300 வருடத்திற்கு முன் ஜீவசமாதி அடைந்த சித்தர் உயிருடன் இருப்பதாகப் பரவும் வதந்தி
பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
வள்ளலார் வாழ்ந்த வடலூர் பகுதியில் கோவில் கட்டுவதற்காக குழி தோண்டியபொழுது 300 வருடத்திற்கு முன் ஜீவசமாதி அடைந்த சித்தர் ஒருவர் உயிருடன் காணப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதுகுறித்து பலரும் தங்கள் முகநூல் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை என்ன ?
300 வருடத்திற்கு முன் ஜீவசமாதி அடைந்த சித்தர் என்ற வீடியோவை பற்றி யூடியூப் வலைத்தளத்தில் தேடிப் பார்த்தோம். வைரலான வீடியோவில் பேசுபவர் கோதாண்ட வேலு என்றும் அவர் பிரம்மா ஸ்ரீ தாவோ என்கிற பயிற்சி மையத்தில் தியானம், ஜீவசமாதி குறித்து பயிற்சி அளிப்பவர் என்றும் தெரியவந்தது.
இவர் பல்வேறு இடங்களுக்குச் சென்று, ஜீவசமாதி அடைய விரும்புவோருக்கு அதுகுறித்து பயிற்சி அளித்து வருகிறார். அவர்களுடைய அதிகாரப்பூர்வ யூடியூப் வலைத்தளத்தில் 3 வருடங்களுக்கு முன்பு, ஜீவசமாதி அடைய விரும்புவோருக்கு பயிற்சி கொடுக்கும் வீடியோக்களை பதிவிட்டு உள்ளனர்.
இதுகுறித்து அந்த பயிற்சி மையத்தை சார்ந்தவர்களை தொடர்பு கொண்டு பேசிய போது, “சமூக வலைத்தளத்தில் பரவி வரும் வீடியோவில் இருப்பவர் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவசமாதி அடைந்தவர் இல்லை என்றும், 15 நாட்களுக்கு முன் ஸ்ரீதரன் என்பவருக்கு ஜீவசமாதி குறித்து பயிற்சி அளித்த போது எடுக்கப்பட்ட வீடியோ” என்றும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், பயிற்சி அளித்த பொழுது சுற்றி இருந்த மக்களின் கேள்விகளுக்கு கோதாண்ட வேலு அவர்கள் விளக்கம் அளித்துக்கொண்டிருந்தார். அதில் ஜீவசமாதி அடைந்தவர்களின் ஜீவன் அந்த இடத்திலேயே காலத்திற்கும் இருக்கும் போன்ற விளக்கங்களை கொடுத்து உள்ளார்.
இதுபோன்று, 2019ம் மார்ச் மாதம் 15 வயது சிறுவன் ஜலசமாதி அடைந்துவிட்டதாக செய்தி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அந்தச் சிறுவன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டான் என்ற உண்மை தெரிய வந்தது. அதுகுறித்து இந்தப் பக்கத்தில் வாசிக்கவும்.
மேலும் படிக்க : சிறுவன் ஜலசமாதி அடைந்ததாகப் பரவிய செய்திக்கு முற்றுப்புள்ளி.
மேலும் படிக்க : 300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகானின் உடலா ?
முடிவு:
நம் தேடலில், 300 ஆண்டுகளுக்கு முன் ஜீவசமாதிக்குள் சென்ற சித்தர் என்று பரப்பப்படும் வீடியோ பொய்யானது என தெரியவருகிறது. மேலும், அந்த வீடியோ ஜீவசமாதி அடைவதற்காக பயிற்சி அளிக்கப்பட்ட போது எடுக்கப்பட்டது என தெரிகிறது.