உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்ட வீரர்கள் எனத் தவறாகப் பரப்பப்படும் AI படம் !
பரவிய செய்தி
போர்வெல் குழாய் கிணற்றில் விழுந்த தமிழக சிறுவனை உயிருடன் மீட்க முடியாமல் திராவிட மாடல் தோல்வியடைந்தது. ஆனால் சுரங்க விபத்தில் சிக்கித் தவித்த தொழிலாளர்களை உயிருடன் மீட்டது தேசிய மாடல்! நரேந்திர மோடி அரசிற்கு பாராட்டுக்கள்.
மதிப்பீடு
விளக்கம்
உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி அருகே அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுரங்கத்தில் 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் நேற்று வெற்றிகரமாக மீட்கப்பட்டனர். இதற்கு உத்தரகாண்ட் நிர்வாகம், SDRF, NDRF, MoRTH, NHIDCL, NHAI, BRO துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் உட்பட ஆஸ்திரேலியாவின் மீட்பு நிபுணரான அர்னால்ட் டிக்ஸ் ஆகியோரின் விடாமுயற்சிகளே முக்கிய காரணமாக அமைந்தன.
இந்நிலையில், “நரேந்திர மோடி அரசிற்கு பாராட்டுக்கள்” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை அர்ஜுன் சம்பத் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இந்தப் புகைப்படத்தை ஒன்றிய ரயில்வே அமைச்சரான அஷ்வினி வைஷ்ணவ் உட்பட, பாஜகவினர் பலரும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருவதையும் காண முடிந்தது.
கடந்த நவம்பர் 12ம் தேதி உத்தரகாண்ட் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து அதில் சிக்கிய 41 பணியாளர்களையும் சுமார் 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்டுள்ள தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இது நம் தேசத்தின்… pic.twitter.com/5AjueNJlyc
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) November 28, 2023
Pic of the day! pic.twitter.com/FN5IDDz9gh
— S.R.SEKHAR (@SRSekharBJP) November 28, 2023
மேலும் பரவி வரும் புகைப்படத்தின் நடுவே ஆஸ்திரேலியாவின் மீட்பு நிபுணரான அர்னால்ட் டிக்ஸ் நிற்பது போன்றும், அவரை சுற்றி மற்ற வீரர்கள் இந்தியக் கொடியை பிடித்துக்கொண்டிருப்பது போன்றும் உள்ளது.
உண்மை என்ன ?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது உண்மையான புகைப்படம் அல்ல என்பதை அறிய முடிந்தது.
இந்த புகைப்படம் AI மூலம் உருவாக்கப்பட்டதா என்பதை அறிய, hivemoderation இணையதளத்தில் பரவி வரும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து ஆய்வு செய்து பார்த்தோம். அதில் இந்த புகைப்படம் 99.9% AI மூலம் தான் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நமக்கு தெளிவுபடுத்தியது.
இந்தப் புகைப்படம் முதன்முதலில் Exclusive Minds என்ற எக்ஸ் பக்கத்தில் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் பரவி வரும் புகைப்படத்துடன் சேர்ந்து, சுரங்க தொழிலாளர்கள் மீட்கப்பட்டது குறித்து மேலும் மூன்று படங்களையும் இடம்பெற்றுள்ளன. இந்த 4 படங்களுமே AI தொழில்நுட்பம் கொண்டே உருவாக்கப்பட்டு, Exclusive Minds என்று ஒவ்வொரு படத்திலும் குறிப்பிடப்பட்டிருந்தன.
— Exclusive Minds (@Exclusive_Minds) November 28, 2023
அது போக, Exclusive Minds-ன் எக்ஸ் பக்கத்தில் மேலும் பல AI படங்களும் உருவாக்கப்பட்டு, பகிரப்பட்டிருந்ததையும் காண முடிந்தது.
மேலும் படிக்க: உத்தரகாண்ட் சுரங்கத்தில் தொழிலாளர்களை மீட்கும் காட்சி எனப் பழைய வீடியோவை பரப்பும் அமர்பிரசாத் !
இதற்கு முன்பும் உத்தரகாண்ட் சுரங்க மீட்பு நடவடிக்கைகள் என்று குறிப்பிட்டு பல செய்திகள் சமூக ஊடகங்களில் தவறாகப் பரவின. அது குறித்தும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகளாக வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: உத்தரகாசி சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளி எனப் பரவும் தவறான புகைப்படம் !
மேலும் படிக்க: உத்தரகாசியில் சுரங்கப்பாதை அமைக்கும் நிறுவனம் அதானிக்கு சொந்தமானதா ?
முடிவு :
நம் தேடலில், உத்தரகாசி சுரங்கத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்ட வீர்கள் என்று குறிப்பிட்டு பரப்பப்படும் புகைப்படம் உண்மையானது அல்ல என்பதையும், அது AI தொழில்நுட்பத்தின் உதவியால் உருவாக்கப்பட்ட படம் என்பதையும் அறிய முடிகிறது.