எம்பி கனிமொழி அயோத்தி ராமர் கோவிலுக்கு 613 கிலோ மணியை அனுப்பியதாக ஜீ நியூஸ் வெளியிட்ட பொய் செய்தி!

பரவிய செய்தி

ஒரு பக்கம் சனாதன கலாச்சாரத்தை சபிக்கும் திமுக, மறுபுறம் 613 கிலோ மணியை அனுப்பிய கனிமொழி குடும்பம். தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்திலிருந்து, 613 கிலோ எடையுள்ள ஒரு மணி, அயோத்தியை அடைந்துள்ளது. இந்த மணி அஷ்டதத்துகளால் ஆனது. இந்த மணியை தமிழக எம்.பி.யான கனிமொழியின் குடும்ப உறுப்பினர்கள் தான் அனுப்பி வைத்துள்ளனர். அதில் அவரது பெயரும் எழுதப்பட்டுள்ளது. இந்த மணியின் சிறப்பை கவனித்தால், அது ஒலிக்கும் போது, ​​ஓம் என்ற சத்தம் வெடிப்பதைக் காணலாம்.  – ஜீ நியூஸ் ஹிந்தி

Article Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

அயோத்தி இராமர் கோவில் வருகின்ற ஜனவரி 22 அன்று பிரமாண்டமாக திறக்கப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி மற்றும் அவரது குடும்பத்தினர் அயோத்தி ராமர் கோவிலுக்கு 613 கிலோ எடையுள்ள மணியை வழங்கியுள்ளனர் என்று கூறி ஜீ நியூஸ் ஹிந்தி கடந்த டிசம்பர் 29 அன்று செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை பலரும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.

இதே போன்று Lokmat ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியிலும், “சனாதன தர்மம் கடந்த சில ஆண்டுகளாக திமுக தலைவர்களால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் ராமர் கோவிலுக்கு திமுக தலைவர் கனிமொழியின் குடும்பத்தினர் 613 கிலோ எடையுள்ள மணியை பரிசாக வழங்கியுள்ளனர். அஷ்டதாதுவால் ஆன இந்த மணியில் ஜெய் ஸ்ரீராம் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.

எட்டு உலோகங்களைப் பயன்படுத்தி இந்த மணி தயாரிக்கப்படுகிறது. இந்த மணியை தமிழக எம்பி கனிமொழியின் குடும்பத்தினர் அனுப்பி வைத்துள்ளனர். அதில் அவரது பெயரும் எழுதப்பட்டுள்ளது. மேலும், இந்த மணியை அடிக்கும்போது அதிலிருந்து ஓம் போன்ற சத்தம் கேட்கும் என்பது இதன் சிறப்பு.” என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளனர்.

உண்மை என்ன?

பரவி வரும் மணியின் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இதே காட்சிகளுடன் கொண்ட வீடியோ ஒன்றை டிசம்பர் 28 அன்று ANI ஊடகம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அதில், “அயோத்தியின் ராமர் கோயிலில் நிறுவப்படவுள்ள 600 கிலோ எடை கொண்ட மணி குறித்தக் காட்சிகள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதே போன்று கடந்த ஜனவரி 02 அன்று இந்தியா டுடே ஊடகமும் தனது யூடியூப் பக்கத்தில் இந்த கோவில் மணி குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. மணியில் எழுதப்பட்டிருந்த பெயர்களை உன்னிப்பாகக் கவனித்ததில், பி.கனிமொழி, பி.லோகேஷ், மகாலட்சுமி, குமரன், வங்கம் அமர்நாத், வெங்கடேஷ் நாகமணி ஆகிய பெயர்கள் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டிருந்தன. மேலும் மணியின் மேல் புறத்தில், SPE Group TN, புகழேந்தி மற்றும் மணிமேகலை என்ற பெயர்கள் பொறிக்கப்பட்டிருப்பதையும் காண முடிந்தது. மேலும் வீடியோவில், இந்த மணி தமிழ்நாட்டிலிருந்து வந்துள்ளது என்று ஊடகவியலாளர் கூறுவதையும் காண முடிகிறது.

Business Today வெளியிட்டுள்ள செய்தியிலும் இந்த மணி தமிழ்நாட்டிலிருந்து வந்துள்ளது என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே மணியில் குறிப்பிடப்பட்டுள்ள SPE குழுமம் குறித்து தேடியதில், Zauba Corp இணையதளத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த SPE Realty Private Limited குழுமத்தின் இயக்குநர்கள் சரவணன் புகழேந்தி மற்றும் லோகேஷ் புகழேந்தி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த மணி இவர்கள் பெயரில் தான் அனுப்பப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.

மேலும் ‘ஜெய் ஸ்ரீராம்’ பொறிக்கப்பட்ட 613 கிலோ எடையுள்ள இதேபோன்ற மணி குறித்து The Hindu, கடந்த 2020 செப்டம்பரில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், “அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்காக நாகர்கோவிலில் செய்யப்பட 613 கிலோ எடையுள்ள மணி, அண்ணாநகருக்கு திங்கள்கிழமை கொண்டு வரப்பட்டது. NGO Legal Rights Council நிதியுதவியுடன், செப்டம்பர் 17 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மணி தனது பயணத்தைத் தொடங்கியது.” என்று குறிப்பிடப்பட்டிருப்பதையும் காண முடிந்தது. 

இதன் மூலம் அயோத்தி கோவிலுக்கு பல மணிகள் தமிழ்நாட்டிலிருந்து தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன என்பதை அறிய முடிகிறது. மேலும் திமுக தலைவர் கனிமொழியால் மணி எதுவும் அனுப்பப்பட்டுள்ளதா என அறிய அவரது அலுவலகத்தை தொடர்பு கொண்டோம். அவர்கள் “இது போன்று எதுவும் அவரது குடும்பத்தினரிடம் இருந்து அனுப்பப்படவில்லை” என்று உறுதி செய்தனர்.

மேலும் படிக்க: திருப்பதி பெருமாள் சிலையைப் பொம்மை என்று எம்.பி கனிமொழி கூறியதாகப் பரவும் பொய் !

இதற்கு முன்பும் திமுக எம்பி கனிமொழி குறித்து பல செய்திகள் தவறாகப் பரவின. அது குறித்தும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரை வெளியிட்டிருக்கிறோம்.

மேலும் படிக்க: மணிப்பூர் சென்ற எதிர்க்கட்சியினரிடம் ‘மோடி எங்களை பார்த்துக் கொள்வார்’ என மெய்தியினப் பெண் கூறியதாகப் பரவும் பொய் !

முடிவு:

நம் தேடலில், அயோத்தி ராமர் கோவிலுக்கு 613 கிலோ எடையுள்ள மணியை அனுப்பிய திமுக எம்பி கனிமொழி எனப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader