வைரலாகும் நடிகை ராஷ்மிகா, கத்ரீனா கைஃபின் போலி வீடியோக்கள்.. அச்சுறுத்தும் DeepFake தொழில்நுட்பம்
பரவிய செய்தி
இந்திய நடிகையான ராஷ்மிகா மந்தனா கருப்பு உடையில் லிஃப்டின் வெளியே இருந்து உள்ளே வருவது போன்ற காட்சியை வீடியோ காட்டுகிறது.
மதிப்பீடு
விளக்கம்
18 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சமூக ஊடகங்களில் பார்த்திருப்பதாக கூறப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் 7 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று கடந்த சில நாட்களாகவே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் கருப்பு நிற ஜம்ப்சூட் உடை அணிந்து அவர் லிஃப்டின் வெளியே இருந்து உள்ளே வருவது போன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
உண்மை என்ன?
பரவிய வீடியோ AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எடிட் செய்யப்பட்ட DeepFake வீடியோ. அவ்வீடியோவின் தொடக்கத்தில் பெண் ஒருவர் லிப்டில் நுழைவது போன்றும், பின்னர் அந்த பெண்ணின் முகம் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகமாக மாறுவது போன்றும் உள்ளதை அதில் கவனிக்க முடிந்தது.
நடிகை ராஷ்மிகா மந்தனா தனது எக்ஸ் பக்கத்தில் பரவி வரும் இந்த வீடியோ குறித்து தனக்கு அதிர்ச்சியும் கவலையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் வளர்ந்து வரும் இத்தகைய தொழில்நுட்பத்தின் கெடுதல்கள் குறித்தும் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
வைரல் செய்யப்படும் வீடியோவின் உண்மையான வீடியோவில் இருப்பவர் பிரிட்டிஷ் இந்தியப் பெண்ணான ஜாரா படேல். இந்த வீடியோ முதன்முதலில் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த அக்டோபர் 9 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
பரவி வரும் வீடியோவிற்கு வருத்தம் தெரிவித்துள்ள அவர், தன்னுடைய வீடியோவில் ராஷ்மிகா முகத்தை எடிட் செய்து DeepFake வீடியோ உருவாக்கப்பட்டு உள்ளது, என்ன நடக்கிறது என்பதைக் கண்டு தான் மிகவும் வருத்தமடைந்ததாகவும், சமூக ஊடங்களில் பார்க்கும் எதையும் அதன் உண்மை தன்மையை (Fact-checking) சரிபார்க்காமல் நம்ப வேண்டாம் என்றும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
மேலும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் வீடியோவைப் போலவே, சமீபத்தில் நடிகை கத்ரீனா கைஃபின் DeepFake வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.
வளர்ந்து வரும் DeepFake தொழில்நுட்பம்:
DeepFake என்பது புகைப்படங்கள், ஆடியோ மற்றும் வீடியோக்களை போலியாக உருவாக்கப் பயன்படுத்தப்படும் ஒரு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். மேலும் இத்தொழில்நுட்பத்தின் மூலம் ஒருவரின் புகைப்படம் அல்லது வீடியோவில், அவருக்கு பதில் வேறொருவரின் முகத்தைப் பயன்படுத்தி மாற்றிக்கொள்ள முடியும்.
இவை டிகோடர் மற்றும் என்கோடர் என்று அழைக்கப்படும் இரண்டு செயல்முறைகள் மூலம் உருவாக்கப்படுகின்றன. இந்த DeepFake தொழில்நுட்பம் ஒருவரை பெரும்பாலும் ஆபாசமாக காட்ட பயன்படுத்தப்பட்டு வந்தாலும், அதே வேளையில், வீடியோ கேம் ஆடியோக்கள் , வாடிக்கையாளர் ஆதரவு சேவைகள் (customer support), அழைப்பை பதிலளிக்க பயன்படுத்தும் செயலிகள் (caller response applications), அழைப்பு பகிர்தல் சேவைகள் (Call-forwarding) மற்றும் வரவேற்பாளர் சேவைகள் (receptionist services) போன்ற முறையான பயன்பாடுகளுக்கும் இவை பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில் ஒன்றிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், “தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000, பிரிவு 66D-இன் படி, தகவல்தொடர்பு சாதனங்கள் அல்லது கணினி தொடர்புடைய ஆதாரங்களைப் பயன்படுத்தி தனிப்பட்ட முறையில் இவ்வாறு மோசடி செய்யும் குற்றவாளிகளுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று கூறியுள்ளது.
வளர்ந்து வரும் AI தொழில்நுட்பம் குறித்தும் அறிந்து கொள்வதற்கு முன்பாகவே DeepFake மூலம் ஆபாச சித்தரிப்புகள் அதிகரித்து உள்ளது. இதனால் நடிகைகள் உள்பட சாதாரண பெண்களும் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.
பெண்கள் இது குறித்து எவ்வாறு புகார் அளிக்கலாம் ?
பெண்கள் இவ்வாறு பொது தளங்களில் வெளியிடப்பட்டுள்ள தங்களுடைய அந்தரங்கப் புகைப்படங்கள் குறித்து எவ்வாறு புகார் அளிக்கலாம் என்பது குறித்து நம் பக்கத்தில் இதற்கு முன்பே கட்டுரை வெளியிட்டிருக்கிறோம்.
பெண்களின் அந்தரங்கம் தொடர்பான இந்த பிரச்சனைகளை சமாளிக்கும் வகையில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உடைய தாய் நிறுவனமான மெட்டா இந்தியாவில் StopNCII.org எனும் தளத்தை உருவாக்கி உள்ளது.
மேலும் படிக்க: உங்கள் ஆபாச புகைப்படத்தை வெளியிடுவேன் என மிரட்டப்படுகிறீர்களா ? இனி கவலையில்லை, இதை செய்யுங்கள் !
இதன்மூலம், பெண்கள் தங்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை StopNCII.org என்ற தளத்தில் பதிவு செய்து புகார் சமர்ப்பிக்கலாம். இந்த புகாரின் அடிப்படையில் சட்டவிரோதமாக சமூக ஊடகங்களில் பரவி வரும் அந்தப் பெண்ணின் புகைப்படமானது அகற்றப்படுவதால், இதனை பாதிக்கப்பட்ட பெண்களே எளிதில் கையாள முடிகிறது.