காங்கிரசுக்கு ஓட்டுப் போட்டாலும் அது காங்கிரசுக்குப் போகாது என அமித்ஷா EVM குறித்துப் பேசியதாப் பரவும் தவறான தகவல்!
பரவிய செய்தி
வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாரிக்கும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பாஜகவைச் சேர்ந்த 4 பேர் இயக்குனர்களாக தற்போதும் தொடர்கின்றனர் – ஆர்.டி.ஐ
“நீங்க காங்கிரசுக்கு ஓட்டு போட்டாலும் அது காங்கிரசுக்கு போகாது” பூகம்பத்தை கிளப்பிய அமித் ஷா
மதிப்பீடு
விளக்கம்
வாக்குப் பதிவு இயந்திரங்கள் தொடர்பாக எதிர்க் கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. இந்நிலையில் ’வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தயாரிக்கும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பாஜகவைச் சேர்ந்த 4 பேர் இயக்குனராகத் தொடர்கின்றனர் என ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்துள்ளது’ என்கிற செய்தியும் ’நீங்க காங்கிரசுக்கு ஓட்டு போட்டாலும் அது காங்கிரசுக்கு போகாது – பூகம்பத்தை கிளப்பிய அமித் ஷா’ என்கிற செய்தியும் அடங்கிய படம் ஒன்று திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரவக் கூடிய படத்தில் ’கலைஞர் செய்திகள்’ மற்றும் ’தந்தி டிவி’ என இரண்டு ஊடகங்களின் செய்திகள் இருப்பதைக் காண முடிகிறது. ஒன்றிய அமைச்சர் அமித் ஷா பேசியதாக உள்ள வார்த்தைகளைக் கொண்டு இணையத்தில் தேடினோம்.
கடந்த 2023, நவம்பர் 28ம் தந்தி டிவியின் யூடியூப் பக்கத்தில் இதே தலைப்பில் செய்தி ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில், ’தெலங்கானா மாநிலம் கரீம்நகரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அமித் ஷா பரப்புரை மேற்கொண்டார். அப்போது காங்கிரசுக்குப் போடும் ஒவ்வொரு ஓட்டும் BRS (Bharat Rashtra Samithi) கட்சிக்கே போகும் என்று தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலில் சந்திரசேகர் ராவ் மீண்டும் முதலமைச்சராக வருவதற்குக் காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கும் என்றும் நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியைப் பிரதமராக்குவதற்கு BRS கட்சி ஆதரவு தெரிவிக்கும் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்’ என்றுள்ளது.
கடந்த ஆண்டு தெலங்கானாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது BRS, காங்கிரஸ், பாஜக தனித்தனியாகப் போட்டியிட்டன. அத்தேர்தலையொட்டி பிரச்சாரம் செய்த அமித் ஷா, காங்கிரசுக்கு ஓட்டுப் போட்டாலும் அவர்கள் கடைசியில் BRS-க்கு தான் ஆதரவு தெரிவிப்பார்கள். எனவே காங்கிரசுக்குப் போடக்கூடிய ஓட்டு காங்கிரசுக்குப் போகாது எனப் பேசியுள்ளார்.
அடுத்தபடியாக கலைஞர் செய்தியில் குறிப்பிட்டுள்ள வாக்கு இயந்திரம் தொடர்பான செய்தியைத் தேடினோம். கடந்த பிப்ரவரி 20ம் தேதி அவர்களது யூடியூப் பக்கத்தில் இது தொடர்பான செய்தி பதிவிடப்பட்டுள்ளது. அதில், வாக்குப் பதிவு இயந்திரத்தைத் தயாரிக்கும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் 7 indipendente இயக்குனர்களில் 4 பேர் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் இன்னாள் முக்கிய தலைவர்கள் என்பது தெரிய வந்துள்ளதாக’ கூறப்படுகிறது.
இத்தகவலை மும்பையைச் சேர்ந்த அஜய் போஸ் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் பெற்றார் என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பெயரைக் கொண்டு தேடியதில் அஜய் போசின் எக்ஸ் பக்கத்தில் அந்த RTI பதில் இருப்பதைக் காண முடிந்தது.
RTI reply recvd 4m BEL ( Bharat Electronics Ltd) which Manufactures & Supplies EVMs( Electronic Voting Machines) has 7 Independent Directors appointed by Ministry of Defence Govt of India
But what is interesting out of these 7 Independent Directors atleast 4 have been or are… pic.twitter.com/CD4Nj8JQYg— AJAY BOSE (@AjayBos93388306) February 20, 2024
அவரது பதிவில் indipendent இயக்குனர்களில் உள்ள 4 பாஜக தலைவர்களின் பெயர்கள் மற்றும் பொறுப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
- Dr. P V. பார்த்தசாரதி – பாஜகவின் OBC அணி தேசிய செயலாளர்.
- கச்சாரியா மன்சுக்பாய் ஷாம்ஜிபாய் – குஜராத், ராஜ்கோட் மாவட்ட பாஜக முன்னாள் தலைவர்
- Dr.சிவ்நாத் யாதவ் – உத்தரப் பிரதேச பாஜகவின் முன்னாள் துணைத் தலைவர்
- ஷியாமா சிங் – பீகார் பாஜக முன்னாள் துணைத் தலைவர்
இவர்களது சமூக வலைத்தள பக்கங்களை ஆய்வு செய்ததில் அவர்கள் பாஜகவின் முன்னாள் இன்னாள் தலைவர்கள் என்பதை உறுதி செய்ய முடிந்தது.
இப்படி இரண்டு வேறுபட்ட செய்திகளை ஒன்றிணைத்து ஒரு தவறான செய்தியை சமூக ஊடகங்களில் பரப்புகின்றனர்.
முடிவு :
நீங்கள் காங்கிரசுக்கு ஓட்டுப் போட்டாலும் அந்த ஓட்டு காங்கிரசுக்குப் போகாது என அமித்ஷா தெலங்கானா தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதையும் வாக்குப் பதிவு இயந்திரத்தைத் தயாரிக்கும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன இயக்குனர்களில் பாஜக தலைவர்கள் இருப்பது தொடர்பாக வெளியான ஆர்.டி.ஐ தகவலையும் ஒன்றாகச் சேர்த்து தவறான செய்தி பரப்பப்படுகிறது.