கல்வி அமைச்சருக்காக காத்திருந்ததா ஆம்புலன்ஸ்.. பாலத்தைப் பற்றி தெரியாமல் செய்தி வெளியிட்ட தினமலர் !
பரவிய செய்தி
கல்வி அமைச்சர் கார் செல்ல காத்திருந்த ஆம்புலன்ஸ்
மதிப்பீடு
விளக்கம்
கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் ஏற்பட்டு உள்ள வெள்ள பாதிப்புகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்ய கும்பகோணம் அணைக்கரை பகுதிக்கு 25 கார்களுடன் சென்ற போது, பாலத்தின் மறுபக்கத்தில் வந்த ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் நீண்ட நேரம் காத்திருந்தாக வைரல் வீடியோ குறித்து தினமலர் நாளிதழ் செய்தி ஒன்றை வெளியிட்டது.
அமைச்சர் அன்பில் மகேஷ் வாகனங்கள் செல்வதற்காக ஆம்புலன்ஸ் நீண்ட நேரம் காத்திருந்ததாக தினமலரின் செய்தியை தமிழக பாஜகவினர் சமூக வலைதளங்களில் வைரல் செய்து வருகின்றனர். தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர்,” இதெல்லாம் எத்தனை நாளைக்கு அன்பில் மகேஷ் ?” என ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார் . இந்த வீடியோ தற்போது இந்தியா டுடே உள்ளிட்ட ஆங்கில ஊடகங்களிலும் வெளியாகி வருகிறது.
இதெல்லாம் எத்தனை நாளைக்கு @Anbil_Mahesh …? pic.twitter.com/kloDHsSBjn
— CTR.Nirmal kumar (@CTR_Nirmalkumar) August 8, 2022
தஞ்சை; விடியா அரசின் அமைச்சர் #அன்பில்_மகேஷ் வாகனம் வருவதால் நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்ட ஆம்புலன்ஸ்!!
காவல்துறையினருக்கு மனசாட்சி இல்லை போல!! pic.twitter.com/MjGaX1TGHH
— Real Pix (@RealPix10) August 7, 2022
உண்மை என்ன ?
கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்லும் வழியில் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அணைக்கரையில் உள்ள பாலம் பல ஆண்டுகளாக ஒரு வழிப் பாதையாகவே இருந்து வருகிறது. ஒரு பக்கத்தில் இருந்து வாகனங்கள் வரும் போது எதிராக வாகனங்கள் செல்வது கடினம். ஆகையால், மறுபக்கத்தில் வாகனங்கள் வரும் காத்திருந்தே செல்ல முடியும். அந்த பாலத்தில் போக்குவரத்தை நெறிப்படுத்த காவலர்களும் பணியில் இருப்பார்கள். இது அந்த வட்டார மக்களுக்கு நன்கு தெரியும்.
அணைக்கரை பாலத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அதிகாரிகள் வரும் கார்கள் முன்பே நுழைந்து விட்டதால் எதிரே வந்த ஆம்புலன்ஸ் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பாக அணைக்கரை பாலத்தில் விரிசல்கள் ஏற்பட்டதால் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. பின்னர், 3 ஆண்டுகளுக்கு பிறகு 2021-ல் இருந்து பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது.
முடிவு :
நம் தேடலில், கும்பகோணம் அணைக்கரை பாலம் ஒரு வழிப் பாதை என அறியாமல், கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கார்கள் செல்வதற்காக நீண்ட நேரம் ஆம்புலன்ஸ் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளதாக ஆம்புலன்ஸ் காத்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தவறாகப் பரப்பப்பட்டு வருகிறது என அறிய முடிகிறது.