இரயில் எஞ்சினில் அதானி நிறுவனத்தின் விளம்பரம்.. அதானி இரயில் வந்ததாக தவறான தகவல்!
பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
இந்திய இரயில்வேவிற்கு சொந்தமான இரயில்கள் அதானிக்கு விற்கப்பட்டு உள்ளதாக எஞ்சின் முழுவதும் அதானி குழுமத்தின் விளம்பரங்கள் இடம்பெற்று இருப்பதை சுற்றி எடுக்கப்பட்ட 1 நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் இந்திய அளவில் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
வைரலாகும் வீடியோவில் இருக்கும் இரயில் எஞ்சினில் WAP 7 என எண் குறிப்பிடப்பட்டு உள்ளதை காண முடிந்தது. அதை வைத்து தேடிப் பார்க்கையில், அது குஜராத் மாநிலத்தின் வதோதரா பகுதியைச் சேர்ந்தது என்று அறிய முடிந்தது. மேலும், இரயிலை அதானிக்கு விற்கவில்லை, அந்நிறுவனத்தின் விளம்பரங்கள் மட்டுமே இடம்பெற்று உள்ளன.
2020 மார்ச் 4-ம் தேதி வெளியான financialexpress செய்தியில், ” லோகோமோட்டிவ் பிராண்டிங்கில் இருந்து இந்திய ரயில்வே பெரிய வருவாய் ஈட்டுகிறது. 2020 பிப்ரவரி 27-ம் தேதி மொத்தம் 5 WAP 7 எஞ்சின்கள் அதானி வில்மருக்கு ரோட்டா சார்பு அடிப்படையில் ஒதுக்கப்பட்டன. மேற்கு ரயில்வேவின் குஜராத் பிரிவில் வரும் வதோதராவில் லோகோமோட்டிவ் பிராண்டிங் மூலம் வருடத்திற்கு 73.26 லட்சம் வருவாய் ஈட்டுகிறது ” என வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்த பத்திரிகை வெளியீட்டை அதானி வில்மர் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. அதானி குழுமம் மற்றும் சிங்கப்பூர் வில்மர் இன்டர்நேஷனல் லிமிடெட் ஆகியவை இணைந்ததே அதானி வில்மர் நிறுவனமாகும். உண்ணக்கூடிய எண்ணெய்கள் மற்றும் உணவு தானியங்கள் ஆகியவை அவற்றின் முதன்மையான தயாரிப்புகள்.
दावा: #फेसबुक पर एक वीडियो के साथ यह दावा किया जा रहा है कि सरकार ने भारतीय रेल पर एक निजी कंपनी का ठप्पा लगवा दिया है। #PIBFactCheck: यह दावा भ्रामक है। यह केवल एक वाणिज्यिक विज्ञापन है जिसका उद्देश्य केवल ‘गैर किराया राजस्व’ को बेहतर बनाना है। pic.twitter.com/vSmK8Xgdis
— PIB Fact Check (@PIBFactCheck) December 16, 2020
PIB உடைய அதிகாரப்பூர்வ டட்விட்டர் பக்கத்திலும், அதானிக்கு இரயில்கள் விற்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளதாக வணிக ரீதியான விளம்பரம் மட்டுமே என வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், இந்திய ரயில்வேக்கு சொந்தமான இரயில்களை அதானிக்கு விற்கப்பட்டு உள்ளதாக வைரலாகும் வீடியோ தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. இரயில் எஞ்சின்களில் வணிக ரீதியான விளம்பரங்களை இடம்பெறச் செய்து இரயில்வேதுறை வருவாய் ஈட்டி வருகிறது என அறிய முடிகிறது.