அஜய் தேவ்கன் ராமர் கோவிலுக்கு 18 கோடி நன்கொடை அளித்தாரா ?
பரவிய செய்தி
ராமர் கோயிலுக்கு 18 கோடி கொடுத்த ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கன் !
மதிப்பீடு
விளக்கம்
அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு நன்கொடை பெறும் பணிகள் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் கோடிக்கணக்கில் நன்கொடைகள் மற்றும் கட்டுமானத்திற்கு தேவையான பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பாலிவுட் திரைப்பட நடிகரான அஜய் தேவ்கன் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு 18 கோடியை நன்கொடையாக கொடுத்து உள்ளதாக சமூக வலைதளங்களில் பாராட்டி பகிர்ந்து வருகிறார்கள்.
ராமர் கோயிலுக்கு 18 கோடி கொடுத்த ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கன் 🙏 pic.twitter.com/YI600WGdTs
— Sk Palanikumar Yadav🚩 (@p_nikumar) February 22, 2021
உண்மை என்ன ?
ராமர் கோவில் அறக்கட்டளையின் நன்கொடை திரட்டும் பணிக்கு பங்களிப்பை அளிக்கும் பிரபலங்கள் குறித்து செய்திகளில் வெளியாவதுண்டு. அதேபோல், அஜய் தேவ்கன் நன்கொடை அளித்த தருணங்களில் கூட அது செய்திகளில் கவனம் பெற்று இருக்கிறது.
ஆனால், அஜய் தேவ்கன் ராமர் கோவிலுக்கு நன்கொடை அளித்ததாக எந்தவொரு செய்தியும், அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை. நன்கொடை பெறும் அறக்கட்டளை தரப்பிலும் அப்படியொரு தகவல் வெளியாகவில்லை.
இதுகுறித்து தேடுகையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திலும் அஜய் தேவ்கன் ராமர் கோவிலுக்கு 15 கோடியை நன்கொடையாக அளித்ததாக சமூக வலைதளங்களில் பரவி இருக்கிறது. ஆனால், அது உண்மை இல்லை.
Sincere thanks 🙏#TanhajiUnitesIndia #TanhajiTheUnsungWarrior pic.twitter.com/LItIb9BR4M
— Ajay Devgn (@ajaydevgn) January 11, 2020
2020 ஜனவரி 11-ம் தேதி தன் ட்விட்டர் பக்கத்தில், அப்போது வெளியான Tanhaj The Unsung Warrior எனும் திரைப்படம் தொடர்பாக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அத்திரைப்படம் வெளியான தருணத்தில் தான், அவர் ராமர் கோவிலுக்கு 15 கோடி நன்கொடை அளிப்பதாக வதந்திகள் பரவி இருக்கிறது.
கடந்த ஆண்டில் இப்படியொரு வதந்தி பரவத் தொடங்கிய பிறகு, டைம்ஸ் ஆப் இந்தியாவின் பொழுதுபோக்கு பிரிவில் ” இது வதந்தி ” என வெளியிட்டு இருக்கிறார்கள். கடந்த ஆண்டில் இந்தி உள்ளிட்ட மொழிகளில் பரவிய வதந்தியை மீண்டும் தற்போது தமிழில் பரப்பி வருகிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்திற்கு பாலிவுட் நடிகர் 18 கோடி நன்கொடை அளித்ததாக பரவும் தகவல் வதந்தியே என அறிய முடிகிறது.