அயோத்தி ராமர் கோவிலின் சிற்ப வேலைபாடுகள் எனப் பரவும் வீடியோ.. உண்மை என்ன ?

பரவிய செய்தி
அயோத்தியில் உலகமமே வியக்கும் சிறப்பு மிக்க பிரபு ஸ்ரீராமர் கோயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் சிற்ப வேலை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.
மதிப்பீடு
விளக்கம்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அயோத்தி ராமர் கோவிலின் சிற்ப வேலைகள் முடிவடைந்து விட்டதாக கோவில் ஒன்றின் சிற்ப வேலைபாடுகளை காண்பிக்கும் 2.30 நிமிட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் இந்திய அளவில் பரவி வருகிறது.
உண்மை என்ன ?
வீடியோவில் இருந்து ஸ்க்ரீன்சார்ட்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” 2021 ஜூன் 25-ம் தேதி யூடியூப் சேனல் ஒன்றில் சூலி ஜெயின் கோவில் எனும் தலைப்புடன் 3.55 நிமிடங்கள் கொண்ட இதே வீடியோ பதிவாகி இருக்கிறது.
குஜராத் மாநிலத்தின் தங்கதாரா நகரில் இருந்து ஹல்வாட் நோக்கி 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது சூலி ஜெயில் கோவில். அதன் சிற்ப வேலைபாடுகள் குறித்தும், கோவில் குறித்தும் பல வீடியோக்கள் யூடியூபில் பதிவாகி இருக்கிறது.
2021 நவம்பர் 5-ம் தேதி வெளியான பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தியில், ” ராமர் கோவிலின் அடித்தளக் கட்டுமானப் பணிகள் நவம்பரில் முடிவடையும். 2025-ல் கோவில் பணிகள் முழுமையாக நிறைவடையும் என்றாலும் கூட 2023 டிசம்பரில் இருந்து மக்கள் வழிபாடு தொடங்கும் என விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் கோபால் தெரிவித்துள்ளதாக ” இடம்பெற்றுள்ளது.
முடிவு :
நம் தேடலில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவிலின் சிற்ப வேலைபாடுகள் எனப் பரவும் வீடியோ குஜராத் சூலி ஜெயின் கோவிலைச் சேர்ந்தது என்றும், ராமர் கோவிலின் பணிகள் இன்னும் முடிவடையவில்லை என்பதையும் அறிய முடிகிறது.