விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பேரம் பேசுவதாகப் பரவும் டிராக்டர் விற்பனை வீடியோ !

பரவிய செய்தி

டில்லி பார்டரில் தர்ணா செய்ய மாத சம்பளம். புரோக்கர்கள் 35000 பேச, விவசாயி 40,000 கேட்க, உனக்கு இங்கு சாப்பாடு, தண்ணி என வசதிகள் தருகிறோம். அங்கு உன் வயலில் ஆட்களும் வேலை செய்கிறார்கள். அப்போது எதற்கு ரூ 40,000 பேரம் பேசுகிறாய் என கூறி புரோக்கர் விவசாயி கழுத்தை பிடிக்கிறான். இவர்கள் திட்டமே மோடி எதிர்ப்பு மட்டுமே..

X Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

ஒன்றிய அரசுடன் விவசாயிகள் நடத்திய நான்காவது பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில், டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனையடுத்து பல்வேறு வீடியோக்களும், புகைப்படங்களும், “விவசாயிகள் போராட்டம்” என்று கூறி தவறுதலாக சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருவதையும் காண முடிகிறது.

இந்நிலையில் “புரோக்கர்களிடம், விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக 40,000 ரூபாய் பேரம் பேசுவதைப் பாருங்கள், அதற்கு புரோக்கர் 35,000 ரூபாய் தான் தர முடியும் என்று கூறுகிறார், மொத்தத்தில் விவசாயிகளின் திட்டமே பிரதமர் நரேந்திர மோடியை எதிர்ப்பது தான்” என்று கூறி 1:19 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பாஜகவினரால் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோவிற்கும், விவசாயிகள் போராட்டத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை அறிய முடிந்தது.

ஜனவரி 28, 2024 அன்றே panjpani_tv என்ற யூடியூப் பக்கத்தில் பரவி வரும் இதே வீடியோ “அவர் ஒரு பெரிய தரகர்” என்ற தலைப்பில் பஞ்சாபியில் குறிப்பிடப்பட்டு Youtube Shorts ஆக வெளியிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.

இதே போன்று, PUNJABI SHOTS என்ற யூடியூப் பக்கத்திலும் இதே வீடியோ, “அப்பாவி பஞ்சாபி || வேடிக்கையான டிராக்டர் விற்பனைக்கான பேரம் பேசுகிறார்!! ” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளதைக் காண முடிந்தது. மேலும் அதில் புரோக்கர் ஒருவர், பஞ்சாபி மொழியில், டிராக்டர் விற்பனைக்காக, ஒரு விவசாயியை தன் பக்கம் வருமாறு கூறுவதையும் உடனே மற்றொரு புரோக்கர், இல்லை நீங்கள் என் பக்கம் தான் வர வேண்டும் என்பது போல நக்கலாக பேரம் பேசுவதையும் பார்க்க முடிகிறது.

இதன் மூலம் பரவி வரும் வீடியோ கடந்த ஜனவரி மாதத்திலிருந்தே சமூக ஊடகங்களில் பரவி வருகிறது என்பதை அறிய முடிகிறது.

முடிவு:

நம் தேடலில், விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பேரம் பேசுவதைப் பாருங்கள் என்று கூறி சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ, டிராக்டர் விற்பனைக்காக விவாசாயிகள் புரோக்கர்களிடம் பேரம் பேசிய பழைய வீடியோ என்பதை உறுதி படுத்த முடிகிறது.

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader