This article is from May 13, 2020

கட்டணம் பெற்றதால் ஏர் இந்தியா விமானத்தை கத்தார் திருப்பி அனுப்பியதா ?| மறுக்கும் இந்திய தூதரகம்.

பரவிய செய்தி

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் கத்தாருக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் திருப்பிவிடப்பட்டது. கத்தாரில் சிக்கியுள்ள இந்தியர்களை இலவசமாக நாட்டிற்கு அழைத்து வருவதாக கத்தார் அரசிடம் கூறிவிட்டு பயணிகளிடம் கட்டணம் வசூல் செய்யப்பட்டதால் கத்தார் அரசு விமானம் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டு திருப்பிவிடப்பட்டது.

Facebook link | archive link

மதிப்பீடு

விளக்கம்

கத்தார் நாட்டில் உள்ள இந்தியர்களை மீட்பதற்கு ஏர் இந்தியா தோஹா செல்ல கத்தார் அரசு அனுமதி வழங்கி இருந்தது. ஆனால், இலவசமாக மக்களை மீட்பதாக கத்தார் அரசிடம் இருந்து சலுகைகளை பெற்றுக் கொண்டு பயணிகளிடம் கட்டணம் பெற்றதால் இந்திய விமானத்தை தரையிறங்க விடாமல் கத்தார் அரசு திருப்பி அனுப்பி வைத்துள்ளதாக ஓர் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வந்தே பாரத் மிஷன் சார்பில் கத்தாரில் உள்ள இந்தியர்களை அழைத்து வர கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து தோஹாவிற்கு ஏர் இந்தியா விமானம் மே 10-ம் தேதி சென்றது. மே 10-ம் தேதி வெளியான செய்தியில், விமானம் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதை திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஏர்லைன் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஆனால், கத்தார் அதிகாரிகள் அனுமதி மறுத்ததற்கு காரணம் தெரியவில்லை எனக் குறிப்பிட்டு இருந்தது. எனினும், ரத்து செய்யப்பட்ட விமான சேவை செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்து இருந்தார்கள்.

மே 10-ம் தேதி கத்தாரில் உள்ள இந்திய தூதரகத்தின் ட்விட்டர் பக்கத்தில், ” எதிர்பாராதவிதமாக இன்று தோஹாவில் இருந்து திருவனந்தபுரம் செல்ல இருந்த IX-374 விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்படுகிறது ” எனத் தெரிவிக்கப்பட்டது.

Twitter link | archive link

இந்திய விமானம் ரத்து செய்யப்பட்டதற்கு தொழில்நுட்ப கோளாறு காரணம் என இந்திய தூதரகம் தெரிவித்து இருந்தது. ஆனால், சில மலையாள செய்தி இணையதளங்களில்  இந்திய அரசு கட்டணம் பெற்றதன் காரணமாக கத்தார் அரசு ஏர்இந்தியா விமானத்தை தரையிறங்க அனுமதி மறுத்ததாக வெளியிட்டனர். மேலும், அதை அடிப்படையாக வைத்து சில மலையாள யூடியூப் சேனல்களில் வீடியோக்களை வெளியிட்டு உள்ளனர். இதையடுத்து, தமிழிலும் சமூக வலைதளங்களில் வைரலாகத் தொடங்கியது.

இவ்வாறு பரவியத் தகவலை கத்தார் இந்திய தூதரகம் மறுத்து மே 11-ம் தேதியே ட்வீட் செய்து இருக்கிறது.

Twitter link | archive link

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வரும் விமான சேவை இலவசமாக வழங்கப்படவில்லை. கட்டணத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Facebook link | archive link

விமான சேவையில் அனுபவம் வாய்ந்த சஞ்சீவ் கபூர் ஊடகங்களுக்கு ஓர் தகவலை அளித்து இருந்தார். பிற நாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வரும் இந்திய அரசின் பணியை “Evacuation” என்றே ஊடங்களில் குறிப்பிட்டு வருகிறார்கள். தற்போது மேற்கொள்ளப்படும் விமான சேவை Evacuation அல்ல, Repatriation என்றுக் குறிப்பிட்டு இருந்தார். அதாவது, தற்போது உள்ள சேவைக்கு வழக்கம் போல் கட்டணம் பெறப்படும் எனக் கூறியுள்ளார். அதையே, கத்தார் இந்திய தூதரகம் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையும் தெரிவிக்கிறது.

Twitter link | archive link

இலவசம் எனக் கூறி மக்களிடம் கட்டணத்தை பெற்றதன் காரணமாகவே கத்தார் அரசு ஏர்இந்தியா விமானத்தை தரையிறங்க அனுமதிக்கவில்லை எனக் கூறும் தகவல்களுக்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை. மேலும், அவ்வாறு பரவிய தகவலை கத்தார் இந்திய தூதரகம் வதந்தி எனத் தெரிவித்து உள்ளது. வெளிநாட்டு வாழ் இந்தியர்களை அழைத்து வருவதற்கு கட்டணம் பெறப்படுகிறது என்பது உண்மை.

முடிவு : 

நம் தேடலில், தோஹாவிற்கு சென்ற இந்திய விமானம் தரையிறங்காமல் திரும்பி வந்தது உண்மையே. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருப்பி விடப்பட்டதாக இந்திய தூதரகம் தரப்பில் தெரிவித்ததோடு, பரவிய செய்திகளை வதந்தி எனத் தெரிவித்து உள்ளது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader