300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகானின் உடலா ?
பரவிய செய்தி
வள்ளியூர் கோவிலில் மண் தோண்டிய போது முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு ஜீவ சமாதி அடைந்த மகான் யோக நிலையில் அமர்ந்து காட்சியளித்துள்ளார்.
மதிப்பீடு
சுருக்கம்
மங்கோலியா நாட்டில் தவநிலையில் இறந்த புத்த துறவியின் உடல் கண்டுபிடிப்பு. துறவின் உடல் எத்தனை ஆண்டுகள் பழமையானவை என்பது ஆய்வுகளின் மூலமே தெரியவரும்.
விளக்கம்
300 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவ சமாதி அடைந்த சித்தரின் உடலானது, வள்ளியூரில் மண் தோண்டும் போது யோக நிலையில் கிடைத்துள்ளதாகச் சில செய்திகள் சமூக வலைதளங்களில் காணப்படுகின்றன.
2015 ஆம் ஆண்டு மங்கோலியா நாட்டில் தியான நிலையில் ஜீவ சமாதி அடைந்த புத்த துறவியின் உடலானது ( மம்மி ) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தியான நிலையில் சமாதியாகிய புத்த துறவியின் உடலானது ஒருவரால் கள்ளச் சந்தையில் விற்க முயன்ற போது அவனைப் போலீசார் கைது செய்ததாகவும், அவனுக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் பெரும் தொகை அபராதமாக விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அந்நாட்டின் ஊடகங்களிலும், செய்திதாள்களிலும் செய்திகள் வெளியாகின.
மீட்கப்பட்ட உடல் மங்கோலியா தடயவியல் ஆய்வு மையத்தில் வைக்கப்பட்டது. புத்த துறவியின் உடலானது தாமரை வடிவில் அமர்ந்து தியான நிலையில் உள்ளது. மேலும், தோல்கள் அரிக்கப்படாமல் சுருங்கிய நிலையில் உள்ளது. முடி, நகம் மற்றும் துணி என அனைத்தும் முழுவதுமாக உள்ளன.
இது குறித்து தீபெத்திய புத்த மதத் தலைவரான தலாய்லாமாவின் மருத்துவர் பார்ரி கெர்வின் கூறுகையில், தாமரை வடிவ தியான நிலையில் உயிர் துறந்த துறவியின் உடல் கிடைத்துள்ள தகவல் அறிந்தேன். திபெத்தில் உள்ள புத்த துறவிகளிடமும் இதுபோன்ற தியான நிலையில்ஜீவ சமாதி அடையும் வழக்கம் உள்ளது. ஆனால், இந்த துறவியின் உடல் அரிக்கப்படாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. இத்துறவியின் தாமரை வடிவ தியான நிலைக்கு “ துக்டம் ” என்று பெயர். இவ்வாறு நீண்ட காலம் தியான நிலையை மேற்கொள்ளும் துறவிகள் இறப்பதில்லை. இந்த தியான நிலையின் உச்சத்தில் அவர்கள் புத்தராக மாறிவிடுவார்கள் என்பது துறவிகளின் நம்பிக்கை ஆகும் என்று கூறியுள்ளார்.
மீட்கப்பட்ட துறவி உடல் பற்றிய எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. எனினும், 1852-1927 ஆண்டுகளில் வாழ்ந்த லாமா டாஷி-டோர்ஷோ இடிகிலோவ் அவர்களின் ஆசிரியராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இவ்வாறு மங்கோலியா நாட்டில் பல நுற்றாண்டுகளுக்கு முன்பே இறந்த துறவின் உடலை இந்தியாவில் கிடைத்ததாக கதையை மாற்றி வதந்தியைப் பரப்ப எண்ணியுள்ளனர்.