This article is from Nov 16, 2017

வருமானவரி செலுத்துபவர் விபத்தில் இறந்தால் 10 மடங்கு தொகை இழப்பீடாக கிடைக்குமா ?

பரவிய செய்தி

3 வருடங்களாக தொடர்ந்து வருமான வரி செலுத்தி வரும் நபர் வாகன விபத்தில் இறந்து விட்டால், அவரின் ஆண்டு வருமானத்தின் 10 மடங்கு தொகையை இழப்பீடாக அரசு வழங்கும்.

 

மதிப்பீடு

விளக்கம்

இன்று உலக அளவில் சாலைகளின் தரமும், போக்குவரத்தின் தரமும் உயர்ந்துள்ளது. அது உலகின் பொருளாதார வளர்ச்சியை எடுத்துரைக்கிறது. ஆனால் இந்த பொருளாதார வளர்ச்சி வாகன நெரிசலை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் பல விபத்துகளுக்கும் வழி வகுக்கின்றது. குறிப்பாக மோட்டார் வாகனங்களால் ஏற்படும் விபத்துகளால் நிகழும் இழப்புகள் சில தருணங்களில் ஈடுசெய்ய முடியாதது.

2015 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் மொத்தம் 1.46 லட்சம் பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர். நாளுக்கு நாள் வாகன விபத்துகளில்  இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

சாலை விபத்துகளில் உயிரிழந்த ஒருவர் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து வருமான வரி செலுத்தி வந்திருந்தால், இறந்தவரின் ஆண்டு வருமானத்தின் பத்து மடங்கு தொகையை அவர்களது குடும்பத்திற்கு இழப்பீடாக அரசு வழங்கும் என்று செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இது தொடர்பாக மோட்டார் வாகனச்சட்ட விதிகளை ஆராய்ந்தால், வாகனச்சட்டம் 1988 கீழ் 166 பிரிவில் இம்மாதிரியான இழப்பீடுகள் பற்றி எந்தவொரு தகவல்களும் இல்லை. ஆனால் சாலை விபத்துகளில் இழப்புகள் அதிகம் இருந்தால் இழப்பீடுகளை பெற்றுதர பெரிதும் உதவுவது “மோட்டார் வாகனச்சட்டம் 1988”. இதில், வருமான வரி செலுத்துபவர் விபத்தில் இறந்தால், அவரின் வருட வருமானத்தை போன்று 10 மடங்கு தொகையை அளிக்க வேண்டும் கூறப்படவில்லை.

எனினும், விபத்தில் பாதிக்கப்பட்டவர் இழப்பீடு பெற வேண்டும் என்றால், விபத்தை ஏற்படுத்தியவர் உடன்படவில்லை என்றால், மோட்டார் வாகன இழப்பீடு தீர்ப்பாயத்தில் முறையீடு செய்யலாம் அல்லது நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். அதற்கு தேவையான ஆவணங்கள் உடன் வழக்கை எதிர் கொள்ளலாம்.

இந்தியாவை பொறுத்தவரை இன்று மோட்டார் வாகன விபத்துகள் தொடர்பான வழக்குகள் அதிகம் நிலுவையில் உள்ளன. ஆனாலும் நீதிமன்றங்கள் மூலமாக மக்களுக்கு தீர்வுகளும் கிடைக்கின்றன என்பது குறுப்பிடத்தக்கது. மோட்டார் விபத்துகளை பொறுத்தவரை மனிதர்களின் கவனக்குறைவால் மற்றும் சாலை சரியில்லாததால் ஏற்படும் விபத்துகள் அதிகம்.

அனைவரும் தங்களுக்கும், வாகனங்களுக்கும் காப்பீடு செய்வதால் விபத்துகள் நிகழ்ந்தாலும் இழப்பீடுகளை பெறலாம். ஒவ்வொருவரும் ஓர் கடமை உணர்வுடன் செயல்பட்டால் விபத்துகளை பெருமளவில் தவிர்க்கலாம்.

Updated : 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே யூடர்ன், வாகன விபத்தில் இறந்தவருக்கு அரசு இழப்பீடு வழங்கும் என பரவி வந்த தவறான தகவலை என மீம்ஸ் மற்றும் செய்தி வாயிலாக வெளியிட்டு இருந்தோம். எனினும் , மோட்டார் வாகன சட்டம் விதிகளுடன் பரவும் தவறான தகவல்கள் மக்கள் மீண்டும் மீண்டும் பகிர்ந்து வருகின்றனர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader