அகமதாபாத்தின் பட்டம் விடும் விழாவில் குழந்தை பட்டத்தோடு பறந்ததாக பரவும் தவறான செய்தி !

பரவிய செய்தி

அகமதாபாத்தில் , பட்டம் விடும் விழாவில், 3 வயது குழந்தை பட்டத்தோடு பறந்து சென்ற காட்சியால் அதிர்ச்சி

Twitter link | Archive link

மதிப்பீடு

விளக்கம்

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் நடைபெற்ற பட்டம் விடும் விழாவில் பலத்த காற்றில் 3 வயது குழந்தை மிகப்பெரிய பட்டத்தோடு பறந்து, பின்னர் சிறிது நேரத்தில் தப்பி பிழைத்ததாக 51 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவை ஜெயா பிளஸ் செய்தியாகவும் வெளியிட்டு உள்ளது.

உண்மை என்ன ? 

குழந்தை பட்டத்தின் வால் பகுதியை பிடித்துக் கொண்டு உயரத்தில் பறக்கும் வீடியோ குறித்து தேடும் போது, ” பட்டம் பறக்க விடும் போட்டியின் போது வேடிக்கை பார்த்த 3 வயது சிறுவன் பட்டத்தின் நூல் சிக்குண்டு பட்டத்துடன் வானில் பறந்தது பரபரப்பு செய்தியாக பரப்பப்பட்டு வருகிறது. தைவான் தலைநகர் தைப்பேயில் நடந்த சம்பவம் இது.. ” என 2020 செப்டம்பர் 1ம் தேதி Hello FM முகநூல் பக்கத்தில் இதே வீடியோ பதிவாகி இருக்கிறது.

பட்டத்தோடு குழந்தை

Facebook link

மேற்கொண்டு தேடுகையில், ” 202௦ ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி தைவானின் வடக்கு நகரமான ஹ்சின்சு பகுதியில் நடைபெற்ற பட்டம் விடும் விழாவில், 3 வயது பெண் குழந்தை பட்டத்தின் வால் பகுதியை பிடித்த நிலையில் மேலே பறந்த சம்பவம் நிகழ்ந்து உள்ளது. அதீத காற்றின் வேகத்தால் குழந்தை பட்டத்துடன் சுற்றி பறந்து பின்னர் பார்வையாளர்களால் மீட்கப்பட்டு உள்ளார். இதனால் அந்த குழந்தைக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து,  பட்டம்  விடும் திருவிழா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக ” SCMP Clips  எனும் யூடியூப் சேனலில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டே குழந்தை பட்டத்துடன் பறக்கும் வீடியோ தமிழ் மொழி உள்பட சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. ஆனால், அதே வீடியோவை தற்போது அகமதாபாத் பகுதியில் நிகழ்ந்ததாக தவறாக பரப்பி வருகிறார்கள்.

மேலும் படிக்க : கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் சிறுத்தைகள் நுழைந்ததாகப் பரவும் வதந்தி வீடியோ!

மேலும் படிக்க : மும்பை டூ நாக்பூர் விரைவுச் சாலை என தாய்லாந்து சாலைப் படத்தை பதிவிட்ட தினமலர் !

இதற்கு முன்பாகவும், பிற நாடுகளில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இந்தியாவில் நிகழ்ந்தது போன்று தவறாகப் பரவியது குறித்தும் பல கட்டுரைகளை நாம் வெளியிட்டு இருக்கிறோம்.

முடிவு : 

நம் தேடலில், அகமதாபாத்தில் பட்டம் விடும் விழாவில், 3 வயது குழந்தை பட்டத்தோடு பறந்து சென்ற காட்சியால் அதிர்ச்சி எனப் பரப்பப்படும் வீடியோ இந்தியாவில் நிகழ்ந்தது அல்ல. அந்த வீடியோ கடந்த 2020ம் ஆண்டு தைவான் நாட்டில் எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Sanmuga Raja

Sanmuga Raja working as Senior Sub-Editor at YouTurn since May 2017. He holds a Bachelor’s degree in Engineering. His role is to analyze and obtain valid proof for social media and other viral hoaxes, then write articles based on the evidence. In obtaining the proof for claims, he also interviews people to verify the facts.
Back to top button
loader