கச்சத்தீவு தொடர்பாக வைகோ பேசிய வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் வெளியிட்ட ஏஎன்ஐ.

பரவிய செய்தி

காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டிற்கு எல்லா விதத்திலும் துரோகம் செய்தது என்று வைகோ கூறியுள்ளார் – ஏஎன்ஐ

X Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா முழுவதுமே அரசியல் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்த மதிமுக பொதுச் செயலாளரும், எம்பியுமான வைகோ, கச்சத்தீவு தொடர்பாக ANI ஊடகத்திற்கு வழங்கிய பேட்டி ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

ANI தனது எக்ஸ் பக்கத்தில் ஏப்ரல் 03 அன்று வெளியிட்டுள்ள 10 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், “காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டிற்கு எல்லா விதத்திலும் துரோகம் செய்தது” என்று வைகோ கூறுவதை கேட்க முடிகிறது.

மேலும் பாஜகவினர் பலரும் இந்த 10 வினாடிகள் கொண்ட வீடியோவை தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருவதையும் காண முடிகிறது.

மேலும் இதை சாணக்கியா, Asianetnews தமிழ் போன்ற ஊடகங்களும் தங்களது பக்கங்களில் செய்தியாக வெளியிட்டுள்ளனர்.

உண்மை என்ன?

வைகோ பேசியுள்ள வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இதன் முழு வீடியோவைக் காண முடிந்தது.

Sun News ஊடகத்தின் எக்ஸ் பக்கத்தில் ஏப்ரல் 03 அன்று 37 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவின் முழுப்பகுதி “கச்சத்தீவு விவகாரத்தில் நம்பிக்கை துரோகம் செய்துள்ளார் மோடி – மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சனம்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்தது. 

அதில் பேசியுள்ள வைகோ, “காங்கிரஸ் அந்த நேரத்தில் தமிழ்நாட்டுக்கு எல்லா விதத்திலும் துரோகம் செய்தது. அதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடிக்கு பத்து வருடங்கள் சோதனைக் காலமாக இருந்தது. அவர் ஒரு துரோகி. தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்தார். இந்தியாவுக்கு துரோகம் செய்தார். இலங்கைக்கு துரோகம் செய்தார்” என்று பேசுவதை தெளிவாகக் கேட்க முடிகிறது.
ஆனால் ANI ஊடகம் வைகோ பேசியுள்ள வீடியோவில், ஒரு சிறு பகுதியை மட்டும் எடுத்து தனது பக்கங்களில் பதிவிட்டுள்ளது. இது ANI, ஒரு சாரார் ஊடகமாக மாறியதைத் தெளிவாகக் காட்டுகிறது.
இதற்கு முன்பும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குறித்து பல செய்திகள் தவறாகப் பரவின. அது குறித்தும் அப்போதே ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
முடிவு:
நம் தேடலில், கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் குறித்து வைகோ பேசியதாகக் கூறி ANI ஊடகம் வெளியிட்டுள்ள வீடியோ, வைகோ பேசியுள்ள முழு வீடியோவின் ஒரு சிறு பகுதி மட்டுமே என்பதை அறிய முடிகிறது.
Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader