அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர் பெண்ணுடன் இருப்பதாகப் பரப்பப்படும் பொய்யான படம் !
பரவிய செய்தி
அயோத்தி கோயில் பூசாரி!
மதிப்பீடு
விளக்கம்
அயோத்தி ராமர் திருக்கோவிலுக்கு அர்ச்சகர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மோஹித் பாண்டே என்பவர் ஒரு பெண்ணுடன் இருக்கிறார் என ஆபாச புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் திமுக ஆதரவாளர்களால் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன ?
பரவக் கூடிய படத்தினை முதலில் குஜராத் மாநிலம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹிதேந்திர பித்தாடியா (Hitendra Pithadiya) என்பவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஹிதேந்திர பித்தாடியா பதிவிட்டுள்ள படத்தில் இருப்பது மோஹித் பாண்டே கிடையாது என பாஜகவைச் சேர்ந்த வைபவ் மக்வானா என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் அகமதாபாத் காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவினர் ஹிதேந்திர பித்தாடியாவை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக PTI (Press Trust of India) தகவலின்படி ‘தி பிரிண்ட்’ இணையதளத்தில் வெளியான செய்தியில், மேற்கொண்டு விசாரணை நடந்து வருவதாக சைபர் கிரைம் பிரிவின் துணை காவல் ஆணையர் அஜித் ராஜன் கூறியுள்ளார்.
ராமர் கோயிலுக்கு அர்ச்சகராக நியமிக்கப்பட்ட மோஹித் பாண்டே சாயலில் உள்ள ஒருவரது ஆபாசப் படத்தினை ஹிதேந்திர பித்தாடியா டிவிட்டரில் பதிவு செய்ததாக வைபவ் மக்வானா புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கையும் நடந்துள்ளது.
மேலும் இது தொடர்பாக குஜராத் மொழியில் இயங்கக்கூடிய ‘Gujarati midday’ என்னும் தளத்தில் வெளியான செய்தியிலும், அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர் பற்றி ஹிதேந்திர பித்தாடியா தவறான படத்தினை பதிவிட்டதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. ‘இந்தியா டுடே’ இணையதளத்திலும் இது குறித்த செய்தி வெளியாகியுள்ளது.
இவற்றில் இருந்து பரவக் கூடிய படத்தில் இருப்பது அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர் மோஹித் பாண்டே இல்லை என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. இந்த பொய் செய்தியை முதலில் பகிர்ந்தவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
முடிவு :
நம் தேடலில், அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர் பெண் ஒருவருடன் இருப்பதாகப் பரவும் ஆபாச படம் குறித்த தகவல் உண்மை அல்ல. இந்த பொய் செய்தி பதிவிட்டது தொடர்பாக ஹிதேந்திர பித்தாடியா என்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை அறிய முடிகிறது.