சங்கிகளுக்கு அனுமதி இல்லை என A2B உணவகத்தில் அறிவிப்புப் பலகை எனப் பரவும் எடிட் செய்யப்பட்ட படம் !
பரவிய செய்தி
சங்கிகளுக்கு வந்த சோதனை…
மதிப்பீடு
விளக்கம்
அடையார் ஆனந்த பவன் நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாச ராஜா நேர்காணல் ஒன்றில் பேசும்போது ‘யார் வேண்டுமானாலும் எந்த தொழிலையும் செய்யலாம் என்கிற நிலை ஏற்படத் தந்தை பெரியாரும் ஒரு காரணம்’ எனப் பேசினார். இதற்கு வலதுசாரிகள் எதிர்ப்பு தெரிவிக்க அந்நிர்வாகம் குறித்து அவதூறுகளைப் பரப்பினர். அது குறித்து யூடர்ன் முன்னரே கட்டுரை வெளியிட்டிருந்தது.
இந்த அசிங்கம் தேவையா 😂 pic.twitter.com/c5CY1ZfZ8y
— Muralisenthil (@Muralisenthil9) October 24, 2023
இந்நிலையில் A2B உணவகத்தில் ‘மாட்டுச்சாணம் சாப்பிடுபவர்கள் மாற்றுப் பாதையில் செல்லவும். சங்கிகளுக்கு அனுமதி இல்லை’ என அந்நிர்வாகத்தினரால் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டு இருப்பதாகப் புகைப்படம் ஒன்றினை திமுக-வினரால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
இந்த அசிங்கம் தேவையா 😂 pic.twitter.com/qQo26pYEBv
— N.jaganathan Jagan (@NjaganathanJag1) October 24, 2023
உண்மை என்ன ?
சங்கிகளுக்கு அனுமதி இல்லை எனப் பரவக் கூடிய அறிவிப்புப் பலகையில் ‘சங்கிகளுக்கு’ மற்றும் ‘அனுமதி இல்லை’ என்கிற வார்த்தைகளுக்கு இடையே எழுத்துரு அளவு (Font size) வித்தியாசம் இருப்பதைக் காண முடிகிறது.
மேற்கொண்டு அடையார் ஆனந்த பவன் அறிவிப்புப் பலகை குறித்து சமூக வலைத்தளங்களில் தேடியதில், வலதுசாரியும், அதிமுக ஆதரவாளர் கிஷோர் கே சாமி A2B பற்றி விவாதங்கள் நடந்த போது தனது டிவிட்டர் பக்கத்தில் (2023, அக்.23) A2B அறிவிப்புப் பலகை படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
அதில், ‘வியாபாரம், அரசியல் மற்றும் ரியல் எஸ்டேட் பேச அனுமதி இல்லை. – இப்படிக்கு நிர்வாகம்’ என்று உள்ளது. அந்த படத்தில் ‘இப்படிக்கு நிர்வாகம்’ என்ற எழுத்திற்கு மேல் வெளிச்சம் விழுவதைக் காணலாம். இதே வெளிச்சம் பரவக் கூடிய படத்திலும் உள்ளது.
இதேபோல் 2023, ஜூன் 4ம் தேதி அடையார் ஆனந்த பவன் உணவகத்தில் வியாபாரம், அரசியல் மற்றும் ரியல் எஸ்டேட் பேச அனுமதி இல்லை என வைக்கப்பட்ட அறிவிப்புப் பலகை குறித்து ’சமயம்’ இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இவற்றில் இருந்து A2B உணவகத்தில் சங்கிகளுக்கு அனுமதி இல்லை என அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளதாகப் பரவும் படம் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க : அடையார் ஆனந்த பவன் ஸ்ரீனிவாச ராஜா இந்துக்களுக்கு எதிராகப் பேசியதாக அவதூறு பரப்பும் வலதுசாரிகள் !
அடையார் ஆனந்த பவன் உணவக உரிமையாளர் ஸ்ரீனிவாச ராஜா பேசியது பற்றி வதந்தி பரவிய போது அது குறித்த கட்டுரையினை யூடர்ன் வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க : அமைதியைக் குலைக்கும் வகையில் பதிவிட்டதாக வழக்கு.. கிஷோர் கே சுவாமி பதிவிட்ட வதந்திகளின் தொகுப்பு
முடிவு :
A2B உணவகத்தில் ‘சங்கிளுக்கு அனுமதி இல்லை’ என அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளதாகப் பரவும் படம் போலியாக எடிட் செய்யப்பட்டது. அக்கடையில் வியாபாரம், அரசியல் மற்றும் ரியல் எஸ்டேட் பேச அனுமதி இல்லை என்றுதான் உள்ளது.