ஹோட்டலில் இடம் தராததால் தன் சிலைக்கு முன்பாக அர்னால்ட் உறங்கியதாக பரவும் வதந்தி !
பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
உலகப் புகழ்பெற்ற பாடிபில்டர், ஹாலிவுட் நடிகர், கலிபோர்னியாவின் முன்னாள் கவர்னரான அர்னால்டுக்கு நேர்ந்த பரிதாப நிலை என மேற்காணும் புகைப்படத்துடன் ஓர் கதை நீண்டகாலமாகவே சமூக வலைதளங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது.
” புகழின் உச்சியில் இருக்கும் போது தன்னுடைய வெண்கல சிலை நிறுவப்பட்ட ஓர் ஆடம்பர ஹோட்டலை அர்னால்ட் திறந்து வைத்தார். ஹோட்டலின் திறப்பு விழாவின் பொழுது அந்த ஆடம்பர ஹோட்டலின் உரிமையாளர் “அர்னால்டு ” எப்பொழுது வேண்டுமானாலும் இந்த ஹோட்டலுக்கு வந்து முன் பதிவு ஏதும் இன்றி இலவசமாக தங்கிக்கொள்ளலாம், அவருக்கு எப்பொழுதுமே ஒரு அறை இருக்கும் என்று அறிவித்தார். நாட்கள் நகர்ந்து, பதவி மற்றும் புகழ் இல்லாமல் அதே ஹோட்டலுக்கு சென்ற போது அறை ஏதும் இல்லை என நிர்வாகம் கூறியதால் தன் சிலைக்கு முன்பாகவே படுத்து உறங்கி விட்டார். இதை தன்னுடைய சமூக வலைதள பக்கத்திலும் பகிர்ந்து உள்ளார் ” என உலக அளவில் பரப்பப்பட்டது. வாழ்வில் எதுவும் நிரந்தரமில்லை எனக் கூறி தற்போதும் இப்புகைப்படம் தொடர்ந்து உலாவி வருகிறது.
உண்மை என்ன ?
அர்னால்ட் புகைப்படத்துடன், தன்னால் திறக்கப்பட்ட ஆடம்பர விடுதியில் அறை வழங்கப்படவில்லை என்பதால் தன்னுடைய சிலைக்கு முன்பாக உறங்கியதாக பரவும் கதை பொய்யானது மற்றும் சித்தரிக்கப்பட்ட ஒன்றாகும். உண்மையில் இப்புகைப்படம், 2016-ம் ஆண்டில் ஓஹியோ மாகாணத்தில் உள்ள கொலம்பஸ் எனும் பகுதியில் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் படப்பிடிப்பிற்காக வந்த போது எடுக்கப்பட்டது.
2016 ஜனவரி 15-ம் தேதி அர்னால்ட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்புகைப்படத்தை பகிர்ந்து ” How Times Have changed ” என நையாண்டித்தனமாகப் பதிவிட்டு இருக்கிறார். புகைப்படத்தில் இருக்கும் அர்னால்ட் சிலையானது ” Franklin Country Veterans Memorial ” எனும் இடத்தில் 2012-ல் அமைக்கப்பட்டது. பின்னர் 2014-ல் கொலம்பஸ் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அப்பகுதியில் ஆண்டுதோறும் ” Arnold Sports Festival ” எனும் பெயரில் பாடி பில்டிங் போட்டியானது நடத்தப்பட்டு வருகிறது.
சமூக வலைதளத்தில் கூறியது போன்று அர்னால்ட் சிலை நிறுவப்பட்டது ஆடம்பர விடுதிக்கு முன்பாக அல்ல. 2016-ல் கொலம்பஸ் பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது தன் சிலைக்கு முன்பாக படுத்துக் கொண்டிருப்பது போன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தை ” காலம் எப்படி மாறுகிறது ” என கிண்டலாக தன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே பதிவிட்டு இருக்கிறார். ஆனால், அந்த புகைப்படத்தை வைத்து, அவர் திறந்து வைத்து ஹோட்டலிலேயே அறை வழங்காத காரணத்தினால் சாலையில் உறங்கினார் என வதந்தி கதையை இணைத்து தவறாக பரப்பி வந்துள்ளனர்.
முடிவு :
நம் தேடலில், தன்னுடைய வெண்கல சிலைக்கு முன்பாக உறங்கும் அர்னால்டின் பரிதாப நிலை எனக் கூறி பரப்பப்படும் கதை வதந்தியே என அறிய முடிகிறது.