எதிர்க்கட்சிகள் தேர்தல் பத்திரம் மூலம் 14,000 கோடி நிதி வாங்கியதாக அமித்ஷா சொன்ன பொய் !

பரவிய செய்தி

மொத்தம் வாங்கப்பட்ட ரூ.20,000 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களில் ரூ.6,000 கோடி பாஜகவிற்கு வந்துள்ளது என்றால், மீதம் ரூ.14,000 கோடி எதிர்க் கட்சிகள் பெற்றுள்ளது. – அமித் ஷா

X link

மதிப்பீடு

விளக்கம்

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தேர்தல் பத்திரங்கள் பற்றிய தரவுகளை இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. அத்தரவுகளைத் தேர்தல் ஆணையம் தனது அதிகாரப் பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. 

அதிகப்படியாகத் தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக ரூ.6,060 கோடி பெற்றுள்ள தகவல் தெரியவந்ததும் பல்வேறு தரப்பினரும் தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். 

இது குறித்து இந்தியா டுடே நிகழ்ச்சியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், மொத்தம் வாங்கப்பட்ட 20,000 கோடி ரூபாயில் பாஜகவிற்கு 6,000 கோடி ரூபாய் வந்துள்ளது. மீதம் எதிர்க் கட்சிகள் தானே பெற்றுள்ளன எனக் கூறியுள்ளார். அமித்ஷா பேசியதை பாஜகவின் ஐடி விங் தேசிய தலைவர் அமித் மாளவியா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உண்மை என்ன?

ஒட்டு மொத்தமாக 20,000 கோடி ரூபாய்க்குத் தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாக எந்த ஊடகத்திலும் செய்தி வெளியாகவில்லை. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப் பூர்வ பக்கத்தில் உள்ள தரவுகளிலும் அப்படி எந்த தொகையும் இல்லை. 

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவிடம் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலைக் கொண்டு ‘Scroll’ இணையதளம் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில், 2018 மார்ச் மாதம் முதல் 2024 பிப்ரவரி மாதம் வரை ஒட்டு மொத்தமாக 28,030 தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகியுள்ளது. அதன் மதிப்பு 16,518 கோடி ரூபாய் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனால், தற்போது 12.04.2019 முதல் 15.02.2024 வரை வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் பற்றிய விவரங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. அக்காலகட்டத்தில் வாங்கப்பட்ட 18,871 பத்திரங்களின் மதிப்பு ரூ.12,516 கோடி. 

மேலே குறிப்பிட்ட காலகட்டத்திற்கு முன்பாக 2018 மார்ச் முதல் 2019 ஏப்ரல் 11ம் தேதி  வரை வாங்கப்பட்ட 9,159 தேர்தல் பத்திரங்களின் விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. இதன் மதிப்பு ரூ.4,002 கோடி. வெளியிடப்பட்ட மற்றும் வெளியிடப்படாத பத்திரங்களின் மொத்த தொகையே ரூ.16,518 கோடி என்னும் பட்சத்தில், ஒன்றிய உள்துறை அமைச்சர் சொல்வது போல் ரூ.20,000 கோடிக்கு எப்படித் தேர்தல் பத்திரம் விற்கப்பட்டது?

அடுத்தபடியாக, ஏற்கனவே வெளியிடப்பட்ட தேர்தல் பத்திரங்களில் பாஜகவுக்குக் கிடைத்த பணம் ரூ.6060 கோடி. மொத்த மதிப்பில் இது 47.5 சதவீதமாகும். இன்னும் வெளியிடப்படாத 9,159 பத்திரங்கள் பற்றிய விவரம் வெளிவரும் பட்சத்தில், அதிலும் பாஜகவின் பங்கு இருக்கும்.

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக எஸ்.பி.ஐ வெளியிட்ட தரவுகளில் அமித் ஷா சொல்வது போல் 20,000 கோடி ரூபாய் என எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. அவர் கூறியது தவறான தகவல். 

முடிவு :

மொத்தம் வாங்கப்பட்ட ரூ.20,000 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களில் ரூ.6,000 கோடி பாஜகவிற்கு வந்துள்ளது என்றால், மீதம் ரூ.14,000 கோடி எதிர்க் கட்சிகள் பெற்றுள்ளது என அமித் ஷா கூறிய தகவல் உண்மை அல்ல. அதிகாரப் பூர்வமாக 16,518 கோடி ரூபாய்க்கு மட்டுமே தேர்தல் பத்திரம் விற்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ரூ.12,516 கோடிக்கான தரவுகள் மட்டுமே இதுவரையில் வெளியிடப்பட்டுள்ளது. 

Please complete the required fields.




ஆதாரம்

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader