அண்ணாமலையைக் கேள்வி கேட்கச் செய்தியாளர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பரிசு கொடுத்ததாக வதந்தி !
பரவிய செய்தி
அண்ணாமலை அவர்களை இழிவு செய்யும் பொறுப்பு திமுக தரப்பிலிருந்து செந்தில் பாலாஜி அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய முன்தினம் தமிழ்நாட்டில் உள்ள பத்திரிகையாளர்களில் பெரும்பான்மையானவரை அழைத்து அவர்களுக்கு விருந்து கொடுத்து எப்படி அண்ணாமலைக்கு குடைச்சல் கொடுக்க வேண்டும் என்று பயிற்சி கொடுத்து அனுப்பி இருக்கிறார் அந்த படம் கிடைத்திருக்கிறது..
மதிப்பீடு
விளக்கம்
” திமுக அரசின் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பத்திரிக்கையாளர்களை அழைத்து விருந்து அளித்துள்ளார். மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எப்படி குடைச்சல் கொடுக்க வேண்டும் எனப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே, கடந்த 4ம் தேதி அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்பில் நிருபர்கள் கேள்விக் கேட்டதாக ” அமைச்சர் செந்தில் பாலாஜி இருக்கும் குழுப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
மேலும், புதிய தலைமுறை ‘செய்தியாளர்’ என அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் ஒருவர் இருக்கும் புகைப்படமும் பாஜகவினர் மற்றும் வலதுசாரி ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
சென்னையில் கடந்த 4ம் தேதி பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அச்சந்திப்பில், தன்னை கேள்வி கேட்கும் செய்தியாளர்களை நீங்கள் எந்த பத்திரிகை எனக் கேட்டார். அப்போது புதிய தலைமுறை செய்தியாளர் ஒருவரிடம், உங்களுக்கு இப்போது யார் போன் செய்தது? புதியதலைமுறை நிர்வாகத்திடம் இருந்து போன் வந்ததா? காண்பியுங்கள் என அண்ணாமலை கேட்டார்.
தனது நிறுவனத்திடம் இருந்து போன் வரவில்லை எனச் செய்தியாளர் தனது செல்போனை எடுத்து அண்ணாமலையிடம் கொடுத்தார். அதனை வாங்க அவர் மறுக்கிறார். இந்த நிகழ்வினை தொடர்ந்தே செய்தியாளர்களை அழைத்து அமைச்சர் செந்தில் பாலாஜி விருந்து அளித்ததாகப் புகைப்படங்கள் பரப்பப்படுகிறது.
புதிய தலைமுறை செய்தியாளர் எனப் பரப்பப்படும் புகைப்படத்தில் இருப்பது பாலிமர் தொலைக்காட்சியில் ‘செய்தி வாசிப்பாளராக’ பணியாற்றிய ரஞ்சித் என்பது அறிய முடிந்தது. மேலும், அந்த புகைப்படம் குறித்து அவரை தொடர்புகொண்டு பேசினோம்.
அவர் கூறியது, ‘சமீபத்தில் கோயம்புத்தூரில் செய்தி வாசிப்பாளர் சங்கத்தின் சார்பாக நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அனைத்து செய்தி வாசிப்பாளர்களும் சேர்ந்து அவருக்கு நன்றி தெரிவிக்கலாம் எனச் சங்கத்தின் சார்பாகத் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுமார் 50 செய்தி வாசிப்பாளர்கள் அந்த நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அமைச்சருக்கு ஒவ்வொருவரும் புத்தகம், பேனா எனப் பல பொருட்களைப் பரிசளித்தனர். அப்போது அனைவரும் தனித் தனியாகவும், குழுவாகவும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அப்புகைப்படங்களை எனது சமூக வலைத்தளங்களில் கடந்த 4ம் தேதி பகிர்ந்திருந்தேன்.
இதற்கிடையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்பில் புதியதலைமுறை செய்தியாளருக்கும், வருக்கும் இடையே ஒரு விவாதமே நடந்தது.
அதற்கடுத்த நாளிலிருந்து, அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் போது நான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தினை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இவர்தான் அந்த புதிய தலைமுறை செய்தியாளர் எனப் பரப்பி வருகின்றனர். ஆனால், எனக்கும் புதிய தலைமுறைக்கும் எந்த தொடர்பும் இல்லை. மேலும், நான் பாலிமர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் பணியில் இருந்து நின்றுவிட்டேன். தற்போது, தனிப்பட்ட முறையில் (Freelancer) பின்னணி குரல் (Voice Over) மற்றும் யூடியூப் சேனல்களுக்கு நெறியாளர் பணியினை செய்து வருகிறேன் எனக் கூறினார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் மட்டுமில்லாமல் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருடனும் எனக்கு நல்ல நட்புறவுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் பாஜகவைச் சேர்ந்த சி.டி.ஆர்.நிர்மல் குமாரை நேர்காணல் செய்துள்ளேன். இப்படி அனைத்து தரப்பினருடனும் நட்புள்ளது. ஒரு புகைப்படத்தினை மட்டும் வைத்து உபி, சங்கியென முத்திரை குத்துவது சங்கடமாக உள்ளது எனக் கூறினார்.
அந்த சந்திப்பின் போது பெரிய விருந்து கொடுக்கப்பட்டது. அண்ணாமலையைக் கேள்வி கேட்பதற்காகக் கவர் கொடுக்கப்பட்டது எனத் தவறான தகவல்களைப் பரப்புகின்றனர். அதுவும் உண்மை அல்ல எனத் தெரிவித்தார். மேலும், இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்து வீடியோ பதிவிட்டதைக் குறிப்பிட்டார். அதிலும் இதே கருத்துக்களை அவர் பதிவு செய்துள்ளார்.
பரப்பக்கூடிய புகைப்படத்தில் இருக்கும் ரஞ்சித் என்பவர் செய்தியாளர் அல்ல. அவர் செய்தி வாசிப்பாளர். அவர் அளித்த விளக்கத்தின் படி அது செய்தி வாசிப்பாளர்கள் அமைச்சருக்கு நன்றி தெரிவிக்க நேரில் சென்ற நிகழ்வு என்பது தெளிவாகிறது.
முடிவு :
நம் தேடலில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையைக் கேள்வி கேட்க பத்திரிகையாளர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பரிசு கொடுத்ததாக பரவும் தகவல் தவறானது. மேலும், புதிய தலைமுறை செய்தியாளர் எனப் பரப்பப்படும் புகைப்படத்தில் இருப்பது செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் என்பதை அறிய முடிகிறது.