ரஃபேல் ஆவணங்களுடன் தனது வாட்ச் ரசீதும் திருடு போனதாக அண்ணாமலை கூறினாரா ?

பரவிய செய்தி

கடந்த 2019ம் ஆண்டு ரஃபேல் ஆவணங்கள் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தில் இருந்து திருடப்பட்டன. என்னுடைய கடிகாரத்திற்கான ரசீதும் அந்த ஆவணங்களுடன் சேர்ந்து திருடு போய்விட்டது. பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேச்சு.

Twitter link

மதிப்பீடு

விளக்கம்

ஒன்றிய பாதுகாப்புத் துறையிடம் இருந்த ரஃபேல் விமான ஆவணங்கள் 2019ம் ஆண்டு திருடப்பட்டது. அந்த ஆவணங்களுடன் இருந்த, எனது ரஃபேல் விமான வாட்ச் ரசீதும் திருடு போய்விட்டதாகப் பாஜக-வின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாகத் தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்றினை திமுகவைச் சேர்ந்த பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

 

 

உண்மை என்ன ?

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் வாட்ச் 3.5 லட்சம் ரூபாய் என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட தகவல் குறித்துக் கடந்த 17ம் தேதி கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் அண்ணாமலையிடம் கேள்வி கேட்டார்.

“ இந்த வாட்ச் ரஃபேல் விமான பாகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. மொத்தம் 500 வாட்ச் மட்டுமே தயாரிக்கப்பட்டதில், என்னுடைய வாட்ச் 149-வது. ரஃபேல் விமான வாட்சை நம்மைத் தவிர யார் வாங்குவார்கள் ? இந்தியர் தான் வாங்க முடியும் எனக் கூறியிருந்தார். ஆனால், அந்த வாட்ச் விலை குறித்து அண்ணாமலை எதுவும் கூறவில்லை.

தன்னிடம் உள்ள ரஃபேல் வாட்ச் 2021, மே மாதம் வாங்கியதற்கான பில் இருப்பதாகவும், தனது வருமான வரி கணக்கை வெளியிடுவதாகவும் டிவீட் செய்திருந்தார்.

இதனை தொடர்ந்து “அண்ணாமலை வாங்கிய வாட்ச் பில் இருக்கிறதா? அல்லது இனிமேல்தான் தயார் செய்ய வேண்டுமா?” என அமைச்சர் செந்தில் பாலாஜி தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், செய்தியாளர் சந்திப்பில் “வாங்கிய ரசீதை காண்பிக்க எதற்கு இத்தனை நாட்கள்?” என கேட்டிருந்தார்.

இந்நிலையில், தனது வாட்ச் ரசீது, ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகத்தின் ரஃபேல் விமான ஆவணங்களுடன் இருந்ததாகவும், அந்த ஆவணங்கள் 2019ம் ஆண்டு திருடப்பட்டுவிட்ட நிலையில், தனது கைக்கடிகார ரசீதும் திருடப்பட்டுவிட்டதாக  அண்ணாமலை கூறியதாகப் பரவும் தந்தி டிவி நியூஸ் கார்டு குறித்து இணையத்தில் தேடினோம்.

பரவக்கூடிய நியூஸ் கார்டில் ‘21.12.2022’ என்ற தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த தேதியில் ‘தந்தி டிவி’ டிவிட்டர் பக்கத்தில் “ரஃபேல் கடிகாரம் குறித்து அனைத்து அமைச்சர்களும் பேச வேண்டும். ‘அப்போதுதான் அவர்களின் ஊழல் குறித்து வெளியே கொண்டு வர முடியும்” என அண்ணாமலை கோவையில் பேசியது குறித்து மட்டுமே நியூஸ் கார்டு பதிவிடப்பட்டுள்ளது.

இதிலிருந்து அண்ணாமலை தனது வாட்ச் ரசீது, ரஃபேல் ஆவணங்களுடன் காணாமல் போனதாகப் பரவும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது. எந்தவொரு இடத்திலும் அவர் அப்படிப் பேசவில்லை.

ரஃபேல் விமானம் ஆவணங்கள் எங்கே ?

டஸால்ட் ஏவியேஷன் என்ற பிரான்ஸ் நிறுவனத்திடமிருந்து இந்திய விமானப் படைக்கு 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க 2016ம் ஆண்டு ஒன்றிய பாஜக அரசு ஒப்பந்தம் செய்தது. ரூபாய் 58,000 கோடி மதிப்பிலான அந்த ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டது. 

அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ரஃபேல் ஒப்பந்த நடைமுறையில் சந்தேகம் கொள்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என 2018, டிசம்பர் மாதத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதனை மறு ஆய்வு செய்யக்கோரிய மனு 2019, மார்ச் மாதம் அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ரகசிய ஆவணங்கள் பாதுகாப்புத் துறை அமைச்சகத்திலிருந்து திருடப்பட்டு விட்டதாகவும், அது குறித்து முதல் தகவல் அறிக்கை (FIR)  எதுவும் பதிவு செய்யவில்லை எனவும் நீதிமன்றத்தில் கூறி இருந்தார்.

முடிவு : 

நம் தேடலில், ரஃபேல் விமான ஆவணங்களுடன் தனது ரஃபேல் வாட்ச் ரசீதும் திருடு போய்விட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாகப் பரவும் தந்தி டிவி நியூஸ் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது. 

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader