This article is from Sep 30, 2018

தவறான சிகிச்சையால் நோயாளி இறப்பு: அப்போலோ ரூ.57.74 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு..!

பரவிய செய்தி

சென்னை அப்போலோ மருத்துவமனை ரூ.57.74 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

ரூ.57.74 லட்சத்தை 6 சதவீத வட்டியுடன் இறந்தவரின் பெற்றோருக்கு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விளக்கம்

2003 ஆம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அபானிகுமார் பதி என்பவர் அனுமதிக்கபட்டுள்ளார். அபானிகுமார் பதி ஒரிசாவைக் சேர்ந்தவர். இவர் சென்னையில் பணியாற்றி வந்துள்ளார்.

அபானிகுமார் பதிக்கு இருந்த மூல நோயால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரின் உடல் மிகவும் மோசமாக இருப்பதாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல்நிலை மோசமாகியதால் அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், வெண்டிலேடரில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அபானிகுமாரை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை. 15 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சையின் போது அபானிகுமாருக்கு மூச்சுத்திணறல், திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

நவம்பர் 2-ம் தேதி அபானிகுமார் பதி இறந்து விட்டதாக அவரின் பெற்றோருக்கு தெரிவித்து விட்டனர். 15 நாட்கள் சிகிச்சைக்காக ரூபாய் 3 லட்சம் மருத்துவமனையால் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழ்நாடு நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் அபானிகுமாரின் பெற்றோர் வழக்கு ஒன்றை தொடுத்தனர். தங்களின் மகனின் மரணத்திற்கு மருத்துவமனையின் சேவை குறைபாடும், மருத்துவர்களின் அலட்சியம் காரணம் எனக் கூறி ரூ.96 லட்சம் இழப்பீடு கேட்கப்பட்டது.

வழக்கின் விசாரணையில் சிகிச்சையின் போது அபானிகுமாருக்கு மூச்சுத்திணறல், திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதற்கான சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் இறந்ததாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது. இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த பிறகு இறுதி தீர்ப்பு சமீபத்தில் வெளியாகி உள்ளது.

அபானிகுமாருக்கு எப்பொழுது மாரடைப்பு ஏற்பட்டது, அதற்கு என்ன மாதிரியான சிகிச்சையை மருத்துவர்கள் அளித்தனர், எதற்காக மயக்க மருந்து கொடுக்கப்பட்டது போன்றவற்றிற்கான முழுமையான தகவலை அப்போலோ மருத்துவமனை வழங்கவில்லை. அதனை நிரூபிக்க தவறிவிட்டனர் என்று மேற்கோள்காட்டி உள்ளனர்.

” ஆகையால், அபானிகுமாரின் மரணத்திற்கு அப்போலோ மருத்துவமனை மற்றும் மருத்துவர்களே காரணம் எனவும், இறந்தவரின் பெற்றோருக்கு இழப்பீடாக ரூ.57.74 லட்சம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ”

இதில், இழப்பீடாக 44.64 லட்சமும், மன உளைச்சலுக்கு 10 லட்சமும், மருத்துவமனைக்கு செலுத்திய 3 லட்சம், வழக்கு செலவு 10 ஆயிரம் என மொத்தம் ரூ.57.74 லட்சம் வழங்க வேண்டும். இதை தவிர இந்த இழப்பீடு தொகையை வழக்கு தொடர்ந்த நாளில் இருந்து 6 சதவீத வட்டியுடன் 4 வாரத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நோயாளிக்கு அளித்த சிகிச்சை குறித்த சரியான விவரத்தை தெரிவிக்காத அப்போலோ மருத்துவமனை ரூ.57.74 லட்சத்தை 6 சதவீத வட்டியுடன் இறந்தவரின் பெற்றோருக்கு வழங்க வேண்டியுள்ளது. இது 15 ஆண்டுகளுக்கு பிறகே சாத்தியமாகியது.APOLLOAPOLLO

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader