CAA போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிஷா மற்றும் லதீடா முகநூல் பதிவுகள் உண்மையா ?
பரவிய செய்தி
யாக்கூப் மேமன் என்னை மன்னிக்கவும். இந்த பாசிச நாட்டில் உதவ முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். என்னால் ஒரு பொம்மை போல் வருத்தம் மட்டுமே தெரிவிக்க முடியும் .
மதிப்பீடு
விளக்கம்
டெல்லியில் இந்திய குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் துவங்கிய சமயத்தில், பெண்கள் சிலர் போலீசின் தடியடியில் இருந்து ஆண் நண்பரை காப்பாற்றும் காட்சி இந்திய அளவில் வைரலாக பிறகு ஆயிஷா ரேனா மற்றும் லதீடா ஆகிய இருவரும் ஜாமியா பல்கலைக்கழக போராட்டத்தின் முகமாக மாறினர். ஆயிஷா உடைய புகைப்படங்கள் மற்றும் கார்ட்டூன்கள் இந்திய அளவில் பகிரப்பட்டு வந்தன.
மேலும் படிக்க : ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாநிலத்தில் போராட்டத்தில் இருக்கும் மாணவி| ஃபேஸ்புக் வதந்தி
இதற்கிடையில், ஆயிஷா மற்றும் லதீடா ஆகிய இருவரும் வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு மாநிலங்களில் நடைபெற்ற போராட்டங்களில் கலந்து கொண்டதாக டெல்லியில் இருந்த புகைப்படங்களையே தவறான பரப்பி இருந்தனர்.
அது தொடர்பான நாம் கட்டுரை வெளியிட்ட போது, ” 2015-ல் ஆயிஷா ரேனா தன் முகநூல் பக்கத்தில் மும்பை வெடிகுண்டு தாக்குதல் குற்றவாளியான யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்ட சமயத்தில், யாகூப் மேமன் என்னை மன்னிக்கவும். இந்த பாசிச நாட்டில் உதவ முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். என்னால் ஒரு பொம்மை போல் வருத்தம் மட்டுமே தெரிவிக்க முடியும் ” என பதிவிட்ட பதிவை பகிர்ந்து, இது குறித்து கூறுமாறு தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது.
ஆயிஷா ரேனா உடைய பழைய முகநூல் பதிவு நீக்கப்பட்டு இருந்தாலும், அந்த பதிவின் archive link சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கேரளாவைச் சேர்ந்த Aysha Reena ஜாமியா பல்கலைக்கழத்தில் வரலாற்று பிரிவில் முதுகலைப் பட்டம் பயின்று வருகிறார். Aysha Reena N என்ற தன் முகநூலில் யாகூப் மேமன் குறித்து வெளியிட்ட கருத்தை ஆயிஷா மறுக்கவில்லை.
ஆயிஷா அளித்த பேட்டியில், ” நான் ஒரு இந்தியர் , எனது அரசியலமைப்பானது எனக்கு கருத்துச் சுதந்திரத்தை அளிக்கிறது. ஒரு சம்பவம் நிகழும் போது , மக்கள் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருக்கலாம். யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டபோது , பல ஆர்வலர்கள் மற்றும் பலரும் தங்களின் கருத்துக்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளை பதிவு செய்து இருந்தனர் , நான் மட்டும் அல்ல. ஒரு வரலாற்று மாணவராக , அதைப் பற்றி எனக்கு ஒரு கருத்து இருந்தது, எனது கருத்தை மிக தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. எனது அரசியலமைப்பில் ஒவ்வொரு நபருக்கும் கருத்தை வெளிப்படுத்த உரிமை உண்டு , அந்த உரிமை இப்போது கேள்விக்குள்ளாக்கப்படுகிறது ” எனத் தெரிவித்து உள்ளார் என நியூஸ் மினிட் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.
மேலும், ” என்னுடைய பழைய பதிவுகளை பயன்படுத்தி தவறான பிரச்சாரங்கள் மூலம் தற்பொழுது உள்ள பிரச்சனையை திசை திருப்புகிறார்கள். அவர்களை கேள்வி கேட்கும் மக்கள் மீது வெறுப்பு பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விடுவது வழக்கமான சங் தந்திரமாகும் , இதில் பிரபலங்கள் கூட தப்பவில்லை ” எனக் கூறி இருக்கிறார்.
