இந்தியாவில் முதல் ஐஐடி, எய்ம்ஸ் உள்ளிட்டவையை பாஜகதான் நிறுவியது என அமித்ஷா கூறியதாகப் பொய் பரப்பும் காங்கிரஸ் மற்றும் திமுக !
பரவிய செய்தி
NIT, IIT, IIIT, IIM, AIIMS அனைத்தும் முதன் முதலில் இந்தியாவில் பாஜக அரசால் கட்டப்பட்டது. – அமித்ஷா (சத்திஸ்கர்). 1980’ல் தான் பிஜேபி கட்சியே ஆரம்பிக்கப்பட்டது. முதல் IIT – 1950, முதல் IIM – 1961, முதல் AIIMS – 1958 தொடங்கப்பட்டது.
மதிப்பீடு
விளக்கம்
உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித்ஷா சத்தீஸ்கரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது, இந்தியாவில் முதன் முதலில் பாஜக தான் NIT, IIT, IIIT, IIM, AIIMS ஆகியவற்றை அமைத்தது எனப் பொய் பேசியுள்ளார். பாஜக என்கிற கட்சி தொடங்குவதற்கு முன்னரே ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் ஆகியவை இந்தியாவில் தொடங்கப்பட்டு விட்டது என அமித்ஷா பேசிய 18 வினாடி வீடியோவுடன் ஒரு தகவலை திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் இசை முதற்கொண்டு பலரும் பரப்பி வருகின்றனர்.
அமித் ஷா பிறந்தது -1964
பாஜக உருவாக்கப்பட்டது -1980
சத்தீஸ்கர் உருவாக்கப்பட்டது -2000முதல் ஐஐடி – 1950
முதல் ஐஐஎம் – 1961
முதல் எய்ம்ஸ் – 1956சத்தீஸ்கரில் அமித் ஷா – என்ஐடி, ஐஐடி, ஐஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் அனைத்தும் முதன்முதலில் இந்தியாவில் பாஜக அரசால் கட்டப்பட்டது என்கிறார்.… pic.twitter.com/otT66809su
— ஜெயசந்திரன் திமுக 🖤♥️ (@jaya2016maha) October 17, 2023
இதே வீடியோவை காங்கிரஸ் கட்சி தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அமித்ஷா பொய்யான தகவலை மேடையில் பேசியதாகப் பதிவிட்டுள்ளது.
झूठ बोलने में PM मोदी से दो कदम आगे निकले अमित शाह।
अमित शाह कल छत्तीसगढ़ पहुंचे थे। यहां उन्होंने चुनावी रैली में झूठ उछालते हुए बोला कि देश में IIT, IIM, AIIMS भाजपा ने बनवाया।
जबकि सच ये है कि भारत को ‘IIT, IIM, AIIMS’ देने का काम पंडित जवाहर लाल नेहरू ने किया था।
इन्हें… pic.twitter.com/9n5CSzKf1R
— Congress (@INCIndia) October 17, 2023
உண்மை என்ன ?
அமித்ஷா சத்தீஸ்கரில் பேசியதாகப் பரவும் வீடியோ குறித்து ஆய்வு செய்ததில், அவர் ஒட்டுமொத்த இந்தியா குறித்து அத்தகவலைப் பேசவில்லை என்பதும், சத்தீஸ்கர் குறித்து மட்டுமே பேசியுள்ளார் என்பதையும் அறிய முடிந்தது.
தெலங்கானா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறும் எனத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது காங்கிரஸ் ஆட்சி செய்து வரும் சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் கடந்த (அக்டோபர்) 16ம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அமித்ஷா பேசிய முழு வீடியோ அவரது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் (அமித்ஷா) பதிவிடப்பட்டுள்ளது. இந்தியில் அவர் பேசியதை யூடர்ன் குழு மொழிப்பெயர்ப்பு செய்தது.
23 நிமிடம் கொண்ட அந்த வீடியோவில், 11வது நிமிடத்திற்கு மேல் அவர் பேசியதன் சிறு பகுதியைத்தான் காங்கிரஸ் மற்றும் திமுகவினர் பரப்பி வருகின்றனர். அதற்கு முன்னதாக 9வது நிமிடம் 18வது வினாடியில், வரும் தேர்தலில் சிறந்த சத்தீஸ்கரை உருவாக்க பாஜக-வுக்கு வாக்களியுங்கள் என அமித்ஷா கூறுகிறார். அதனை தொடர்ந்து பாஜக 15 ஆண்டுகள் அம்மாநிலத்தை ஆட்சி செய்தபோது மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்துப் பட்டியலிடுகிறார். 2003 முதல் 2018ம் ஆண்டு வரை பாஜகவைச் சேர்ந்த ராமன் சிங் என்பவர் முதல்வராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
10வது நிமிடத்திற்கு மேல், 2003ல் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன் சத்தீஸ்கரைக் காங்கிரஸ் கட்சி மோசமான நிலையில் வைத்திருந்தது. நாங்கள் சத்தீஸ்கரை கல்வி, மின்சாரம், சிமெண்ட் ஆகியவற்றில் மையமாகவும், சுகாதாரத்தையும் மேம்படுத்தியுள்ளோம். என்ஐடி, ஐஐடி, ஐஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் மற்றும் திறன்மேம்பாட்டுக் கல்லூரிகளை(Livelihood colleges) பாஜக உருவாக்கியது எனக் கூறுகிறார்.
அதாவது இத்தகைய கல்வி நிறுவனங்களை சத்தீஸ்கரில் பாஜக அமைத்தது என்றுதான் கூறுகிறார். அவர் ஒட்டு மொத்த இந்தியாவைக் குறிப்பிட்டு அப்படிச் சொல்லவில்லை. இதிலிருந்து அமித்ஷா பேசியதின் ஒரு பகுதியை மட்டும் தவறாகப் பரப்புகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
அவர் கூறிய கல்வி நிறுவனங்கள் எப்போது தொடங்கப்பட்டது என அவற்றின் அதிகாரப்பூர்வ பக்கங்களை ஆய்வு செய்தோம். சத்தீஸ்கர் ஐஐடி பிலாய் – 2016லும், ஐஐஐடி – International Institute of Information Technology University Act, 2013ன் படி 2014லும், ஐஐஎம் ராய்பூர் – 2010லும், எய்ம்ஸ் – 2012லும் தொடங்கப்பட்டு உள்ளன. அக்காலக்கட்டத்தில் சத்தீஸ்கரில் பாஜக தான் ஆட்சியில் இருந்தது.
மேலும், அவர் Livelihood colleges என குறிப்பிடுவது திறன் மேம்பாட்டு மையங்களே தவிர வேறில்லை. இது பாஜக ஆட்சியின் போது சத்தீஸ்கரில் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது.
ஆனால், என்ஐடி ராய்பூர் 1956ம் ஆண்டு முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் அவர்களால் நிறுவப்பட்டு, பின்னர் 1963ல் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் திறக்கப்பட்டது.
முடிவு :
நம் தேடலில், இந்தியாவில் பாஜக ஆட்சியில் தான் ஐஐடி, ஐஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் போன்றவை முதன் முதலில் நிறுவப்பட்டதாக அமித்ஷா கூறினார் எனக் காங்கிரஸ் மற்றும் திமுகவினர் பரப்பும் தகவல் உண்மை அல்ல. அமித்ஷா சத்தீஸ்கர் மாநிலம் குறித்துத்தான் பேசியுள்ளார். அவர் ஒட்டுமொத்த இந்தியா குறித்துப் பேசவில்லை என்பதை அறிய முடிகிறது.