கட்சியை நிறுத்தப் போகும் நடிகர் விஜய் எனப் பரவும் போலியான நியூஸ் கார்டு!
பரவிய செய்தி
பரவிய செய்தி 1: கட்சியை நிறுத்தப் போகும் விஜய். கட்சியை நிறுத்தி விட்டு மீண்டும் படத்துக்கும் செல்ல போகிறேன் என்று வாக்கு கொடுத்தார் நடிகர் விஜய்.
பரவிய செய்தி 2: த.வெ கழக தலைவரும் நடிகருமான விஜய் அவர்களோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சி பொறுப்புகள் அனைத்திலும் இருந்து விலகும் முடிவில் இருக்கிறேன் – பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்
மதிப்பீடு
விளக்கம்
“தமிழக வெற்றிக் கழகம்” கட்சியின் தலைவரான நடிகர் விஜய் கட்சியை நிறுத்தி விட்டு மீண்டும் படத்தில் நடிக்க செல்ல போகிறேன் என்று முடிவு எடுத்ததாகவும், விஜய் அவர்களோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சி பொறுப்புகள் அனைத்திலும் இருந்து விலகும் முடிவில் இருக்கிறேன் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியதாகவும் கூறி தந்திடிவியின் இரண்டு நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
View this post on Instagram
இவ்ளோ தேர்தல் களேபரத்துல கூட கோமாளிகள் தினமும் தவெக குறித்து ஒரு ஃபேக் செய்திய போட்டுட்டு கிடக்குங்க. pic.twitter.com/B0W4GjaxqO
— Sonia Arunkumar (@rajakumaari) April 3, 2024
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் ஆய்வு செய்து பார்த்தோம். விஜய் கட்சியை நிறுத்தப் போவது குறித்தோ, புஸ்ஸி ஆனந்த் பொறுப்புகள் அனைத்திலும் இருந்து விலகுவது குறித்தோ எந்தவித அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை என்பதை அறிய முடிந்தது.
மேலும் இறுதியாக மார்ச் 31 அன்று, “உலக மக்கள் அனைவரிடமும் அமைதி நிலவ, அன்பு, சகோதரத்துவம், ஒற்றுமை, தியாகம் தழைத்தோங்க, புனிதமான இந்நன்னாளில் அனைவருக்கும் ஈஸ்டர் பெருவிழா வாழ்த்துகள் – விஜய், தலைவர், தமிழக வெற்றிக் கழகம்” என்று குறிப்பிட்டு பதிவு செய்திருந்ததையே காண முடிந்தது. இது தவிர்த்து எந்த வித அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை.
உலக மக்கள் அனைவரிடமும் அமைதி நிலவ, அன்பு, சகோதரத்துவம், ஒற்றுமை, தியாகம் தழைத்தோங்க, புனிதமான இந்நன்னாளில் அனைவருக்கும் ஈஸ்டர் பெருவிழா வாழ்த்துகள்.
விஜய்,
தலைவர்,
தமிழக வெற்றிக் கழகம்— TVK Vijay (@tvkvijayhq) March 31, 2024
பரவி வரும் நியூஸ் கார்டுகள் குறித்து தந்திடிவியின் சமூக ஊடகப் பக்கங்களிலும் ஆய்வு செய்து பார்த்தோம், தந்தி டிவி இது குறித்து எந்த செய்திகளும் வெளியிடவில்லை என்பதை உறுதிபடுத்த முடிந்தது.
மேலும் பரவி வரும் இரண்டு நியூஸ் கார்டுகளிலும் “நிருத்தபோகும் , குடுத்தார்” என்று பல எழுத்துப்பிழைகள் இருப்பதையும் காண முடிகிறது. எனவே பரவி வரும் இரண்டு நியூஸ் கார்டுகளும் போலியாக எடிட் செய்யப்பட்டவை என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க: பிரிவினை பேசும் திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று நடிகர் விஜய் கூறியதாகப் பரவும் போலிசெய்தி!
முடிவு:
நம் தேடலில், கட்சியை நிறுத்தப் போகும் நடிகர் விஜய் என்றும், கட்சி பொறுப்புகளிலிருந்து விலகும் முடிவில் இருக்கிறேன் என்று புஸ்ஸி ஆனந்த் கூறியதாகவும் பரவி வரும் தந்திடிவியின் இரண்டு நியூஸ் கார்டுகளும் போலியானவை என்பதை அறிய முடிகிறது.