அண்ணாமலை விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறாரா? உண்மை என்ன?
![](https://youturn.in/wp-content/uploads/2024/06/polimer-fake-card-FC.jpg)
பரவிய செய்தி
பாரதபிரதமர் மோடி அவர்களின் ஆணைக்கிணங்க நானே விக்ரவாண்டி இடைத்தேர்தலில் நேரடியாக போட்டியிடுகிறேன் – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பு
மதிப்பீடு
விளக்கம்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்(MLA) புகழேந்தி உடல் நலக்குறைவால் ஏப்ரல் 6-ஆம் தேதி காலமானார். இதனையடுத்து அந்த தொகுதி ஏப்ரல் 8 ஆம் தேதி காலியானதாக தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10 அன்றும், வாக்குப்பதிவு ஜூலை 13 அன்றும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தற்போது இந்த தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பாக தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதாகக் கூறி புதிய தலைமுறை மற்றும் தந்தி டிவியின் நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
இப்போதான் கோவையில அடிச்சி செமிச்சு விட்டாங்க இப்போ விக்கிரவாண்டி ல யா நமக்கு நல்ல கன்டென்ட் இருக்கு pic.twitter.com/WHca8wO041
— MR. கொடி❤️ (@Mr_kodi_2k) June 11, 2024
Guys இப்போ என்ன ஆச்சுனா https://t.co/QOR585mhyZ pic.twitter.com/GDYElCwV9a
— ꧁ད மகிழினி தஞ்சை ཌ꧂❤️ (@magizhiniisaii) June 11, 2024
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஏதாவது அறிவிக்கை வெளியிட்டுள்ளாரா என்பது குறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் ஆய்வு செய்து பார்த்தோம். தேர்தலில் அவர் போட்டியிடுவது தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
மேலும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கு இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களின் விவரங்கள் குறித்து தேடியதில், இதுவரை தி.மு.க. சார்பில் மட்டுமே வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டு உள்ளார் என்பதை உறுதிபடுத்த முடிந்தது. அதிமுக மட்டும் பாமக சார்பில் இன்னும் இழுப்பறியே நிலவி வருகிறது. பாஜக சார்பில் எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இச்செய்தி குறித்து புதிய தலைமுறை மற்றும் தந்தி டிவி ஊடகங்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களிலும் தேடிப்பார்த்தோம். அதில் இதுகுறித்து எந்தவித நியூஸ் கார்டுகளும் வெளியாகவில்லை.
இந்நிலையில் அண்ணாமலை கூறியதாகக் கூறி புதியதலைமுறை மற்றும் தந்தி டிவி நியூஸ்கார்டுகளை சிலர் எடிட் செய்து போலியாகப் பரப்பி வருகின்றனர் என்பதை தெளிவாக அறிய முடிகிறது.
மேலும் படிக்க: ‘ஜெகந்நாதர் கோவில் சாவியை கண்டுபிடிக்கவே பிரதமர் மோடி தியானம்..’ அண்ணாமலை கூறியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு!
முடிவு:
நம் தேடலில், அண்ணாமலை விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாகப் பரவும் புதியதலைமுறை மற்றும் தந்தி டிவியின் நியூஸ் கார்டுகள் போலியானவை என்பதை அறிய முடிகிறது.