அயோத்தியாவில் பழமையான ராமர், சீதா சிலைகள் கிடைத்தனவா ?
பரவிய செய்தி
அயோத்தியாவில் தோண்டும் போது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான சிலை கண்டுபிடிப்பு.
மதிப்பீடு
விளக்கம்
அயோத்தியா நகரத்தில் ராமர் கோவில் கட்டும் பணிகள் துவங்கிய நிலையில் நிலத்தைத் தோண்டும் பொழுது பழமையான ராமர் மற்றும் சீதா சிலைகள் கிடைத்ததாக இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் இந்திய அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இப்புகைப்படத்தை ரிவர்ஜ் இமேஜ் சேர்ச் செய்கையில், The analyst எனும் இணையதளத்தில் 2019 ஜனவரியில் வெளியிடப்பட்ட கட்டுரையில் இப்புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது. இணையதளத்தில் ஹிந்தி மொழியில் இருப்பதை மொழி மாற்றம் செய்து பார்க்கையில் ஜார்கண்ட் மாநிலத்தின் ஜிலிங்கா பகுதியில் பழமையான ராமர் மற்றும் சீதா சிலைகள் கண்டெடுக்கப்பட்டதாக வெளியாகி இருக்கிறது.
2019 ஜனவரி மாதம் ஜார்கண்ட்டின் குந்தி மாவட்டத்தில் உள்ள ஜிலிங்கா கிராமத்தில் மக்களால் கண்டெடுக்கப்பட்ட ராமர் மற்றும் சீதா சிலைகளே தற்போது அயோத்தியாவில் கிடைத்த சிலைகள் என பரப்பப்பட்டு வருகிறது. இந்த சிலைகள் உடன் நந்தி உள்ளிட்ட பிற சிலைகளும் கிடைத்துள்ளதாக அந்த இணையதளத்தில் புகைப்படத்துடன் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : அயோத்தியில் கிடைத்த புத்த சிலைகள் என பரப்பப்படும் புகைப்படங்களின் உண்மைத்தன்மை !
அயோத்தியாவில் ராமர் கோவில் கட்டும் பணிகள் துவங்கியதில் இருந்து சிவலிங்கம் கிடைத்ததாக, புத்தர் சிலைகள் கிடைத்ததாக பல்வேறு தவறான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து, ராமர் மற்றும் சீதா சிலைகள் கிடைத்ததாகவும் பரப்பி வருகிறார்கள்.
மேலும் படிக்க : அயோத்தியில் கிடைத்த 5 அடி சிவலிங்கத்தின் புகைப்படமா ?
முடிவு :
நம்முடைய தேடலில், அயோத்தியில் கிடைத்ததாக பகிரப்பட்டு வரும் சிலைகளின் புகைப்படம் 2019-ல் ஜார்கண்ட் மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்டசிலைகளின் புகைப்படம் எனத் தெளிவாகிறது.