பேரறிஞர் அண்ணாவின் இறுதி ஊர்வலத்தில் கூடிய மக்கள் எனப் பரவும் தவறான புகைப்படம் !
பரவிய செய்தி
இந்தியாவைச் சேர்ந்த அரசியல்வாதியான சி.என்.அண்ணாதுரையின் இறுதி ஊர்வலத்தில் வரலாற்றிலேயே அதிக மக்கள் கலந்து கொண்டனர். 1969-ல் அவரைப் பார்க்க 15 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சென்னையில் கூடினர்.
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் இறுதி ஊர்வலத்தில் 15 மில்லியன் மக்கள் கலந்து கொண்டதே வரலாற்று நிகழ்வாக இருந்து வருகிறது என WTF Facts எனும் டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிடப்பட்டது.
உண்மை என்ன?
பேரறிஞர் அண்ணாவின் இறப்பின் போது அவரது உடலை காண 1.5 கோடி பேர் (15 மில்லியன்) வருகை தந்து கூடியதாக கின்னஸ் சாதனையில் இடம்பெற்றது. கின்னஸ் உலக சாதனை இணையதளத்தில் ” மிகப்பெரிய இறுதி ஊர்வலக் கூடல் ” எனும் பிரிவில் அண்ணாவின் இறுதி ஊர்வலம் இடம்பெற்றுள்ளது.
ஆனால், அண்ணாவின் இறுதி ஊர்வலம் குறித்து பதிவிட்ட டிவிட்டர் பதிவில் பயன்படுத்திய புகைப்படம் தவறானது.
2015-ல் தி டெலிகிராப் இணையதளத்தில் ” மனித வரலாற்றில் 10 மிகப்பெரிய கூடல் ” எனும் தலைப்பில் வெளியான செய்தியில் 1989-ல் ஈரான் அரசியல்வாதி அயடோல்லா கோமெய்னி இறந்த போது 10 மில்லியன் மக்கள் கூடியதாக இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், பேரறிஞர் அண்ணாவின் இறுதி ஊர்வலத்தின் போது 15 மில்லியன் மக்கள் கூடியதாக கின்னஸ் உலக சாதனை படைத்தது உண்மையே.
ஆனால், அண்ணாவின் இறுதி ஊர்வலம் எனப் பரவும் புகைப்படம் தவறானது. அது ஈரான் அரசியல்வாதி இறுதி ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.