இதேபோல், ஆயிஷாவின் கணவரும், பத்திரிகை துறையில் பணியாற்றி வரும் Afsal Rahman CA 2018-ல் தன் முகநூல் பக்கத்தில், ” அப்சல் குரு , யாகூப் மேமன் … ஞாபகத்தில் வைத்தல் கடமையாகிறது ” எனப் பதிவிட்ட கருத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பதிவை அவர் நீக்கி உள்ளார். கடந்த 2018-ம் ஆண்டில் தான் அப்சல் ரஹ்மானுக்கும், ஆயிஷாவிற்கும் திருமணம் நிகந்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த மற்றோரு பெண்ணான லதீடா சஹாலூன்ஸ் என்பவரும் சர்ச்சைக்குள் சிக்காமல் இல்லை. அவருக்கு கண்டனம் தெரிவித்து அவரின் பல முகநூல் பதிவுகள் வைரல் செய்யப்பட்டு வருகின்றன.
அதில், ” ஒன்றாக ஹிஜாப் அணிந்து இருக்கும் பெண்கள் கற்கள் கொண்டு எறிவதும், கையில் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஹிஜாப்பின் சக்தியை குறைத்து மதிப்பிடாதீர்கள் ” எனப் 2017-ல் பதிவிட்டு இருந்தார். இதுபோன்ற புகைப்படங்கள் மற்றும் மதச்சார்பின்மை கோஷம் குறித்த கருத்துக்கள் அனைத்தும் தற்பொழுது பெரிதாய் பேசப்பட்டு வருகிறது.
இதற்கு பதில் அளித்த லதீடா , ” நான் அதை பதிவிடும் போது எனக்கு 19 வயது. பெண்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என்று நம்பப்படும் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவள் . அந்த படங்கள் வலிமையையும் சக்தியையும் குறிக்கும் . எனவே அவற்றை நான் பகிர்ந்தேன் . ஆண்கள் தங்களின் ஹீரோக்கள் துப்பாக்கிகளை வைத்து இருக்கும் படங்களை பகிர்ந்து கொள்வதில்லையா ? ” என கேட்டு இருந்தார்.
இஸ்லாமிய அமைப்பான SIO-வில் லதீடா மற்றும் அவரின் கணவர் இருப்பதாக சில கருத்துக்கள் முகநூலில் பகிரப்பட்டு வருகின்றன. அதற்கு அளித்த பதிலில், SIO ஒரு இஸ்லாமிய அமைப்பு. ஆனால் நான் அதில் உறுப்பினர் அல்ல, என் கணவர் மட்டுமே. SIO உடனான எனது பணி, முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த எந்தவொரு அமைப்பும் ஒரு சிறுபான்மையினராக முஸ்லீம் சமூகத்தின் அவலநிலை மற்றும் முஸ்லீம் பெண்கள் ” சிறுபான்மையினருக்குள் சிறுபான்மையினர் ” என அவர்கள் எடுக்கும் நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டது ” எனக் கூறியுள்ளார்.
ஆனால், மதச்சார்பின்மை குறித்து கருத்திற்கு சரியான விளக்கம் அளிக்கவில்லை என லதீடா பற்றி இந்தியா டுடேவில் குறிப்பிடப்பட்டு உள்ளது . ஆயிஷா ரேனா மற்றும் லதீடா ஆகியோர் அளித்த பேட்டி மற்றும் தகவல்கள் இந்திய டுடே மற்றும் தி நியூஸ் மினிட் ஆகிய தளங்களில் இருந்து கிடைத்துள்ளன.
நமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வைரலாகும் ஆயிஷா ரேனா மற்றும் லதீடா உடைய பழைய முகநூல் பதிவுகள் அவர்கள் பதிவிட்டதே. அதை அவர்கள் மறுக்கவில்லை, மாறாக விளக்கம் அளித்து உள்ளனர்.