுகாவலர்களின் வன்முறையில் காமராஜரைக் கொலை செய்ய முயன்றது தொடர்பான ஆதாரங்களுடன் கட்டுரை வெளியிட்டு இருக்கிறோம்.
மேலும் படிக்க : இந்திரா காந்தி ஹிஜாப் அணிந்து இருப்பதாக வதந்தி பரப்பும் பாஜகவினர் !
மேலும் படிக்க : தன் கணவர் முஸ்லீம் என்பதால் இந்திரா காந்தி மதம் மாறினாரா ?
இதேபோல், இந்திரா காந்தி முஸ்லீமாக மதம் மாறியவர் என பலமுறை வதந்திகள் பரப்பப்பட்டு உள்ளன. அதன் உண்மைத்தன்மை குறித்தும் கட்டுரைகளை வெளியிட்டு உள்ளோம்.
முடிவு :
நம் தேடலில், 1966ம் ஆண்டு இந்திரா காந்தி ஆட்சியின் போது நாடாளுமன்றத்திற்கு முன்பாக பசு பாதுகாவலர்களால் நிகழ்ந்த வன்முறையில் போலீசார் 5,000 சாதுக்களை சுட்டுக் கொன்றதாகப் பரப்பப்படும் தகவல் பொய்யானவை.
1966ல் வெளியான செய்திகள் மற்றும் நாடாளுமன்றத்தில் அரசு அளித்த பதிலின்படி, வன்முறையில் காவலர் ஒருவர் உள்பட 8 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பதை அறிய முடிகிறது.