அணுவைக் கண்டுபிடித்தவர் ஆல்ஃபிரட் நோபல் என சீமான் கூறிய பொய் !
![](https://youturn.in/wp-content/uploads/2024/04/seeman-Fact-Check-Thumbnail-1920x1080.jpg)
பரவிய செய்தி
அணுவை கண்டுபிடித்தவர் ஆல்பிரட் நோபல். அவர் தன் பெயரிலேயே ஒரு பரிசையும் அறிவித்து சென்றுள்ளார். அது தான் உலகிலேயே உயரிய பரிசான நோபல் பரிசு – சீமான், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்
மதிப்பீடு
விளக்கம்
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவினா ரூஸ்ஜேனை ஆதரித்து தூத்துக்குடியில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மார்ச் 30 அன்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர், “உலகிலேயே பாதுகாப்பான அணு என்ற ஒன்றே கிடையாது என்று அணு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அணுவைக் கண்டுபிடித்தவர் ஆல்ஃபிரட் நோபல். இது உலகிற்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று தெரிந்து, தன் பெயரிலேயே ஒரு பரிசையும் அறிவித்து சென்றுள்ளார், அது தான் உலகிலேயே உயரிய பரிசான நோபல் பரிசு” என்றும் பேசியுள்ளதைக் காண முடிகிறது.
உண்மை என்ன?
சீமான் பேசிய செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், அணுவைக் கண்டுபிடித்தவர் ஆல்ஃபிரட் நோபல் அல்ல என்பதை அறிய முடிந்தது.
யார் இந்த ஆல்ஃபிரட் நோபல்?
21 அக்டோபர் 1833 அன்று ஸ்வீடன் நாட்டில் பிறந்த ஆல்ஃபிரட் நோபல், ஒரு கண்டுபிடிப்பாளர், தொழில்முனைவோர், விஞ்ஞானி மற்றும் தொழிலதிபர் ஆவார். இவர் 1866 இல் டைனமைட் (dynamite) எனும் வெடிபொருளை கண்டுபிடித்தார். 1895 இல் அவர் தனது கடைசி உயிலை எழுதியபோது, தனது சொத்தின் பெரும்பான்மையான பகுதியை நோபல் பரிசு வழங்குவதற்காக ஐந்து பகுதிகளாகப் பிரித்து எழுதி வைத்தார். அதன்படி, 1901 ஆம் ஆண்டு முதல், இயற்பியல், வேதியியல், உடலியல் அல்லது மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதிக்கான பணிகளில் சிறந்த சாதனைகளை செய்து வரும் மக்களை கவுரவித்து, நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் அணுவைக் கண்டுபிடித்தவர் ஜான் டால்ட்டன். அணு எடைகள் மற்றும் அணு கட்டமைப்புகளை கணக்கிடுவதற்கான முறைகளையும், பகுதி அழுத்தங்களின் விதிகளையும் (Law of Partial Pressures) இவர் உருவாக்கினார். 1808 ஆம் ஆண்டு அணுவைப் பற்றி இவர் முன்மொழிந்த அணுவின் கோட்பாட்டை வைத்து தான், ஜே.ஜே.தாம்சன், எர்னஸ்ட் ரூதர்போர்ட், நீல்ஸ் போர் உள்ளிட்ட பல அறிவியலாளர்கள் அணுவைப் பற்றிய புரிதலை மேலும் விரிவாக்கம் செய்துள்ளனர்.
எனவே அணுவைக் கண்டுபிடித்தவர் ஆல்ஃபிரட் நோபல் என்று சீமான் கூறிய தகவல்கள் முற்றிலும் தவறானவை.
மேலும் படிக்க: வேதாந்தா குழுமத்திடம் இருந்து திமுக பணம் பெற்றதாக சீமான் சொன்ன பொய்!
இதற்கு முன்பும் சீமான் பேசிய தவறான செய்திகள் குறித்து, நம் பக்கத்தில் பல கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: 37,554 அரசு பள்ளிகள் உள்ள தமிழ்நாட்டில் தமிழ் படிக்க பள்ளிக்கூடங்கள் இல்லை எனப் பொய் சொல்லும் சீமான்!
முடிவு:
நம் தேடலில், அணுவைக் கண்டுபிடித்தவர் ஆல்ஃபிரட் நோபல் என சீமான் கூறியது தவறான தகவல் என்பது தெளிவாகிறது. அணுவைக் கண்டுபிடித்தவர் ஜான் டால்ட்டன். இவர் முன்மொழிந்த அணுவின் கோட்பாட்டை வைத்து தான் அறிவியலாளர்கள் பலரும் அணு பற்றிய ஆராய்ச்சிகளை விரிவாக்கம் செய்துள்ளனர்.