மாடுகளை வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்துவதாக தவறாகப் பரவும் பழைய வீடியோ !
பரவிய செய்தி
மாடுகளை வைத்து போராட்டம்..
மதிப்பீடு
விளக்கம்
டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் நிலையில், தற்போது விவசாயிகள் மாடுகளை வைத்து போராட்டம் செய்வதாகக் கூறி, 27 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் அந்த வீடியோவில், நூற்றுக்கணக்கான மாடுகள் சாலையில் வரிசையாக வருவது போன்றும், முன் வரிசையில் சிலர் கம்புகளுடன் மாடுகளுக்கு பாதுகாப்பாக நடந்து வருவது போன்றும் உள்ளது.
மாடுகளை வைத்து போராட்டம்
மாட்டின் மீது கண்ணீர் புகை குண்டு வீசுங்கடா இப்ப pic.twitter.com/rlMFsRryoM— தமிழ்❤️ (@ASHOK25539881) February 22, 2024
எங்களை கொன்றால்தான் விவசாயிகளின் பிரச்சனை தீரும் என ஒன்றிய அரசு நினைக்குமானால்
அதையும் செய்து பார்க்கட்டும் என விவசாயிகள் ஆவேசமாக கால்நடைகளோடு டில்லியை நோக்கி… pic.twitter.com/VjucWGdsc2
— velu (@velu_ramavel) February 21, 2024
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ கடந்த 2022-ல் இருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.
அந்தப் பதிவில், “நிஹாங் பாபா பாலா சிங் அவர்கள், “கயான் வாலா பாபா” என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இவர் 6000க்கும் மேற்பட்ட தெரு மாடுகளை பராமரித்து வந்தார். இவர் நிஹாங் சிங்கின் ‘தர்னா தள’ பிரிவைச் சேர்ந்தவர். பாபா ஜி 2018 இல் காலமானார், ஆனால் அவரது பிரிவைச் சேர்ந்த நிஹாங்காக்கள் இன்னும் 6000க்கும் மேற்பட்ட பசுக்களை அமிர்தசரஸ் அருகே உள்ள பாபா பகாலா சாஹிப்பில் கவனித்து வருகின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது.
Nihang Baba Pala Singh ji , fondly known as “Gayian Wala Baba”. Looked after more then 6000 stray Cows. He belonged to Tarna Dal sect of Nihang Singh. Baba ji passed away in 2018 but Nihangs of his Sect are still looking after the 6000+ Cows at Baba Bakala Sahib near Amritsar. pic.twitter.com/m9nzYdibfz
— Maj Rajpreet Singh Aulakh (@rajpreetaulakh) April 23, 2022
இது குறித்து தேடியதில், “Indian Express” கடந்த 2018-ல் “பஞ்சாப்: மந்தையை விட்டு வெளியேறிய 6000 கால்நடைகளுக்காகவே வாழ்ந்தவர்” என்ற தலைப்பில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், பஞ்சாபில் கயான்-வாலா பாபா என்று அழைக்கப்பட்ட பாபா பாலா சிங், தான் பாதுகாத்து வந்த 6,000 கால்நடைகளை தனியாக விட்டுவிட்டு, தன்னுடைய 50 வது வயதில் காலமாகிவிட்டார். 6,000 கால்நடைகளில் பெரும்பாலனவை பசுக்கள் மற்றும் காளைகளே. தெரு விலங்குகளுக்காக ஒரு சிறிய மருத்துவமனையையும் நடத்தி வந்துள்ளார். பாபா பாலா விட்டுச் சென்ற இந்த மந்தையின் பொறுப்பை யார் எடுப்பது என்பது இன்னும் ‘தர்ணா தளம்’ முடிவு செய்யவில்லை என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் மூலம் பரவி வரும் வீடியோ, பஞ்சாபில் கயான்-வாலா பாபா என்று அழைக்கப்பட்ட பாபா பாலா சிங் என்பவர் மூலம் கண்காணிக்கப்பட்டு வந்த மாடுகளை, அவருடைய சீடர்கள் சாலைகளின் வழியே அழைத்து சென்ற போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறிய முடிகிறது. இதனை விவசாயிகள் போராட்டம் என்று கூறி பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க: விவசாயிகள் போராட்டத்தில் கோயில்களை தாக்குவதாக தவறாகப் பரவும் 2022ல் நடந்த பஞ்சாப் கலவர வீடியோ !
முடிவு:
நம் தேடலில், மாடுகளை வைத்து விவசாயிகள் போராட்டம் செய்வதாகப் பரவும் தகவல்கள் தவறானவை என்பதையும், இந்த வீடியோ கடந்த 2022ல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது என்பதையும் அறிய முடிகிறது.