2014-22ல் எரிபொருள் மூலம் ஒன்றிய அரசு வசூலித்த மொத்த வருமானம் 26 லட்சம் கோடி !

பரவிய செய்தி
1.3 லட்சம் கோடி OIL BOND கதையை சொல்லியே, மோடியின் எட்டாண்டு கால அரசு, எரிபொருள் வரியாக வசூலித்துள்ள தொகை 26 லட்சத்தி 51ஆயிரத்தி 919 கோடி ரூபாய்!! விளங்குமா?
மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவில் தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக, பெட்ரோல், டீசல் மூலம் அரசுகள் வசூலிக்கும் வரி பற்றிய காரசார பேச்சுக்களே சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, எரிபொருள் விலை உயர்விற்கு காங்கிரஸ் ஆட்சியில் வழங்கிய எண்ணெய் கடன் பத்திரங்களை ஓர் காரணமாக ஆளும் பாஜக அரசு கூறி வருகிறது.
In the 8 years of Modi Government, the central government collected Rs 26,51,919 crore as fuel taxes
There are approximately 26 crore families in India
That means from every family the central government has collected, on average, Rs 1,00,000 as fuel tax!
— P. Chidambaram (@PChidambaram_IN) April 3, 2022
இதன் தொடர்ச்சியாக, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ” கடந்த 8 ஆண்டுகளாக மோடி அரசாங்கத்தில், எரிபொருள் வரியாக ரூ.26,51,919 கோடியை வசூலித்து உள்ளது ” எனப் பதிவிட்டு இருந்தார்.
இதையடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீனிவாசன், ஆண்டு வாரியாக எரிபொருள் மூலம் ஒன்றிய அரசு வசூலித்த வரித் தொகையை பதிவிட்டு இருந்தார். இதன் உண்மைத்தன்மை குறித்து கேட்கப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
இந்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் “Petroleum Planing & Analysis Cell ” எனும் இணையதளத்தில் 2014 முதல 2022 வரை பெட்ரோலிய பொருட்களின் மூலம் ஒவ்வொரு நிதியாண்டில் ஒன்றிய அரசிற்கு கிடைக்கும் வருவாய் தொகை குறிப்பிடப்பட்டுள்ளது.
1.1.2022 அன்று வெளியிட்ட தரவுகளின் படி, 2014-15-ல் 1,72,065 கோடி, 2015-16-ல் 2,54,297 கோடி, 2016-17-ல் 3,35,175 கோடி, 2017-18ல் 3,36,163 கோடி, 2018-19ல் 3,48,041 கோடி, 2019-20ல் 3,34,315 கோடி, 2020-21ல் 4,55,069 கோடி, 2021-22ன் முதல் பாதியில் 2,16,794 கோடியும் வசூலாகி உள்ளது. 2021-22 ஆண்டிற்கு தோராயமாக 4,16,794 கோடி வசூல் என குறிப்பிட்டு மொத்தம் ரூ.26,51,919 கோடி வரி வருவாய் வசூலித்து உள்ளதாக கூறியுள்ளனர்.
ஆனால், இது முழுக்க வரி எனக் கூற இயலாது. இதில், பெட்ரோலிய பொருட்களின் வருவாயில் Dividend to government/income tax etc உடைய பங்கும் இருக்கிறது. இதை பெட்ரோலிய பொருட்களின் மூலம் கிடைத்த மொத்த வருமானம் எனக் குறிப்பிடலாம்.
” எண்ணெய் துறையில் ஒன்றிய அரசின் வரி வசூல் 2020-21-ல் 36 சதவீதம் உயர்ந்துள்ளது. 2019-20-ல் ரூ3.3 லட்சம் கோடியாக இருந்த வசூல் 2020-21-ல் 4.5 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது என நாடாளுமன்றத்தில் அரசு தரவுகள் சமர்பிக்கப்பட்டதாக ” டிசம்பர் 2021 டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில் வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், கடந்த 8 ஆண்டுகளாக மோடி அரசாங்கம் எரிபொருள் மூலம் ரூ.26,51,919 கோடியை வசூலித்து உள்ளது என குறிப்பிட்ட தொகை இந்திய அரசின் பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இணையத்தில் வெளியான தரவுகள். ஆனால், அந்த தொகையானது வரி மட்டுமின்றி ஈவுத்தொகை மற்றும் லாபம் உள்ளிட்டவையின் தொகையையும் சேர்த்தது என்பதையும் அறிய முடிகிறது.
ஆதாரம்
centres-financial-year-21-oil-tax-mop-up-rises-36-on-excise-hikes
https://www.ppac.gov.in/content/149_1_PricesPetroleum.aspx