8-ம் நூற்றாண்டு வராகா சிற்பத்தில் உலக உருண்டை வடிக்கப்பட்டதா ?
பரவிய செய்தி
புராதானமான பாரத சிற்பமான இந்த வாராஹ சிற்பத்தில் உலக உருண்டையை தன்னுடைய மூக்கின் மேல் வைத்திருப்பதாக சிலை வடித்திருக்கிறான் 8 ஆம் நூற்றாண்டு பாரத சிற்பி. உலகம் உருண்டை என்று கண்டுபிடித்ததாகச் சொல்லப்படும் கலீலியோ பிறந்தது 1564.. இதுதான் ஆங்கிலேயர்களின் அறிவியல் ஞானம். ஆனால்.. இவர்களைப் புகழ்ந்து கொண்டு பாரதத்தை அவமதித்துக் கொண்டு பிரிவினை வளர்த்த கூட்டம்தான் அண்ணாத்துரையின், ஈவேராவின் அறிவிலி திராவிட கூட்டம். Photo Curtesy – Lost Temple
மதிப்பீடு
விளக்கம்
கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தில் ஐஹோல் பகுதியில் அமைந்து இருக்கும் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த துர்கா விஷ்ணு கோவிலில் இடம்பெற்று இருக்கும் ஸ்ரீ வராகா சிற்பத்தில் தன்னுடைய மீது உலக உருண்டையை வைத்திருப்பது போன்று வடிவமைத்து இருக்கிறார்கள் என்றும், உலகம் உருண்டை எனக் கூறிய கலீலியோ பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இச்சிற்பத்தை வடிவமைத்து இருக்கிறர்கள் என்றும் இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த ஆண்டில் இருந்தே இப்புகைப்படம் முகநூல் உள்ளிட்டவையில் பகிரப்பட்டு வருவதை காண முடிந்தது. இந்த சிற்பம் குறித்த பதிவின் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பில் கேட்கப்பட்டது. இதையடுத்து, சிற்பம் குறித்த தகவலை ஆராய்ந்து பார்த்தோம்.
உண்மை என்ன ?
சிற்பத்தின் புகைப்படத்தை ரிவர்ஜ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” ஐஹோல் பகுதியில் உள்ள 8-ம் நூற்றாண்டு துர்கா கோவிலில் விஷ்ணுவின் அவதாரமான வராகா பூமாதேவி ” உடன் இருப்பதாக தலைப்பிட்டு Wikicommons எனும் தளத்தில் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
புகைப்படம் குறித்து மேற்கொண்டு தேடுகையில், வராகா சிற்பத்தின் தெளிவான புகைப்படம் ஒன்று கிடைத்தது. அதில், வராகா அவதாரத்தின் மூக்கிற்கு மேலே இருப்பது உலக உருண்டை அல்ல, கையில் இருக்கும் சங்கு ஆகும்.
விஷ்ணுவின் ஒரு கையில் சங்கும், மற்றொரு சக்கரமும் அமைந்திருக்கும். மேற்காணும் வாரகா சிற்பத்தில் மொத்தம் 4 கைகள் இருக்கின்றன. அதில் இரண்டு கைகள் சேதமடைந்து இருக்கிறது. ஒரு கையில் சக்கரமும், பூமாதேவியை வைத்திருக்கும் கையில் சங்கும் இருக்கிறது. அது பின்னோக்கி சென்றால் மூக்கின் மீது உலக உருண்டை இருப்பது போன்று தெரிந்து உள்ளது.
புராணத்தில் உலகத்தை பூமாதேவி எனக் குறிப்பிட்டு இருப்பார்கள். வராகா அவதாரம் பூமியை தூக்கிச் செல்வதை குறிக்கும் வகையில் அவரது கையில் பூமாதேவி இருப்பது போன்று சிற்பத்தை வடித்து உள்ளனர். 1855-ம் ஆண்டு எடுக்கப்பட்ட துர்கா விஷ்ணு கோவிலின் புகைப்படத்தில் அக்கோயில் சிதலமடைந்து இருப்பதை காண முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், 8 ஆம் நூற்றாண்டில் கர்நாடகா துர்கா விஷ்ணு கோவிலில் வடிக்கப்பட்ட வராகா சிற்பத்தில் உலக உருண்டை இருப்பதாக கூறுவது தவறானது. வராகா சிற்பத்தின் மூக்கின் மீது உலக உருண்டை போன்று தெரிந்தது கையில் இருக்கும் சங்கு என அறிய முடிகிறது.