அதிமுகவுடன் விசிக கூட்டணி சேர்ந்ததாகப் பரவும் பொய் செய்தி !
பரவிய செய்தி
அடேங்கப்பா 5 தொகுதிகளாம்..
மதிப்பீடு
விளக்கம்
சமீபத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் தற்போது அதிமுகவுடன் விசிக கூட்டணி சேர்ந்துள்ளதாகக் கூறி, அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமியுடன், விடுதலை சிறுத்தைக் கட்சியின் தலைவரும், மக்களவை எம்பியுமான திருமாவளவன் கையில் காகிதத்துடன் நிற்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
மேலும் அதில் “திமுக கூட்டணி உடைந்தது?” என்றும் “அதிமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் ஐந்து தொகுதிக்கு உடன்பாடு” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காண முடிந்தது.
அடேங்கப்பா 5 தொகுதிகளாம் pic.twitter.com/6U7g2WCnyi
— Bhairavi Nachiyar பாண்டிய நாட்டு இளவரசி (@Bhairavinachiya) October 4, 2023
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படம் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இந்த புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டதல்ல என்பதை உறுதிசெய்ய முடிந்தது.
கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடுகையில் இந்தப் புகைப்படத்துடன், கடந்த 2019 நவம்பர் 19 அன்று தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் “சென்னை மேயர் பதவியை தலித்துகளுக்கு ஒதுக்க கோரும் திருமாவளவன்; பின்னணி என்ன?” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது. அதில், “விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஞாயிற்றுக்கிழமை தமிழக முதல் அமைச்சரை சந்தித்த பிறகு, சென்னை மாநகராட்சி மேயர் பதவியை பட்டியல் இனத்தவருக்கு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக ஊடகங்களிடம் கூறினார்.
தமிகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிற இந்த நிலையில், திருமாவளவனின் இந்த கோரிக்கை தமிழக அரசியலில் பெரும் கவனத்தை பெற்றிருக்கிறது.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதே போன்று தினத்தந்தியிலும் கடந்த 2019 நவம்பர் 19 அன்று, “எடப்பாடி பழனிசாமியுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு” என்ற தலைப்பில் இதே புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நேற்று, விசிக தலைவர் திரு.தொல்.திருமாவளவன் MP அவர்கள் சந்தித்து, பட்டியலின மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தை எளிமைப்படுத்துவது குறித்தும், தனது தொகுதி கோரிக்கைகள் குறித்தும் சந்தித்து மனு அளித்தார். pic.twitter.com/Xava9wsvHv
— CMOTamilNadu (@CMOTamilnadu) November 18, 2019
மேலும் தமிழ்நாடு முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமான CMOTamilnadu என்ற பக்கத்திலும், எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் இது குறித்து தேடியதில், கடந்த 2019 நவம்பர் 18 அன்று இந்தப் புகைப்படத்தை குறிப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது. அதில், “மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நேற்று, விசிக தலைவர் திரு.தொல்.திருமாவளவன் MP அவர்கள் சந்தித்து, பட்டியலின மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தை எளிமைப்படுத்துவது குறித்தும், தனது தொகுதி கோரிக்கைகள் குறித்தும் சந்தித்து மனு அளித்தார்.” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக, அதிமுகவுடன் விசிக கூட்டணி இல்லை என அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு தெரிவித்து இருந்தார்.
முடிவு:
நம் தேடலில், எடப்பாடி பழனிச்சாமியுடன் எம்.பி திருமாவளவன் கூட்டணி சேர்ந்ததாகப் பரவி வரும் புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டது அல்ல என்பதையும், கடந்த 2019-ல் எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் என்பதையும் அறிய முடிகிறது.