This article is from Feb 21, 2022

வெளிநாட்டில் ஏ.ஆர்.ரகுமான் மகள் கதீஜாவின் உடை எனப் பரவும் புகைப்படம்.. உண்மை என்ன ?

பரவிய செய்தி

உள்நாட்டு கதீஜா இந்தியாவுக்குள் மட்டும் புர்க்கா அணிந்து தன்னிறைவு அடைந்த போது.. வெளிநாட்டு கதீஜா எங்க பாப்பா அந்த கருப்பு கோணி சாக்கு ?

Facebook link 

மதிப்பீடு

விளக்கம்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உடைய மகள் கதீஜா இந்தியாவிற்குள் மட்டும் புர்கா அணிந்து இருப்பதாகவும், வெளிநாட்டில் மார்டன் உடையில் புர்கா இல்லாமல் இருப்பதாகவும் இரு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது.

இந்த புகைப்படம் கடந்த 2020-ம் ஆண்டில் வைரல் செய்யப்பட்டது. தற்போது நாடு முழுவதும் புர்கா விவகாரம் பேசப்பட்டு வருவதால் அந்த புகைப்படம் மீண்டும் பகிரப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

சில ஆண்டுகளுக்கு முன்பாக ஏ.ஆர்.ரகுமான் குடும்பத்தில் அவரின் மகள் கதீஜா புர்கா அணிவது பேசு பொருளானது. 2019-ல் ஏ.ஆர்.ரகுமான் ட்விட்டரில், நீதா அம்பானி உடன் தனது மகள் கதீஜா புர்கா அணிந்தும், அவரின் மனைவி மற்றும் மற்றொரு மகள் புர்கா அணியாமல் இடம்பெற்ற புகைப்படத்தை பதிவிட்டு தேர்வு செய்ய சுதந்திரம் என்ற ஹாஷ்டாக் உடன் பதிவிட்டு இருந்தார்.

Twitter link 

தற்போது நாட்டில் எழுந்த பள்ளி , கல்லூரி மாணவிகள் புர்கா அணிவது தொடர்பான விவகாரத்திலும் ஏ.ஆர்.ரகுமான் குடும்பத்தின் இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

2020-ல் பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், எனக்கு ஏ.ஆர்.ரகுமான் மகளை பார்க்கும் போது மூச்சுத் திணறலே ஏற்படும். கலாச்சாரம் வாய்ந்த, படித்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் கூட சுலபமாக மூளைச் சலவை செய்யப்பட்டுவிடுவது எனக்குக் கவலை அளிக்கிறது ” என ஏ.ஆர்.ரகுமான் மகள் புர்காவில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by 786 Khatija Rahman (@khatija.rahman)

Instagram link 

இதற்கு ஏ.ஆர்.ரகுமான் மகள் கதீஜா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலடி கொடுத்தது ஊடகங்கள் வரையில் வெளியாகி பேசப்பட்டது. இதையடுத்து, ஏ.ஆர்.ரகுமான் மகள் கதீஜா இந்தியாவில் புர்கா உடனும், வெளிநாட்டில் மார்டன் உடையில் இருப்பதாகவும் இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு இருக்கிறது.

அந்த புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் தன் ட்விட்டர் பக்கத்தில் இப்புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.

Twitter link| Archive link 

எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், இந்தியா விசா பெறுவதற்காக நியூயார்க் இந்தியத் தூதரகம் வெளியே அமர்ந்து இருப்பதாக 2013-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

தஸ்லிமா நஸ்ரின் கதீஜாவை விமர்சித்த போது வெளியான செய்திகளில் கதீஜா புர்கா அணிந்த புகைப்படம் மற்றும் தஸ்லிமா நஸ்ரினின் இப்புகைப்படமும் இணைத்து செய்திகளில் வெளியாகி உள்ளது. ஆகையால், கதீஜா தான் வெளிநாட்டில் மார்டன் உடையில் இருப்பதாக தவறாக தஸ்லிமா நஸ்ரினின் புகைப்படத்தை பரப்பி வருகிறார்கள்.

முடிவு : 

நம் தேடலில், ஏ.ஆர்.ரகுமான் மகள் கதீஜா இந்தியாவில் மட்டும் புர்கா அணிவதாகவும், வெளிநாட்டில் மார்டன் உடையில் இருப்பதாகவும் பரவும் புகைப்படம் தவறானது. அந்த புகைப்படத்தில் இருப்பது கதீஜா அல்ல, அவரை விமர்சித்த எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader