This article is from May 27, 2020

2020 உயிர் பிழைப்பதற்கான ஆண்டு மட்டுமே என ஜாக் மா கூறினாரா ?

பரவிய செய்தி

தொழிற்துறையில் இருப்பவர்களைப் பொறுத்தவரை 2020 என்பது உயிர் பிழைத்து இருப்பதற்கான ஆண்டு மட்டுமே. உங்கள் கனவுகள், திட்டங்களைப் பற்றிய பேச்சே வேண்டாம். நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் என்பதை மட்டும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் உயிருடன் இருந்தாலே ஏற்கெனவே லாபம் ஈட்டிவிட்டீர்கள் என்றுதான் அர்த்தம். – ஜாக் மா, அலிபாபாவின் நிறுவனர்.

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

கோவிட்-19 தொற்று உலகளாவிய பிரச்சனையாக மாறி மக்களின் வாழ்வாதாரத்தையே ஆட்டம் காண வைத்துள்ளது. தொழில்கள் அனைத்தும் பாதிப்பை கண்டுள்ளன. சீனாவின் மிகப்பெரிய தொழிலதிபரான ஜாக் மா 2020-ம் ஆண்டு உயிர் பிழைத்து வாழ்வதற்கான ஆண்டு மட்டுமே தவிர உங்களின் திட்டங்கள் குறித்தோ, கனவு குறித்தோ பேச வேண்டாம் என கூறியதாக ஓர் செய்தி ஆங்கிலம், தமிழ் என பல மொழிகளில் பரவி வருகிறது.

அலிபாபா குழுமத்தின் தலைவர் ஜாக் மா கூறியதாக பரவும் தகவலின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்க்குமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது. ஆகையால், அத்தகவல் குறித்து தேடிப் பார்த்தோம்.

உண்மை என்ன ?

சீன தொழிலதிபர் ஜாக் மா கூறியதாக பரவும் கருத்து ஜக் மா உடைய அதிகாரப்பூர்வ தளங்களில் எங்கும் வெளியாகவில்லை. அது குறித்த அதிகாரப்பூர்வ செய்தியோ, தகவல் கூட வெளியாகவில்லை. ஆனால், இதே தகவல் பல நாடுகளில் பரவி இருந்தது என்பதை அறிய முடிந்தது.

இந்தோனேசியா நாட்டிலும் இப்படியொரு தகவல் பரவ ” TempFakta Cek Team ” எனும் தளத்திற்கு இந்தோனேசியாவின் அலிபாபா குரூப் உடைய கார்ப்பரேட் தொடர்பு இயக்குனர் தியான் சபிட்ரி அளித்த தகவலில், ” 2020 ஆம் ஆண்டு உயிர்பிழைத்து வாழ்வதற்கான ஆண்டு மட்டுமே எனும் தகவல் ஜாக் மாவிடம் இருந்து வரவில்லை. ஜக் மா இப்படியொரு தகவலை அளித்ததாக எந்த தகவலும் இல்லை ” எனத் தெரிவித்து உள்ளார்.

2020 மே 16-ம் தேதி ட்விட்டர் பக்கத்தில் சேர்ந்த ஜாக் மா, அமெரிக்கவிற்கு ஷாங்காய் இல் இருந்து அனுப்பப்பட்ட மாஸ்க் மற்றும் கொரோனா வைரஸ் கிட் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

Twitter link | archive link

தொழிலதிபர்கள் கூறியதாக நம்பிக்கையூட்டும் கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவுவது முதல் முறை அல்ல. இதற்கு முன்பாக, இந்திய தொழிலதிபர் ரத்தன் டாடா 2020ம் ஆண்டு உயிர் வாழ்வதற்கான ஆண்டு மட்டுமே, லாபத்தையோ இழப்பையோ குறித்து கவலைப்பட அல்ல எனக் கூறியதாக தவறான தகவல் பரவுவதாக தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

மேலும் படிக்க : பொருளாதாரம் குறித்து ரத்தன் டாடாவின் கருத்து என போலியான போஸ்ட் !

அதேபோல், இந்திய பொருளாதாரம் தொடர்பாக ரத்தன் டாடா ஓர் நம்பிக்கையூட்டும் கருத்தை கூறியதாக பொய்யான தகவல் பரவி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோலவே, ஜாக் மா பெயரிலும் பொய்யான கருத்துக்கள் பகிரப்படுகின்றன.

Please complete the required fields.




Back to top button
loader