ஆச்சி மசாலாவில் ஆண்மை குறைவு மருந்து கலக்கப்படுவதாக வதந்தி!

பரவிய செய்தி
ஆச்சி மசாலா யாரும் வாங்க வேண்டாம் ஆண்மை குறைவு மருந்து கலக்கபடுகிறது. கையுடன் பிடித்த அதிகாரிகள். கீலே உள்ளவர்கள் கலப்படம் செய்து மக்களை கெடுக்கும் தேசவிரோதிகளை கைதுசெய்து கீலே உட்கார வைத்து உள்ளனர். ஆச்சி மசாலா ஆபத்து.. வாங்காதீர்கள்.
மதிப்பீடு
விளக்கம்
ஆச்சி மசாலா நிறுவனம் தயாரிக்கும் மசாலா பொருட்களில் ஆண்மை குறைவு மருந்து கலக்கப்படுவதாக அதிகாரிகளிடம் பிடிபட்ட மசாலா பாக்கெட்கள் மற்றும் நபர்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படுவதாக வாசகர் தரப்பில் நமக்கு அனுப்பப்பட்டது.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் தேடிய போது, இப்பதிவுகள் கடந்த ஆண்டில் இருந்து பரப்பப்பட்டு வருவதை அறிய முடிந்தது.
உண்மை என்ன ?
அதிகாரிகளிடம் பிடிபட்ட நிலையில் இருக்கும் நபர்கள் மற்றும் மசாலா பாக்கெட்களின் புகைப்படங்களை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு மசாலா பாக்கெட்களின் கூரியரில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ போதைப் பொருளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டதாகக் கூறி மசாலா பாக்கெட்டின் புகைப்படம் மற்றும் கைதானவர்கள் புகைப்படங்களை 2020 அக்டோபர் ஜீ நியூஸ் தமிழ் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.
” சென்னை விமான நிலைய சுங்கத்துறை: மசாலா தூள் பாக்கெட்டில் மறைத்து ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்படவிருந்த ரூ. 30 லட்சம் மதிப்புள்ள 3 kg சூடோஎஃபிட்ரின் எனப்படும் போதைப்பொருளை கூரியர் முனையத்தில் NDPS சட்டப்படி கைப்பற்றியது. பிரதான குற்றவாளியுடன் 4 பேர் கொண்ட கடத்தல் கும்பல் பிடிபட்டத ” என PIB tamilnadu மற்றும் Chennai Custom ட்விட்டர் பக்கத்தில் பதிவாகி இருக்கிறது.
சென்னை விமான நிலைய சுங்கத்துறை: மசாலா தூள் பாக்கெட்டில் மறைத்து ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்படவிருந்த ரூ. 30 லட்சம் மதிப்புள்ள 3 kg சூடோஎஃபிட்ரின் எனப்படும் போதைப்பொருளை கூரியர் முனையத்தில் NDPS சட்டப்படி கைப்பற்றியது. பிரதான குற்றவாளியுடன் 4 பேர் கொண்ட கடத்தல் கும்பல் பிடிபட்டது. pic.twitter.com/Vcf3pJb8Cm
— PIB in Tamil Nadu 🇮🇳 (@pibchennai) October 13, 2020
சென்னை விமான நிலைய சுங்கத்துறை: மசாலா தூள் பாக்கெட்டில் மறைத்து ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்படவிருந்த ரூ. 30 லட்சம் மதிப்புள்ள 3 kg சூடோஎஃபிட்ரின் எனப்படும் போதைப்பொருளை கூரியர் முனையத்தில் NDPS சட்டப்படி கைப்பற்றியது. பிரதான குற்றவாளியுடன் 4 பேர் கொண்ட கடத்தல் கும்பல் பிடிபட்டது. pic.twitter.com/lnpGJD0ogm
— Chennai Customs (@ChennaiCustoms) October 13, 2020
ஆச்சி பிராண்ட் உடைய மசாலா பொருட்களில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக செய்திகள் வெளியான பிறகு அந்நிறுவனத்துடன் அதைத் தொடர்புப்படுத்தி சமூக வலைதளங்களில் தவறாக பரப்பத் துவங்கினர். தங்கள் நிறுவனத்தின் பொருட்களை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தியதை அந்த நிறுவனம் கண்டித்து அறிக்கை வெளியிட்டது.
ஆச்சி மசாலா நிறுவனம் தயாரிக்கும் பொருட்களில் ஆண்மை குறைவு மருந்துகளை கலப்பதாக எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை. சமூக வலைதளங்களில் ஆச்சி மசாலா நிறுவனத்திற்கு எதிராக வீண் வதந்தியை பரப்புபவர்கள் செய்த வேலை எனத் தெளிவாய் தெரிகிறது.
மேலும் படிக்க : முஸ்லீம் கடை பிரியாணியில் கருத்தடை மாத்திரைகளா ?| மருத்துவர் கூறும் தகவல்.
இதற்கு முன்பாக, முஸ்லீம்கள் கடை பிரியாணியில் கருத்தடை மாத்திரைகளை கலப்பதாக வதந்தியை பரப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
முடிவு :
நம் தேடலில், ஆச்சி மசாலா நிறுவனத்தின் பொருட்களில் ஆண்மை குறைவு மருந்து கலக்கப்படுவதாக பரப்பப்படும் தகவல் வதந்தியே. அதனுடன் பகிரப்படும் புகைப்படங்கள் அந்நிறுவனத்தின் மசாலா பொருட்களில் போதைப்பொருள் கடத்திய கும்பல் என அறிய முடிகிறது.