பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து இருக்காது என அண்ணாமலை கூறியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !
பரவிய செய்தி
பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து நடைமுறையில் இருக்காது; சட்டமன்றத்தில் தேசிய கீதம் மட்டுமே ஒலிக்கும் – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
மதிப்பீடு
விளக்கம்
பிப்ரவரி 12 அன்று நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தில், தமிழ்நாடு அரசு உருவாக்கிய ஆளுநர் உரையில், தவறான தகவல்கள் இருப்பதாகவும், சட்டசபை தொடங்கும் முன் தேசிய கீதம் இசைக்கவில்லை என்றும் கூறி, சட்டசபைக் கூட்டம் முடிவடைவதற்கு முன்பே ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
இந்நிலையில் “பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து நடைமுறையில் இருக்காது; சட்டமன்றத்தில் தேசிய கீதம் மட்டுமே ஒலிக்கும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாகக் கூறி ‘நியூஸ் தமிழ்‘ ஊடகத்தின் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
Proud கன்னடிக தமிழ்த்தாய் வாழ்த்தை நிறுத்த சொன்னா நாங்க நிறுத்துவோம் என எண்ணமா? அடித்து ஓட விடும் நாள் வெகு தொலைவில் இல்லை… pic.twitter.com/oY5MmPdQ9t
— இந்திராணி சுடலைமுத்து (@IndiraniSudala1) February 14, 2024
அவன் நோக்கம் ஒண்ணு தான்.. தமிழ்நாட்டுல பிஜேபிய ஒழிக்கனும்..
வாழ்த்துக்கள் மலை pic.twitter.com/brF6HdOQso
— plip plip 2.0 (@samooganidhi) February 14, 2024
உண்மை என்ன ?
பரவி வரும் நியூஸ் கார்டில் உள்ளவாறு அண்ணாமலை பேசியுள்ளாரா என்பது குறித்து அவருடைய சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம். பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து நடைமுறையில் இருக்காது என்பது குறித்து அவர் எந்த பதிவுகளும் பதிவிடவில்லை.
மேலும் இது குறித்து ஊடகத்திற்கு ஏதாவது பேட்டியளித்துள்ளாரா என்பது குறித்து தேடியதில், Kingwoods News யூடியூப் சேனல் அண்ணாமலை பேசியது தொடர்பாக பிப்ரவரி 13 அன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. சரியாக வீடியோவின் 11 வது நிமிடத்தில், “பாஜக ஆட்சிக்கு வந்தால் முதலில் முழுமையான தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். கருணாநிதி அவர்கள் ஒட்டிய தமிழ்த்தாய் வாழ்த்து அல்ல. முழுமையான தமிழ்த்தாய் வாழ்த்து. அதன்பின் தேசிய கீதம் பாடப்படும். அதன்பின் சபை நடவடிக்கைகள் நடத்தப்படும். சபை நடவடிக்கைகள் முடிந்தப்பின் மறுபடியும் தேசியகீதம் பாடப்பட்டு முடிவுக்கு கொண்டு வரப்படும்.” என்று அண்ணாமலை பேசியிருப்பதைக் காண முடிகிறது.
இதில் எந்த இடத்திலும் அவர், பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து நடைமுறையில் இருக்காது. சட்டமன்றத்தில் தேசிய கீதம் மட்டுமே ஒலிக்கும் என்று கூறவில்லை.
மேலும் ‘நியூஸ் தமிழ்‘ ஊடகத்தின் சமூக ஊடக பக்கங்களிலும், இது குறித்து ஏதாவது அவர்கள் நியூஸ் கார்டு வெளியிட்டிருக்கிறார்களா என்று ஆய்வு செய்தோம். இது தொடர்பாக அவர்கள் எந்த நியூஸ் கார்டும் வெளியிடவில்லை.
மேலும் படிக்க: ‘இன்னுயிர் காப்போம்’ , ‘குட் சமாரிட்டன்’ திட்டம்.. அண்ணாமலை சொல்லும் பொய்.. முழுமையான அலசல் !
மேலும் படிக்க: ஜெர்மனி நெடுஞ்சாலையின் குறைந்தபட்ச வேகம் குறித்து அண்ணாமலை சொன்ன தவறான தகவல்!
முடிவு:
நம் தேடலில், பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து இருக்காது என அண்ணாமலை கூறியதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் நியூஸ் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது.