நடிகர் சிவக்குமார் ரசிகர் அணிவித்த சால்வையை வீசியதாக தவறான செய்தி வெளியிட்ட ஊடகங்கள் !

பரவிய செய்தி

காரைக்குடியில் புத்தக வெளியீட்டு விழா ஒன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட சிவகுமாருக்கு வயதான முதியவர் ஒருவர் ஆசையாய் சால்வை கொண்டு வந்து கொடுத்தார். அதை பிடுங்கி வெறுப்புடன் தூக்கி வீசி எறிந்துவிட்டு சென்றார் சிவகுமார். அந்த இடத்திலேயே அந்த முதியவர் மனம் நொந்து போனார். – தினமலர்

Article Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

ரசியல்வாதியும் எழுத்தாளருமான பழ. கருப்பையா எழுதிய “இப்படித்தான் உருவானேன்” என்ற புத்தகத்தின் வெளியீட்டுவிழா நேற்று (பிப்ரவரி 27) சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகுமார் கலந்து கொண்டார்.

இந்நிலையில் நிகழ்ச்சியின் முடிவில் சிவகுமாருக்கு வயதான ரசிகர் ஒருவர் சால்வை கொண்டு வந்து கொடுத்தார். ஆனால், சிவகுமார் சால்வையை பார்த்து கடுப்பாகி அதனை தூக்கி எறிந்துவிட்டார் என்று கூறி நடிகர் சிவகுமார் சால்வையை வீசுவது போன்ற வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலகப் பரவி வருகிறது.

மேலும் இது குறித்து தினமலர், தினத்தந்தி, News 18 தமிழ்நாடு, பாலிமர், IBC தமிழ்நாடு, மாலைமலர், புதியதலைமுறை, OneIndia Tamil, ABP நாடு போன்ற தமிழ் ஊடகங்களும் சிவக்குமார் வெறுப்புடன் நடந்து கொண்டதாகக் கூறி தங்கள் பக்கங்களில் வீடியோ மற்றும் செய்திகள் வெளியிட்டுள்ளனர்.

உண்மை என்ன ?

பரவி வரும் செய்திகள் ஆய்வு செய்து பார்த்ததில் சிவகுமாருக்கு சால்வை அணிவிக்க வந்தவர் அவருடைய நெருங்கிய நண்பர் கரீம் என்பதை அறிய முடிந்தது.

Rifoy Jainulabideen என்பவர் நேற்று நடந்த இந்த சம்பவம் குறித்து, “அந்த முதியவர் என்னுடைய தாத்தா. சிவகுமாரும் இவரும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிய நண்பர்கள். இது குறித்து என் தாத்தாவிடம் பேசினேன். “சிவகுமார் சும்மா ஃபிரண்ட்லியா எதுக்கு டா எனக்கு இதெல்லாம், நான் கேட்டேனா என்றான், சாதாரணமாக பெஸ்ட் ஃப்ரெண்ட் போல கேலியாக அந்த சால்வையை தூக்கி எறிந்துவிட்டு, வா டா போகலாம் என்று நடந்து கொண்டே இருந்தான்” என்றார்.

கடைசியில் இருவரும் படிக்கட்டில் இருந்து இறங்கியதும் சிவகுமார் என் தாத்தாவிடம் அதை உன்னுடன் வைத்துக்கொள் என்று சொல்வதை நீங்கள் பார்க்கலாம். எனது தாத்தா காரைக்குடியில் வசிக்கிறார், சிவக்குமார் அங்கு சிறப்புப் பேச்சாளராகச் சென்றார். சிவகுமார் எங்கள் எல்லா குடும்ப விழாக்களுக்கும், எங்கள் வீட்டிற்கும் பலமுறை வந்திருக்கிறார், நாங்கள் அவருடைய வீட்டிற்கு பலமுறை சென்றிருக்கிறோம்.
உண்மை அறியாமல் இது போன்ற தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்” என்று அதில் குறிப்பிட்டிருந்ததைக் காண முடிகிறது.

