சிதிலமடைந்த அரவூர் கார்கோடகேஸ்வரர் கோவில் எனப் பரப்பப்படும் பழைய புகைப்படம் !
பரவிய செய்தி
இவர் பெயர் சந்தானம் குருக்கள். அருள்மிகு கார்கோடகேஸ்வரர் சமேத மங்களாம்பிகா கோவில் அரவூர் நீடாமங்கலம் திருவாரூர் மாவட்டம் யாராவது வரமாட்டார்களா இந்த கோவிலை காப்பாற்ற மாட்டார்களா! என்று கத்துக்கொண்டு நிற்கும் அந்த கோவில் குருக்களை பாருங்கள்.
மதிப்பீடு
விளக்கம்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே அரவூர் என்னும் கிராமத்தில் கார்கோடகேஸ்வரர் என்னும் கோவில் உள்ளது. அக்கோவில் மிகவும் சிதிலமடைந்து இருப்பதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
இவர் பெயர் சந்தானம் குருக்கள்.
அருள்மிகு கார்கோடகேஸ்வரர் சமேத மங்களாம்பிகா
கோவில்
அரவூர்
நீடாமங்கலம்
திருவாரூர் மாவட்டம்யாராவது வரமாட்டார்களா இந்த கோவிலை காப்பாற்ற மாட்டார்களா! என்று கத்துக்கொண்டு நிற்கும் அந்த கோவில் குருக்களை பாருங்கள்.
ஈஸ்வரா …. pic.twitter.com/dZsYZuaKJ1— R.VASANTH KUMAR (@RVASANTHKUMAR10) February 21, 2024
உண்மை என்ன?
பரவக் கூடிய புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியதில், இதே தகவல் 2021ம் ஆண்டும் சமூக வலைத்தளங்களில் உள்ளது. அதில், இது தனியார் கோயில் எனக் குறிப்பிட்டு உள்ளனர்.
அக்கோவில் பெயரைக் கொண்டு தேடியதில் தினத்தந்தியில் வெளியான செய்தி ஒன்றைக் காண முடிந்தது. 2023, ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டிருந்த அச்செய்தியில் அரவூர் கிராம மக்களின் முன்னெடுப்பில் கார்கோடகேஸ்வரர் கோவில் திருப்பணிகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கொண்டு அக்கோவில் பூஜை செய்யும் சிவாச்சாரியார் சந்தானம் அவர்களை யூடர்னில் இருந்து தொடர்பு கொண்டு பேசினோம். “மங்களாம்பிகை கார்கோடகேஸ்வரர் பெயரில் டிரஸ்ட் தொடங்கி நிதி வசூலித்து திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. முக்கால்வாசி பணிகள் முடிந்துவிட்டது. இன்னும் மதில் சுவர் மற்றும் பெயிண்ட் அடிக்க வேண்டிய பணிகள் உள்ளன. இப்பணிகளை எல்லாம் முடித்துவிட்டு கும்பாபிஷேகத்துக்கான தேதி முடிவு செய்யத் திட்டமிட்டுள்ளோம்” எனக் கூறினார்.
இவற்றில் இருந்து பரவக் கூடிய படம் பழையது என்பதும் கோவில் சீரமைக்கப்பட்டு வருவதையும் உறுதி செய்ய முடிகிறது. தற்போது எடுக்கப்பட்ட படங்களைச் சந்தானத்திடம் கேட்டுள்ளோம். கிடைக்கப்பெற்றதும் இக்கட்டுரையில் பதிவிடுகிறோம்.
முடிவு :
திருவாரூர் மாவட்டம் அரவூர் கார்கோடகேஸ்வரர் கோவில் சிதிலமடைந்து இருப்பதாகப் பரவும் படம் சில ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தது. அக்கோவில் கட்டுமான பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகக் கோவில் பூசாரியே தெரிவித்துள்ளார்.