சிவ நாமமே உணவு, 200 ஆண்டுகளாக இமயமலையில் வாழும் துறவியா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
இமயமலையில் முற்றும் துறந்த முனிவர் சிவ நாமத்தை மட்டுமே உணவாக கொண்டு 200 ஆண்டுகளாக உயிர் வாழ்ந்து வருவதாகவும், அவரைக் காண சென்ற குழுவில் இருந்த குழந்தையுடன் அவர் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதாகவும் Behindwoods யூடியூப் சேனல் வீடியோ ஒன்றை வெளியிட்டது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோவில் இடம்பெற்ற துறவி பார்ப்பதற்கு புத்த மத துறவி போல் காட்சி அளிக்கிறார். அந்த வீடியோவில் @auyary13 எனும் டிக்டாக் பக்கத்தின் ஐடி இடம்பெற்று இருக்கிறது. இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ளது.
ஆகையால், அந்த ஐடி வைத்து தேடிப் பார்க்கையில், தாய்லாந்து நாட்டில் 169 வயதான புத்தமத துறவி வாழ்ந்து வருவதாக இதே வீடியோ தாய்லாந்து, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
மேற்கொண்டு தேடுகையில், Atul chakma எனும் யூடியூப் சேனலில் துறவியின் வைரல் டிக்டாக் வீடியோ குறித்த பதிவில், ” 109 ஆண்டுகள் பழமையான துறவியான லுவாங் தா தனது கொள்ளுப் பேரக்குழந்தைகளை ஆசிர்வதித்த வீடியோவை @auyary13 தனது டிக்டாக் மூலம் வெளியிட்டது.
1913 ஆகஸ்ட் 12-ம் தேதி லுவாங் தா பிறந்தார். அவருக்கு 2022 ஆகஸ்டில் 109 வயது நிறைவடையும். அவர் 77 ஆண்டுகள் புத்த துறவியாக உள்ளார். லுவாங் தா தாய்லாந்தின் வடக்கு மாவட்டமான உடோன் தானியில் உள்ள பான் தாட் பகுதியில் பிறந்தார் ” எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
வைரல் செய்யப்படும் வீடியோவை வெளியிட்ட தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த @auyary13 டிக்டாக் பக்கத்தில், வைரல் வீடியோ மட்டுமின்றி துறவியை வைத்து எடுக்கப்பட்ட பல வீடியோக்கள் வெளியாகி இருப்பதாக சில இணையதள செய்திகளில் இடம்பெற்றதை பார்க்க முடிந்தது.