சென்னை வெள்ள பாதிப்பை நெல்லை இளைஞர் நையாண்டியாகப் பேசியதாகப் பாஜகவினர் பரப்பும் எடிட் செய்த வீடியோ!
பரவிய செய்தி
நெல்லை குசும்பு என்பது இதானோ? முழுவதும் கேளுங்கள். சன்நியூஸ் தமிழ் காரனே இது தனக்கு ஆதரவான நியூஸ் என நம்பி பதிவேற்றம் செய்து விட்டனரோ?
மதிப்பீடு
விளக்கம்
மிக்ஜாம் புயல் காரணமாக, கடந்த டிசம்பர் 3 அன்று தொடங்கிய பெரும் மழை, கடந்த டிசம்பர் 4 இரவு வரை சென்னையைத் தாக்கி பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தாம்பரத்திற்கு அருகில் உள்ள திருமலை நகரில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது குறித்து சன் நியூஸ் ஒளிபரப்பிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பாஜகவினரால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவில், ஊடகவியலாளர் “கடந்த ஆண்டு அதிகாரிகள் பார்த்து சென்றது பற்றி சொல்லுங்கள்?” என்று கேட்கிறார். அதற்கு பதிலளித்து பேசியுள்ள ஒருவர், “சாலைகளில் இங்கு ஆறு போல ஓடுவது பொதுமக்களின் கோரிக்கையை அடுத்தே ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. ஐம்பது ஆண்டுகளாக திராவிட கட்சிகள் இங்கு ஆட்சி செய்து கொண்டு வருகிறார்கள். பல ஏரி, குளங்களையும் இவர்கள் அழித்துள்ளனர். இதனால் தான் இவை ஆறு போல சாலைகளில் ஓடுகிறது.” என்று நக்கலாக பேசுவதையும் பார்க்க முடிகிறது.
எனவே இந்த வீடியோவை, “சன்நியூஸ் தமிழ் காரனே இது தனக்கு ஆதரவான நியூஸ் என நம்பி பதிவேற்றம் செய்து விட்டனரோ?” என்று குறிப்பிட்டு பாஜகவைச் சேர்ந்த எஸ்.ஆர்.சேகர் மற்றும் ஹெச். ராஜா உட்பட பலரும் தங்களுடைய சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
கெட்ட பையன் சார் இவன்
சன் டிவி காரனை வச்சு செய்த
இளைஞன்…. pic.twitter.com/qHrnLJJEQs— Annamalai Army (@Sriniva73783247) December 6, 2023
கெட்ட பையன் சார் இவன்
சன் டிவி காரனை வச்சு செய்த
இளைஞன்….
pic.twitter.com/4e2Pfts4So— M.Raghava krishna.B,E. (@MRagavakrishna) December 7, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இதே வீடியோ கடந்த 2021-ல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.
அடேய் சன் டிவி, ஊர் பெயரக் கேட்டுட்டு மைக்க நீட்டுங்கடா, தூத்துக்குடி-திருநெல்வேலிக் கார பயலுக கிட்ட கேட்டா இப்படித்தான் பதில் வரும்.@sunnewstamil @News18TamilNadu@polimernews @WINNEWS_IN @maalaimalar @bbctamil @news7tamil @dinathanthi @ThamaraiTVTamil @annamalai_k #செருப்படி! pic.twitter.com/PvxdS9Avwu
— DINESHKUMAR (@kkdkumar) November 15, 2021
கடந்த 2021 நவம்பர் 11 அன்று பரவி வரும் வீடியோவின் முழுப்பகுதியை சன் நியூஸ் ஊடகம் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் “கொட்டித்தீர்த்த கனமழை; ஊருக்குள் புகுந்த செம்பாக்கம் ஏரியின் உபரி நீர் | திருமலை நகர் | தாம்பரம்” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் சரியாக 2:32 நிமிடத்தில் பரவி வரும் வீடியோவுடன் இது பொருந்துவதையும் காண முடிகிறது.
ஆனால், அந்த ஊடகவியலார் “கடந்த ஆண்டு அதிகாரிகள் பார்த்து சென்றும் இங்கு தீர்வு கிடைக்கவில்லையா?” என்று கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியின் அதிகாரிகள் குறித்து கேள்வி எழுப்புவதையும், அதற்கு பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் “அரசியல்வாதிகள் வந்து பார்த்து செல்கின்றனர். ஆனால் எங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. திருமலை நகரில் வருடம் வருடம் இதே நிலைமையே நீடிக்கிறது. இதற்கு காரணம் செம்பாக்கம் ஏரி நிரம்பும் போது அறுவது அடி அகலத்திற்கு தண்ணீர் திறந்து விடுகிறார்கள். அதனால் தான் இங்கு இவ்வாறு ஏற்படுகிறது. இதற்கு ஒரே தீர்வு கால்வாயை அகலப்படுத்துவது தான்” என்று கூறுவதையும் காண முடிகிறது.
இதன் மூலம் பரவி வரும் வீடியோவில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், திருநெல்வேலி வட்டார மொழியில், “திராவிட கட்சிகள் தான் பல ஏரி, குளங்களையும் அழித்துள்ளனர்” என்பது குறித்து நக்கலாக பேசுவது போன்று இடம்பெற்றுள்ள குரல், எடிட் செய்யப்பட்டவை என்பதை உறுதிபடுத்த முடிகிறது.
இதே வீடியோ கடந்த 2021-ல் Sharechat பக்கங்களில் பரவி வந்துள்ளதையும் காண முடிகிறது. இதிலும் பரவி வரும் வீடியோவில் உள்ளவாறு எதுவும் பேசப்படவில்லை.
மேலும் படிக்க: மிக்ஜாம் புயலில் நிலநடுக்கம் எனப் பரவும் மியான்மரில் மோச்சா புயலில் எடுத்த வீடியோ!
மேலும் படிக்க: 2023ல் ‘மிதக்கும் சென்னை’ எனப் பரவும் பழைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் !
முடிவு:
நம் தேடலில், மிக்ஜாம் புயல் குறித்து சன் நியூஸ் ஊடகம் பாதிக்கப்பட்ட மக்களிடம் அரசு அதிகாரிகள் குறித்து பேட்டி காண்பதாக பரவும் வீடியோ, கடந்த 2021-ல் செம்பாக்கம் ஏரியின் உபரி நீர் ஊருக்குள் புகுந்த போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதையும், இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள குரல் எடிட் செய்யப்பட்டது என்பதையும் உறுதிபடுத்த முடிகிறது.