கடந்த 2021 மார்ச் 22 அன்று இவர் குறித்து “திரைப்படச்சோலை 16: மன்னார்குடியும் பரங்கிப்பேட்டையும்” என்ற தலைப்பில் இந்து தமிழ் திசையில் நடிகர் சிவக்குமார், சிறப்பு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளதைக் காண முடிந்தது. அதில், புவனேஸ்வரி மூவிஸ் தயாரிப்பாளர் வேண்டுகோளை ஏற்று மன்னார்குடியில் ‘இளைஞர் கலா மன்றத்தார்’ அன்று மாலை நடத்தவிருக்கும் நாடகத்திற்குத் தலைமை ஏற்க அவர்கள் கொண்டு வந்திருந்த காரில் பயணமானேன். நாடகம் ஆரம்பிக்கும்போதே மணி 10.30 ஆகி விட்டது.

அங்கு நான் பேசி முடித்ததும் சிங்கத்தின் கர்ஜனை போல கரீம் என்ற இளைஞன் என்னை வாழ்த்திப் பேசினான். நிகழ்ச்சி முடிந்து கிளம்பும்போது மேடையைச் சுற்றி திமுதிமு என்று ரசிகர்கள் கூடிவிட்டனர். 6 அடி 2 அங்குல உயரமுள்ள கரீம் தான் என்னை பத்திரமாக காரில் இறக்கிவிட்டான். சென்னைக்கு விடியும் வரை காரில் பயணம் செய்ய வேண்டியிருந்ததால் தயிர் சாதமும், சின்ன வெங்காயமும் கிடைக்குமா என்று கேட்டேன். அரை மணி நேரத்தில் கரீம் தயார் செய்து கொண்டுவந்து தந்து வழியனுப்பி வைத்தான்.

50 ஆண்டுகளுக்கு மேலாகியும் எங்கள் நட்பு தொடர்கிறது. அவன் புதல்விகள் திருமண விழாவில் கலந்துகொண்டேன். பேரன் திருவிழாவிலும் காரைக்குடி சென்று சமீபத்தில் கலந்துகொண்டேன். என் சகோதரி மகள் ஜானகி மீது நிரம்பிய பாசம் வைத்திருந்தான். 1975-ல் ஜானகி தீ விபத்தில் இறந்தபோது அவன் கதறியது இன்றும் நினைவில் உள்ளது என்று கூறி தனது நண்பர் கரீமுடன் சிவக்குமார் நிற்பது போன்ற புகைப்படத்தைக் குறிப்பிட்டிருந்தார்.

இதன் மூலம் நடிகர் சிவக்குமார் தனது 50 வருட நண்பர் கரீமுடன் நடந்து கொண்ட சம்பவத்தை, ஊடகங்கள் பலவும் தவறாக சித்தரித்து செய்தி வெளியிட்டுள்ளனர் என்பதை அறிய முடிகிறது. இது குறித்து மேலும் அறிய Rifoy Jainulabideen என்பவரையும் தொடர்பு கொண்டுள்ளோம். அவர் பதிலளித்த பின்னர் இது குறித்து விவரங்கள் மேலும் இதில் இணைக்கப்படும்.
.
மேலும் சால்வையை கீழே எறிந்த பின்னர், சிவகுமார் தனது நண்பர் கரீமை, வா கீழே செல்வோம் என்று கூறி கையைப் பிடித்து மேடையிலிருந்து கீழே கூட்டி செல்வதையும், இருவரும் சிரித்துக் கொண்டே கீழிறங்குவதையும் வீடியோவில் தெளிவாகப் பார்க்க முடிகிறது.
.
முடிவு:
.
நம் தேடலில், நடிகர் சிவகுமார் ரசிகர் ஒருவர் அளித்த சால்வையை பார்த்து கடுப்பாகி,  அதனை வெறுப்புடன் தூக்கி எறிந்துவிட்டார் என்று கூறி ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் தவறானவை. வீடியவில் இடம்பெற்ற நபர் சிவகுமாரின் நண்பர் கரீம் என்பதை அறிய முடிகிறது.
Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader