2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் விஞ்ஞான சிற்பமா ?
பரவிய செய்தி
இரண்டாயிரம் நூற்றாண்டிற்கு முன்னே !! தமிழனின் விஞ்ஞானம். மெய்சிலிர்க்க வைக்கிறது.
மதிப்பீடு
விளக்கம்
பழங்காலத்தில் வாழ்ந்தவர்கள் விட்டுச் சென்றவை அற்புதமாகவும், விடை அறியா புதிர் உடையதாகவும் இருக்கும். பழங்காலப் பொருட்களின் மீது மக்களுக்கு என்றும் ஆர்வம் அதிகம். அவர்களின் நிலத்தை ஆண்டவர்கள் அல்லது அந்நிலத்தில் வாழ்ந்தவர்கள் விட்டு சென்ற வரலாற்று தொல்பொருள் எச்சங்கள் அவர்களுக்கு சிறப்புடையதாக கருதுகின்றனர்.
தமிழகத்தில் பண்டைய வரலாற்று தொல்பொருட்கள், பழங்கால கோவில்களின் சிற்பங்கள் வியப்பை அளிக்கும். அதில், பண்டைய காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் விண்வெளி வீரர் அமர்ந்து விமானத்தை இயக்குவது போன்று ஒரு சிறிய வடிவிலான மாதிரி சிற்பத்தை வடிவமைத்து இருக்கின்றனர் என்ற பதிவுகளை காணாதவர்கள் யாரும் இலர். சிறிய வடிவிலான சிறப்பத்தின் புகைப்படத்தை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நீண்ட நாட்களாக வைரலாக்கி வருகிறார்கள்.
தமிழர்கள் வடிவமைத்ததா ?
விண்வெளி வீரர் போன்று தலை இல்லாமல் ஒருவர் அமர்ந்து இருக்கும் சிற்பம் தமிழகத்தில் எங்கு இருக்கிறது என்பது பற்றி ஆராய்கையில் அதற்கான தரவுகள் ஏதும் கிடைக்கவில்லை. சமூக வலைதளத்தை தவிர அதிகாரப்பூர்வ தளங்களில் அதைப் பற்றி எந்தவொரு விவரமும் இல்லை. தமிழகத்தில் இருந்து அந்த அரிய சிற்பம் கிடைத்ததா என்ற கேள்விக்கு இல்லை என்பது தான் விடை.
எங்கே உள்ளது ?
புகைப்படங்கள் இருக்கிறது என்றால் விண்வெளி வீரர் சிற்பம் இருப்பது உண்மை தானே ?. சரி, அதனை பற்றிய விரிவான தேடலில் புகைப்படத்தை வைத்து கூகுள் தளத்தில் ஆராய்ந்ததில், அது தொடர்பான செய்திகள் இடம்பெற்றதை காண முடிந்தது .
துருக்கியில் உள்ள இஸ்தான்புல் பகுதியில் இருக்கும் தொல்பொருள் அருங்காட்சியகத்தில் 2,500 ஆண்டுகள் பழமையான விண்வெளி வீரர் அமர்ந்து இருக்கும் விமானத்தின் சிறிய மாதிரி சிற்பம் இருப்பதாக bibliotecapleyades.net என்ற இணையதளத்தில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த தொல்பொருள் மாதிரி சிற்பம் Toprakkale என அழைக்கப்படும் Tuspa எனும் பழமையான நகரத்தில் இருந்து 1975 ஆம் ஆண்டில் இஸ்தான்புல் தொல்பொருள் அருங்காட்சியத்திற்கு கிடைத்துள்ளது. ஆனால், இதனை மக்களின் பார்வைக்கு வைக்காமல் இருந்துள்ளனர்.
Istanbul’s “Rocket Man.” 😮 pic.twitter.com/hpYoIP48RN
— The Unexplained (@Unexplained) October 9, 2017
ஏலியன் அல்லது விண்வெளி வீரர் அமர்ந்து இருப்பது போன்று வடிவமைக்கப்பட்ட மாதிரி சிற்பம் 23 செ.மீ நீளம், 9.5 செ.மீ உயரம், 8 செ.மீ அகலமும் கொண்டது. இந்த சிற்பமானது எரிமலை சாம்பல்களில் இருந்து உருவான கல்லில் மிக நுண்ணிய வேலைப்பாடுகள் உடன் உருவாக்கப்பட்டு உள்ளது.
இத்தகைய பழங்கால சிற்பத்திற்கு பலரும் பல கதைகளை கூறி வருகின்றனர். ஆனால், அருங்காட்சியகத்தின் தரப்பில் எவ்வித உறுதியான தகவலும் அளிக்கப்படவில்லை.
உண்மை என்ன ?
பல ஆண்டுகளாக இச்சிற்பத்திற்கு பின்னால் இருக்கும் மர்மம் அவிழ்க்கப்படாமல் இருந்து வருகிறது. உண்மையில் 2000 முதல் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்தவர்கள் விண்வெளி வீரர் அமர்ந்து இருக்கும் விமானத்தை வடிவமைத்தார்களா என்ற கேள்வி உள்ளது.
அந்த சிற்பத்தை கணினி வடிவமைப்பில் மாற்றி ஒரு விண்வெளி வீரர் அமர்ந்து இருப்பது போன்று உருவாக்கி உள்ளனர். ஆனால், அந்த சிற்பத்தில் விண்வெளி வீரர் எனக் கூறுவரின் தலை பாகம் இல்லை. அந்த சிற்பத்தை விமானம் போன்று வைத்து பார்க்காமல், நேராக ராக்கெட் போன்று வைத்து பார்க்கும் பொழுது அந்த மொத்த சிற்பமும் ஒருவரின் முகம் போன்று தெரிவதை காண முடிகிறது.
Thelivingmoon என்ற இணையதளத்தில் உள்ள தகவல்களில், ” பழமையான இந்தோ-ஐரோப்பிய மொழியை பேசிய HITTITE வீரர்களின் உருவங்கள் ஹட்டுசா சுவர் சிற்பங்களில் செதுக்கி வைக்கப்பட்டுள்ளன.
அதில், HITTITE வீரர்கள் பாரம்பரியமான தலைப்பாகையை அணிந்து உள்ளனர். எனினும், சிற்பமானது HITTITE வீரர்களின் முகத்தினை போன்று இருப்பதாக தெரிவித்து இருந்தனர் “. எனினும், அது ஒற்றுமைப்படுத்தி ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவாக உள்ளது.
முடிவு :
எங்களுக்கு கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் மூலம் 2000 ஆண்டுகளுக்கு முன்பு பழமையான தமிழர்கள் விண்வெளி வீரர் அமர்ந்து இருக்கும் விமானத்தின் மாதிரி சிற்பத்தை வடிவமைத்து இருந்தார்கள் என்ற செய்தி தவறான தகவல் என நிரூபிக்கப்பட்டுள்ளது.