அப்துல்கலாம் உடைய குழந்தைப் பருவம் என பகிரப்படும் தவறான புகைப்படம் !

பரவிய செய்தி
ஐயா அப்துல்காலம் அவர்களுடைய குழந்தைப் பருவத்தில் குடும்பத்தினர் எடுத்துக் கொண்ட புகைப்படம்.
மதிப்பீடு
விளக்கம்
மறைந்த முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவரான திரு. ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களுடைய பிறந்தநாள், நினைவு நாளன்று அவரின் புகைப்படங்களும், வீடியோ பதிவுகளும் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிடுவது வழக்கம். அப்படி பகிரப்படும் புகைப்படங்களில் அப்துல்கலாம் உடைய குழந்தைப் பருவ புகைப்படம் என ஓர் புகைப்படமானது நீண்ட வருடங்களாக பகிரப்பட்டு வைரலாகும் செய்கின்றது.
உண்மையில், அக்குடும்பப் புகைப்படத்தில் இருப்பது அப்துல்கலாம் மற்றும் அவரின் தாயாரா என தெரிந்து கொள்ளாமலேயே பலரும் சமூக வலைதளங்களில் தற்பொழுது வரை அதனை பகிர்ந்து வருகின்றனர்.
சமூக ஊடகங்கள் மட்டுமின்றி முதன்மை செய்தி ஊடகங்களில் கூட இதே புகைப்படங்கள் காண்பிக்கப்பட்ட காரணத்தினால் மக்களும் உண்மை என நினைத்து உள்ளனர்.
2016-ல் மே 8-ம் தேதி அன்னையர் தினத்தன்று பிரபலமான இந்தியர்களின் பெருமைமிகு அன்னையர்கள் என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் உடைய அன்னை ஆஷியம்மா ஜைனுலாபிதின் என இதே படத்தை இந்தியா டுடே வெளியிட்டு இருந்தது.
அப்துல்காலம் குழந்தைப் பருவம் எனக் கூறும் புகைப்படமானது எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி இருக்கிறது என தேடுகையில், 2013-ல் அக்டோபர் 18-ம் தேதி scientific world எனும் இணையதளத்தில் ” APJ Abdul Kalam Biography – APJ Abdul Kalam Biography in Hindi “ என்ற தலைப்பில் அப்துல்கலாம் வாழ்கை வரலாறு குறித்து வெளியான கட்டுரையில் ” அப்துல்கலாம் குடும்பம் ” என இப்படமானது இடம்பெற்று இருந்தது.
கலாம் குடும்பத்தினரின் பதில் :
புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து அப்துல்கலாம் அவர்களின் அண்ணனின் பேரனும், அப்துல்கலாம் இன்டர்நேஷனல் ஃபவுன்டேசனை நிர்வகிப்பவருமான ஏ.பி.ஜே.எம்.ஜே ஷேக் சலீம் கூறுகையில், ” அப்படத்தில் இருப்பது அப்துல்கலாம் மற்றும் அவரது தாயார் இல்லை. அது தவறான புகைப்படமாகும். எங்களிடம் அப்துல்கலாம் அவர்களின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் ஏதுமில்லை. அன்றைய நாட்களில், ஐயா.கலாம் உடைய தாயார் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளவில்லை. ஆகையால், அதற்கு வாய்ப்புகள் இல்லை. அதேபோன்று, கலாம் அவர்களின் தந்தைக்கும் புகைப்படங்கள் இல்லை ” என ஏ.எல்.டி-க்கு அளித்த பதிலில் கூறி உள்ளார்.
அப்துல்கலாம் குழந்தை பருவத்தில் இருந்த பொழுது குடும்பப் புகைப்படங்கள் ஏதும் எடுக்கப்படவில்லை. சொல்ல போனால் அவரின் குழந்தை பருவ புகைப்படங்கள் ஏதும் இல்லை. அவரின் கல்லூரி நாட்களில் எடுக்கப்பட்ட புகைப்படம் மட்டுமே இளமைக்கால புகைப்படமாக இருக்கிறது.
மேலும் படிக்க : ஏவுகணை சோதனையில் கலாம் ஐயா | இளமைக்கால அரியப் படம்.
கலாம் அவர்களின் தந்தைக்கும் கூட புகைப்படங்கள் ஏதுமில்லை. அவரின் தந்தையின் உருவம் ஓவியமாக தீட்டப்பட்ட படத்தையே வீட்டில் வைத்திருக்கின்றனர்.
முடிவு :
இணையத்தில் இன்றும் அப்துல்கலாம் உடைய குழந்தை பருவ புகைப்படம், குடும்ப புகைப்படம் என பகிரப்படும் படத்தில் இருப்பது அப்துல்கலாம் இல்லை என்பதை கலாம் குடும்பத்தினரே உறுதிப்படுத்தி உள்ளனர். யார் என தெரியாத ஒரு குடும்பத்தினரின் புகைப்படத்தை தவறாக பகிர்ந்து வருவதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய கடமை உள்ளது.
இதற்கு முன்பாகவும்,அப்துல்கலாம் குழந்தைப் பருவ புகைப்படம், அப்துல்கலாம் பேப்பர் போடும் புகைப்படம் என பரவிய படங்களை தவறான படங்கள் என மீம் பதிவுகள் மூலமாக Youturn மக்களுக்கு தெரியப்படுத்தி வந்தோம்.