This article is from Nov 07, 2019

“அயோத்தியா” தீர்ப்பிற்காக புதிய விதிகள் விதிக்கப்பட்டுள்ளதா ?| ஃபார்வர்டு தகவல்!

பரவிய செய்தி

நவம்பர் 10-13 வெளியூர் பயணத்தை தவிர்க்கப்பாருங்க. வீட்டில் இருக்கவங்கட்டயும் சொல்லுங்க. 13 ஆம் தேதி அயோத்தி தீர்ப்பு வெளியாகிறது.10 ஆம் தேதியில் இருந்து போலீஸ் அலர்ட் பண்ணி G.O release ஆகியிருக்கு. “புதிய விதிகள் நாளை முதல் பொருந்தும் ”

மதிப்பீடு

விளக்கம்

அயோத்தியா ராமர் கோவில்-பாபர் மசூதி வழக்கில் தீர்வு வெளியாக உள்ளதால் மக்களுக்கு எச்சரிக்கை தகவல் ஒன்று ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிவேகமாக பரவி வருகிறது.

Facebook link | archived link  

அதன்படி, பொது மக்களின் அழைப்புகள், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் கண்காணிக்கப்படும், உங்களின் தனிப்பட்ட எலெக்ட்ரானிக் சாதனங்கள் அமைச்சக அமைப்புடன் இணைக்கப்பட்டு இருக்கும் என கூறப்பட்டு உள்ளது. மேலும், அரசியல் மற்றும் மதம் சார்ந்து தவறான தகவல்கள், வீடியோக்கள் வெளியிட்டால் காவல்துறை கைது செய்யும் என்ற எச்சரிக்கைகளும் இடம்பெற்று உள்ளன. இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய தீர்மானித்தோம்.

உண்மை என்ன ? 

அயோத்தியா வழக்கில் தீர்ப்பு வெளியாவதால் பிற மாநிலங்களில் உள்ள பொது மக்கள், சமூக வலைதள பயன்பாடுகளுக்கு புதிய விதிகள் விதிக்கப்பட்டு இருப்பதாக முதன்மை செய்தி ஊடகங்களில் செய்திகள் வெளியாகவில்லை.

நவம்பர் 5-ம் தேதி இந்தியா டுடே செய்தி இணையதளத்தில், ” அயோத்தியா வழக்கு தொடர்பாக , சமூக ஊடக தளங்களில் மதம், சமூகம், கடவுள் , பிரபல நபர்கள் ஆகியோருக்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என அயோத்தியா மாவட்ட நீதிபதி அனுஜ் குமார் உத்தரவிட்டு உள்ளார். மேலும், ராம் ஜன்மபூமி-பாபர் மசூதி விவகாரம் தொடர்பாக எந்தவொரு நிகழ்ச்சிகள், கூட்டங்களை நடத்த மக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது ” என வெளியாகி இருக்கிறது.


 ANI Twitter archived link 

ஏ.என்.ஐ வெளியிட்ட ட்விட்டரில், ” அயோத்தியா மாவட்ட நீதிபதி அனுஜ் குமார், மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் என்பதால் அயோத்தியா நில விவகாரம் தொடர்பாக சமூக வலைதள செய்திகள் மற்றும் சுவரொட்டிகளுக்கு தடை விதித்து உள்ளார். இந்த தடை 2019 டிசம்பர் 28-ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் என்றுள்ளார் ” என வெளியாகி இருக்கிறது.

Twitter archived link  

இதற்கு மாறாக,  அயோத்தியா வழக்கிற்காக புதிய விதிகள் விதிக்கப்பட்டு இருப்பதாக ஃபார்வர்டு செய்யப்படும் தகவல்கள் இந்திய அளவில் வைரலாகி வருகின்றன. இதற்கு அயோத்தியா காவல்துறை ட்விட்டர் மூலம் ஃபார்வர்டு செய்யப்படும் தகவல் தவறானது என உறுதி செய்துள்ளார்.

முடிவு : 

நம்முடைய தேடலில் இருந்து, அயோத்தியா வழக்கின் காரணமாக சமூக ஊடகங்களில் மதம், கடவுள் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஊடகங்களில் விவாதங்களுக்கு, மக்களின் கூட்டங்களுக்கு தடை, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இவை அந்த மாவட்ட பகுதியில் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், சமூக வலைதளங்களை காவல்துறை கண்காணிக்கிறார்கள், உங்களின் எலெக்ட்ரானிக் சாதனம் அமைச்சகம் உடன் இணைக்கப்பட்டு உள்ளது என்பதெல்லாம் தவறான தகவல். ஃபார்வர்டு செய்யப்படும் விதிகள் போன்று ஏதும் விதிக்கப்படவில்லை. இது மக்களை எச்சரிக்கை செய்ய யாரோ பரப்பிய தவறான ஃபார்வர்டு செய்தியே.

நீண்டகாலமாக நடைபெற்று வந்த முக்கிய வழக்கு என்பதால் அப்பகுதியில் கலவரத்தை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. ஆனால், அதனை இந்தியா முழுவதும் போன்று மாற்றி புதிய விதிகளை எல்லாம் இணைத்து பரப்பி வருகின்றனர்.

எனினும், அயோத்தியா விவகாரம் தொடர்பாக தவறான கருத்துக்களை பகிராமல் இருக்க அனைவருக்கும் எடுத்துரையுங்கள்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader