ராசி, நட்சத்திரம் மூலம் இயற்கை மழை உருவாக்கிய விவசாயி எனத் தவறானச் செய்தி வெளியிட்ட கலாட்டா மீடியா!
பரவிய செய்தி
நம்மளே இயற்கையான மழைய உருவாக்க முடியும்..! – சாதனை படத்து காட்டிய விவசாயி..!
மதிப்பீடு
விளக்கம்
‘கலாட்டா மீடியா’ 2023, டிசம்பர் 19ம் தேதி ‘இயற்கையா மழை பெய்ய வைக்க முடியும். ராசி, நட்சத்திரம் மூலம் விவசாயி சாதனை’ என வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளது. சுமார் 17 லட்சம் பேர் அதனை பார்த்துள்ளனர்.
அதில், ’என்னது இயற்கையான மழையை உருவாக்க முடியுமா? இது புதுசா இருக்கே. 12 ராசிகளுக்கான 27 நட்சத்திரங்களைக் கொண்டு வேற லெவல் சம்பவம் செய்த விவசாயி. இயற்கையான மழையை அந்த விவசாயி எப்படி உருவாக்குகிறார் என்பதையும் அதற்கும் ராசிகளுக்கும் என்ன சம்பந்தம் என்பதைப் பற்றி இந்த வீடியோவில் விரிவாகப் பார்ப்போம்’ எனக் கூறியபடி அந்த வீடியோ தொடங்குகிறது.
மேலும், ‘கரூரில் வசிக்கும் இயற்கை விவசாயி செல்லமுத்து தனது வீட்டு பக்கத்தில் உள்ள வேலமரத்தி கிளைகளில் பிளாஸ்டிக்களை அமைத்துள்ளார். எதற்கு என்றால் மரம் வளர்த்தால் மழை பெய்யும் எனச் சொல்வார்கள் இல்லையா? அதை நான் உண்மையாக்கிக் காட்டுகிறேன் என்பது போல வேற லெவலில் சம்பவம் செய்துள்ளார்.
அது மட்டும் இல்லாமல் மரத்தின் மேற்கு பகுதியில் சென்சார் அமைத்துள்ளார். மரக் கிளைகளில் உள்ள பிளாஸ்டிக் குழாய்கள் தண்ணீர் தொட்டியுடன் இணைக்கப்பட்டுள்ளது. சென்சாரை கடந்ததும் மரக்கிளைகளில் இருந்து ஆட்டோமேடிக்கா தண்ணீர் வந்துள்ளது’ என அந்த வீடியோவின் பின்னணி குரலில் கூறப்படுகிறது. மேலும் சென்சார் மூலமாக அந்த பைப்பில் தண்ணீர் வருவதாக விவசாயி கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மை என்ன ?
ஒருவர் குழாய் மூலம் மரத்தின் கிளைகளில் இருந்து தண்ணீர் வர வைப்பது எப்படி இயற்கையான மழையாகும்? இந்த அடிப்படையே தவறாக உள்ளது. எனவே அந்த வீடியோவில் கூறப்பட்ட கரூர் விவசாயி செல்லமுத்து குறித்து இணையத்தில் தேடினோம்.
செல்லமுத்து அவரது தோட்டத்தில் உள்ள மழை பெய்யும் மரம் குறித்துப் பேசிய வீடியோ ஒன்று 2023, டிசம்பர் 18ம் தேதி ’AMN VIBE’ என்னும் யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
அதில், ”நாங்கள் இயற்கை விவசாயம் செய்து வருகிறோம். இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதற்காக நாம ஒரு விழிப்புணர்வா நம்பத் தோட்டத்தில் மரத்தடியில் போய் நின்றால் மழை பெய்வது போல் Artificial -ஆக (செயற்கையாக) செய்துள்ளோம். கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், மற்ற மாநிலங்களில் இருந்து விவசாயிகள் எல்லாம் வருகிறார்கள். இங்கு இயற்கை விவசாயம் தொடர்பாகப் பலவிதமான பயிற்சிகள் நடைபெறுகிறது” என்று கூறுகிறார்.
மேற்கொண்டு, “மழை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகப் பேருந்துகளில் மரம் வைத்தால் மழை பெறலாம் என எழுதி வைத்துள்ளார்கள். எழுதி வைத்துள்ளதால் அதனைப் படித்துவிட்டு அப்படியே விட்டு விடலாம். ஆனால், நமது இடத்தில் உள்ள மரத்தில் Artificial -ஆக (செயற்கையாக) மழை பெய்வது போல் செய்திருப்பதால் மாணவர்கள் மற்றும் இதனைப் பார்ப்பவர்கள் மனதில் நமது ஊரிலும் மரம் வைக்கலாம் என்கிற எண்ணம் உருவாகத்தான் இந்த மாதிரி ஏற்பாடு செய்துள்ளோம். விழிப்புணர்விற்காகத் தான் செய்துள்ளோம்” எனக் கூறியுள்ளார்.
இதில் இருந்து இது மழை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தச் செயற்கையாகச் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது. இதற்கும் ராசி, நட்சத்திரங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
கலாட்டா மீடியா பதிவிட்டுள்ள வீடியோவில் பைப், சென்சார் பற்றியெல்லாம் சொல்லி விட்டு ‘நம்மளே இயற்கையான மழைய உருவாக்க முடியும்’ என அடிப்படை சிந்தனை கூட இல்லாமல், செயற்கைக்கும் இயற்கைக்கும் வித்தியாசம் கூட தெரியாமல் செய்தி வெளியிட்டுள்ளது.
முடிவு :
இயற்கையாக நாமே மழையை உருவாக்க முடியும் எனக் கலாட்டா மீடியா வெளியிட்ட செய்தி தவறானது. அது மழை குறித்து விழிப்புணர்வு உருவாக்கச் செய்யப்பட்ட செயற்கை மழை பொழிவு.